ஆய்வுக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1129; தேதி:– 25 ஜூன் 2014.
N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com
கடவுளுக்கு என்ன மொழி தெரியும்?
நாம், அவருக்கு வேதம் முழங்கும் சம்ஸ்கிருதம் மட்டுமே தெரியும்,
தேவாரம், திவ்யப் பிரபந்தம் முழங்கும் தமிழ் மட்டுமே தெரியும்,
பைபிள் முழங்கும் எபிரேயம் அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும்,
குரான் முழங்கும் அராபியம் மட்டுமே தெரியும்,
சமண நூல் முழங்கும் ப்ராக்ருதம் மட்டுமே தெரியும்,
தம்ம பதம் முழங்கும் பாலி மொழி மட்டுமே தெரியும்,
ஜெண்ட் அவஸ்தா முழங்கும் பாரசீகம் மட்டுமே தெரியும்
ஆதிக்கிரந்தம் முழங்கும் பஞ்சாபி மொழி மட்டுமே தெரியும்———-
என்று நினைத்தால், அது நமது அறியாமைக்கு ஆயிரம் ‘வாட் பல்ப்’ போட்டு வெட்ட வெளிச்சமாக்கியதற்குச் சமம் ஆகும்.
அப்படியானால் அவருக்குத் தெரிந்த மொழி என்ன?
கடவுளுக்கு இரண்டே மொழிகள்தான் தெரியும்; அவற்றின் பெயர் அன்பு, உண்மை = பிரேமையும் சத்தியமும்தான் என்று சாது சந்யாசிகள் பல்லாயிரம் பாடல் பாடி முழங்குகின்றனர்.
இதை நமக்கு நிதர்சனமாகக் காட்டுபவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆவார். அவர் சம்ஸ்கிருதம், தமிழ், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகள் மூலம் இறைவனை வழிபட்டு நமக்கு வழிகாட்டி உள்ளார். மொழிகள் மூலம் சண்டை வேண்டாம். அதிலும் குறிப்பாக “கோவில்களில் இறைவனுக்கு தமிழில் அர்ச்சனையா? சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனையா?”—என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறார்.
இதோ அவரது திருப்புகழே அதற்குச் சான்று:
“சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே” — என்றும்
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மகர் சபாசென – என்றும்
பாடுகிறார். முகமதிய ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததால் ஹிந்துஸ்தானி மொழியில் புழங்கிய சபாஷ், சலாம் முதலிய பல ஹிந்துஸ்தானிச் சொற்கள் அவர்தம் பாடல்களில் பரிமளிக்கின்றன.
நடிக்கும் பிரான் மருகா ! கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தனே — (கந்தர் அலங்காரம் பாடல் 51)
விருதா (பயனற்ற) என்ற சொல் “ அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்துழலும் அடியேனை” என்ற வரியிலும் ஜே என்ற சொல்லை “நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய, சுரர்களேத்திடு வேலா ஜேஜெய” — என்ற திருப்புகழ் வரியிலும் காணலாம்.
குமரபரகுரு சுவாமிகளும் கூட மீனாட்சிப் பிள்ளைதமிழில்
“குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” — என்றும் பாடுகிறார்.
நாம் அன்றாடம் புழங்கும் ஹிந்துஸ்தானி சொற்கள்:
அசல், அந்தஸ்து, அபின், அல்வா, இஸ்திரி, உஷார், குமாஸ்தா, ஜமக்காளம், ஜல்தி, சோதா, தபால், தர்பார், பஞ்சாயத்து,பங்களா, சபாஷ் – இன்னும் பற்பல.
உலகில் எவரும் பிறமொழிக் கலப்பிலாமல் வாழமுடியாது; பேசவும் முடியாது. ஆனால் அது எல்லை மீறிப் போகாதவாறு பாதுகாத்து, மொழியின் தூய்மையைப் போற்றுவதில் தவறில்லை.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!
You must be logged in to post a comment.