ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1201; தேதி 29 ஜூலை 2014.
Part 1 of this article was published yesterday in this blog: swami
கட்டுரையின் முதற் பகுதி நேற்று வெளியானது. அதில் நான் கீழ்கண்ட 19 விஷயங்களைப் பட்டியல் இட்டிருந்தேன்:—
1)மா முதுபார்ப்பான் மறைவழி காட்டிட கண்ணகி கல்யாணம்
2)தெய்வ மால்வரைத் திருமுனி அருள (அகத்தியர், பிராமணர்)
3)தூய மறையோன் பாசண்டச் சாத்தன்
4)தேவந்தி என்னும் பார்ப்பனி
5)வழிகாட்டும் மாமுது மறையோன் (காடுகாண் காதை)
6)கோசிகன் (கௌசிகன்) தூது
7)நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன்
8) வளைந்த யாக்கை மறையோன் தன்னை- யானையிடமிந்து கோவலன் காப்பாற்றிய பிராமணன்
9) கீரிப்பிள்ளை- பார்ப்பனி கதை/ கோவலன் சம்ஸ்கிருதக் கடிதத்தைப் படித்து உதவி
10) பார்ப்பன கோலத்தில் அக்னி பகவான்
11)பிராமணர்களை எரிக்காதே: கண்ணகி உத்தரவு
12)மறை நாஓசை அல்லது மணி நா ஓசை கேளா பாண்டியன்
13)பார்ப்பன கீரந்தை மனைவிக்கு பொற்கைப் பாண்டியன் உதவி
14)வலவைப் பார்ப்பான் பராசரன் வைத்த போட்டி
15)வார்த்திகன்/கார்த்திகை/தட்சிணாமூர்த்தி கதை
16)மாடனுக்கு துலாபாரம்: எடைக்கு எடை தங்கம்!!!
17)வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்…போற்றிக்காமின்
18)சாக்கையர் (பிராமண நடனக் குழு) நடனம்
19)மாடலன் சொற்படி மாபெரும் வேள்வி
பிராமணர்களின் புகழும் சோழ நாட்டின் புகழும் சிலப்பதிகார காவியத்தில் தூக்கலாக இருகிறது. இளங்கோ பெயரில் எழுதியது சோழிய பிராமணனா?
இதோ விளக்கம்:–
1)மா முதுபார்ப்பான் மறைவழி காட்டிட கண்ணகி கல்யாணம்
கண்ணகி திருமணம்: இருவருக்கும் இடையே நடந்தது பால்ய திருமணம்; கண்ணகிக்கு வயது 12, கோவலனுக்கு வயது 16. இருவரும் இந்து முறைப்படி அக்னியை வலம் வந்து தாலி கட்டி பிராமணர்களைக் கொண்டு வேத முறைப்படி நடத்தியதாக இளங்கோ கூறுகிறார். அகநானூற்றில் இரண்டு தமிழர் கல்யாணங்கள் இடம் பெற்றிருப்பதை விரிவாக எழுதியுள்ளேன். அதில் கல்யாணத்தை, பிராமணர் நடத்தினரா இல்லையா என்ற விவரம் இல்லை.
2)தெய்வ மால்வரைத் திருமுனி அருள (அகத்தியர், பிராமணர்):
அகத்தியர் என்னும் பெயர் ரிக்வேதம் முதல் காணப்பட்டாலும் பொதிய மலை அகத்தியர் அவர் அல்ல. ஆனால் அந்த கோத்திரத்தில் வந்த பிராமணர். அவரை இளங்கோ திரு முனி எனப் போற்றுவார்.
3)தூய மறையோன் பாசண்டச் சாத்தன்
கனாத்திறம் உரைத்த காதையிலும் வரந்தரு காதையிலும் சாத்தனார் என்னும் தெய்வத்தையும் அவரை வேண்டிய மாலதி என்பவளையும் பிராமணனாகக் காட்டுகிறார் இளங்கோ. 2000 ஆண்டுகளுக்கு முன் மாலதி, மஹா சாஸ்தா (மாசாத்தன்), மஹா நாயகன் (மாநாய்க்கன்), கோபாலன் (கோவலன்), கண்ணகி (மீனாட்சி) என்னும் சம்ஸ்கிருதப் பெயர்கள் பூம்புகார் நகரில் இருந்ததையும் கவனிக்க வேண்டும்.
4)தேவந்தி என்னும் பார்ப்பனி
மாலதி கதையுடன் வரும் இன்னொரு பார்ப்பனி தேவந்தி. இரு காதைகளிலும் இவளது கதை வருகிறது.
5)வழிகாட்டும் மாமுது மறையோன் (காடுகாண் காதை)
காடுகாண் காதையில் கோவலனுக்கு மதுரைக்குச் செல்ல வழிகாட்டுவதும் ஒரு பார்ப்பனனே. அவர், நிறைய பூதக் கதைகள், மாயா ஜால மந்திரக் கதைகள் எல்லாம் சொல்கிறார். கிரேக்க பூதமும் தமிழ் பூதமும் என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாகக் கொடுத்து இருக்கிறேன்.
6.கோசிகன் (கௌசிகன்) தூது
பிராமணர்கள் மட்டுமே தூது செல்ல முடியும் என்பது தொல்காப்பியமும் வடமொழி நூல்களும் கூறும் மரபு. இங்கு மாதவியின் மன்னிப்புக் கடிதத்தைக் கொண்டுவரும் பிராமணன் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்தவன். புறநானூற்றுப் புலவர்கள் சிலர் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். நாடகத்தில் கோமாளி (விதூஷகன்) வேடம் போடுவதும் பிராமணர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டது. சம்ஸ்கிருத நாடகங்கள் அனைத்திலும் பழைய இந்தி, தமிழ் திரைப்படங்கள் அனைத்திலும் காமெடி நடிகர்கள் உச்சுக் குடுமியுடன் வருவதைக் காணலாம் (புறஞ்சேரி இறுத்த காதை)
7)நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன்
சிலப்பதிகார காவியத்தில் கண்ணகி, கோவலன், செங்குட்டுவன் ஆகிய மூவருக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பவன் மாடலன் என்னும் பார்ப்பனனே. செங்குட்டுவனையே தட்டிக் கேட்கும் உரிமை பெற்றவன். உன் மார்பில் எல்லாம் நரைமுடி தோன்றிவிட்டது. இன்னும் நீ போகும் வழிக்குப் புண்ணியம் தேடவில்லையே என்று மாடலன் சொன்னவுடன் மாபெரும் யாக யக்ஞங்கள் நடத்த செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். இமய மலை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதில் மமதை தலைக்கேறி கண்ணகி சிலையையே மறந்து விடுகிறான். மாடலன், வாழ்க்கை நிலையாமை பற்றிச் சொன்னவுடன் மங்கல நன்னீராட்டுக்கு நாள் குறிக்கிறான்.
கதை முழுவதும் ஒரு இணைப்பு (லிங்க்) கொடுப்பவன் இந்த பிராமணனே!! கோவலன் அம்மா, அப்பா, மாதரி, கவுந்தி அடிகள் இறந்தது எப்படி என்றும் பாண்டிய நாட்டில் புதிய மன்னன் வெற்றிவேற் செழியன் என்ன செய்தான் என்ன என்பதையும் மாடலன் வாய் வழியாக மொழிவார் இளங்கோ.
மூன்று செட்டிப் பெண்கள் மீது நீர் தெளித்து முன்பிறப்பில் நடந்ததைக் கூறி சேர மன்னனை வியக்க வைக்கிறார் இந்த பார்ப்பன மந்திரவாதி!!!
நூறுகிலோ தங்கத்தையும் சேர மன்னன் துலா பாரத்தில் பெறுகிறார்!!!.
இவரது செயல்கள் அடைக்கலக் காதை முதல் கடைசி காதை வரை செல்கிறது!!
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து —- அடைக்கலக் காதை
8) “வளைந்த யாக்கை மறையோன்” தன்னை- யானையிடமிந்து கோவலன் காப்பாற்றிய பிராமணன்
கோவலனுடைய சாதனைகள் , அறச் செயல்கள் அத்தனையையும் விளக்க பல பார்ப்பன கதா பாத்திரங்களைப் படைக்கிறார் இளங்கோ. அடைக்கலக் காதையில் ஒரு கதை வருகிறது. ஒரு பிராமண தாத்தா, ஊன்றுகோலுடன் தானம் வாங்க வருகிறார். அப்போது அவரை மதம் பிடித்த யானை துதிக்கையில் தூக்கி நச்சென்று மிதிக்க இருக்கையில் கோவலன் அந்த யானை மீது ஏறி அதனை அடக்கி பிராமணனைக் கப்பாற்றுகிறார்!!
(தமிழ் திரைப்பட கதாநாயகர்கள், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எல்லாம் தோற்றுப் போகும்!!!)
அதுமட்டுமல்ல. இந்த இடத்தில் அந்த முன் பின் தெரியாத பிராமணக் கிழவனை ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன், உயர் பிறப்பாளன் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார் — அதாவது காப்பாற்றிய கோவலனைப் புகழ்வதற்குப் பதிலாக, காப்பாற்றப்பட்ட கூன் முதுது ஐயரைப் புகழ்கிறார் இளங்கோ!!!!
ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்— அடைக்கலக் காதை
9) கீரிப்பிள்ளை- பார்ப்பனி கதை/ கோவலன் சம்ஸ்கிருதக் கடிதத்தைப் படித்து உதவி
பஞ்ச தந்திரக் கதைகளில் உள்ள கீரிப் பிள்ளை— பார்பனப் பெண் கதை சிலப்பதிகாரத்திலும் உள்ளது. கீரியைக் கொன்ற மனைவியை வெறுத்த பார்ப்பனக் கணவன் வீட்டைவிட்டு வெளியேறுகையில் ஒரு சம்ஸ்கிருத கடிதத்தைக் கொடுத்து விஷயம் அறிந்த ஆளிடம் இதைக் கொடுத்து உய்வடை என்று சொல்லிவிட்டு வட திசை நோக்கிப் பயணமானான். அப்போது அந்தப் பார்ப்பனப் பெண் நடு ரோட்டில் கதறி அழுதாள். நீ போய் அந்த சம்ஸ்கிருத லெட்டரை வாங்கி அவளுக்கு பரிகாரம் செய்து உதவினாய் என்று புகழ்கிறார் இளங்கோ. நாடறிந்த ஒரு கதையில் கோவலனைப் புகுத்தியது சரியா என்பதை நாம் அறிய முடியவில்லை. பஞ்ச தந்திரக் கதைகள் சிலப்பதிகார காலத்துக்கு முந்தியது என்பதே பெரும்பாலோர் கருத்து (அடைக்கலக் காதை).
10) பார்ப்பன கோலத்தில் அக்னி பகவான்
11)பிராமணர்களை எரிக்காதே: கண்ணகி உத்தரவு
ஒரு முலையைத் திருகி மதுரைத் தெருவில் எறிந்து நின்ற கண்னகி முன்னர், அக்னி பகவான் பிராமண கோலத்தில் வந்தார். உடனே பிராமணர்கள், பத்தினிப் பெண்கள், பசுக்கள், வயதானவர்கள், குழந்தைகள், முனிவர்கள் – இவர்களை விட்டுவிட்டு மற்றவர்களை எரிக்கவும் என்று கண்ணகி உத்தரவு இடுகிறாள்! (காண்க:வஞ்சின மாலை)
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை
12)மறை நாஓசை அல்லது மணி நா ஓசை கேளா பாண்டியன்
13)பார்ப்பன கீரந்தை மனைவிக்கு பொற்கைப் பாண்டியன் உதவி
“தென் தமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரை” — என்று இளங்கோவால் புகழப்படும் மதுரையில், புகார் மனு கொடுக்க மக்கள் அடிக்கும் ஆராய்ச்சி மணி ஒலித்ததே இல்லையாம். ஐயர்கள் ஓதும் வேத முழக்கம் மட்டுமே பாண்டிய மன்னன் காதில் தினமும் விழுந்ததாம்! (கட்டுரை காதை)
சங்க இலக்கியத்தில் வேறு ஒரு இடத்தில் பாண்டிய மன்னனைப் புகழ்கையில் மற்ற இடங்களில் மன்னர்கள் கோழி கூவி எழுவார்கள். மதுரை மக்களோ வேத ஒலி கேட்டு எழுந்திருப்பர் என்று பாடுகிறார்.
பொற்கைப் பண்டியன் கதையை தனியாக முன்னரே எழுதி அந்தக் காலத்தில் – மருத்துவ அறுவைச் சிகிச்சை எந்த அளவுக்கு தமிழ் நாட்டில் முன்னேறி இருந்தது என்று விளக்கி இருக்கிறேன். ஆபரேஷன் செய்து பாண்டியனுக்குத் தங்கத்தினால் ஆன கை வைத்தனர் தமிழ் வைத்தியர்கள். இவ்வளவுக்கும் காரணம் ஒரு பார்ப்பனனே.
கீரந்தை என்னும் பார்ப்பனன் வெளி நாடு செல்ல முடிவு செய்த போது அவன் மனைவி பயப்பட்டவுடன் நம் பாண்டியன் பார்த்துக் கொள்வான் என்கிறான். பின்னர் நடந்தது எல்லாம், கதையைப் படித்து அறிக. இந்தக் கதையையும் பார்ப்பனர் புகழ் சேர்க்க, பாண்டியர் புகழ் மணக்க, சேர்த்து இருக்கிறார் இளங்கோ. (கட்டுரை காதை)
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை
14)வலவைப் பார்ப்பான் பராசரன் வைத்த போட்டி
15)வார்த்திகன்/கார்த்திகை/தட்சிணாமூர்த்தி கதை
பராசரன் ஒரு பார்ப்பனன் பிராமணச் சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு வந்து வேடிக்கையாக ஒரு போட்டி வைத்தார். தாய்ப் பால் மணம் மாறா வாயுடைய ஒரு குட்டிப்பயல் வேதம் முழுதும் கட கட என்று சொன்னவுடன் அவர் அசந்தே போனார். பெரும் பொருளைப் பரிசாகவும் கொடுத்தார். பொறாமை கொண்ட ஐயர்கள் மன்னனிடம் பற்றவவைத்தனர். இதெல்லாம் திருட்டுச் சொத்து, புதையல் சொத்து என்று கதை கட்டினர். அந்தப் பையன் பெயர் தட்சிணாமூர்த்தி. அப்பா பெயர் வார்த்திகன், அம்மா பெயர் கார்த்திகா. வார்த்திகனை சிறையில் அடைத்தனர் அதிகாரிகள். கார்த்திகா கதறி அழுதாள். துர்க்கை கோவில் கதவு மூடிக் கொண்டது, திறக்க முடியவில்லை. காரணத்தை அறிந்த மன்னன் வார்த்திகனை விடுதலை செய்து பெரும்பொருள் கொடுத்து மன்னிப்புக் கேட்டான். கோவில் கதவும் திறந்தது.
இங்கும் வலியச் சென்று ஐயர் புகழ் பாடுகிறார் இளங்கோ!! இரண்டாம் நூற்றாண்டு தமிழகத்தில் எத்தனை சம்ஸ்கிருத பெயர்கள் :– வார்த்திகன், கார்த்திகா, தட்சிணா மூர்த்தி (ஆலமர் செல்வன்), பராசரன் Interesting Brahmin Story in Tamil Epic என்ற தலைப்பில் ஜூன் மாதம் ஆங்கிலத்தில் மட்டும் இக்கதையைக் கொடுத்துள்ளேன்.
16)மாடனுக்கு துலாபாரம்: எடைக்கு எடை தங்கம்!!!
19)மாடலன் சொற்படி மாபெரும் வேள்வி
மாடலன் புகழ் தலைப்பு எண் (7) ஏழின் கீழ் கொடுத்து இருக்கிறேன்
17)வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்…போற்றிக்காமின்
செங்குட்டுவன் இமய மலைப் பகுதிக்குச் சென்றவுடன் போட்ட முதல் உத்தரவு: வடதிசையில் வேதங்களைக் காத்து தினமும் ஓம் குண்டங்களில் மூன்று வகைத் தீ எழுப்பும் (தாட்சிணாக்னியம், கார்கபத்யம், ஆஹவனீயம்) பிராமணர்களைப் பாதுபாப்பீராக.
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அறியா தண்பெரு வாழ்க்கை
காற்றூதாளரைப் போற்றிக் காமின் என — (கால் கோட் காதை)
18)சாக்கையர் (பிராமண நடனக் குழு) நடனம்
கேரளத்தில் சம்ஸ்கிருத நாடகத்தையும் நடனத்தையும் கட்டிக் காப்போர் சாக்கையர் என்ற பிராமணப் பிரிவினர் ஆவர். அவர்கள் செங்குட்டுவன் முன்னால் ஒரு அர்த்த நாரீ நடனம் ஆடி, அவனை அசத்தி விட்டனர். உடலில் ஒரு பகுதி சிவன், மற்றொரு பகுதி பார்வதி. அந்தப் பிராமண இளைஞன் ஆடிய ஆட்டத்தில் உடலின் பாதிப் பகுதி மட்டும் அசைந்து ஆடும். உமையம்மை இருக்கும் மறு பாதி அசையா நிற்கும். உலகில் யாரும் செய்ய முடியாத அற்புத நடனம்!!! (நடுநற்காதை)
நான்கு ஜாதிகளில் ஒரு ஜாதியை மட்டும் இளங்கோ தூக்கலாகக் காட்டியது காலத்தின் பிரதிபலிப்பா? இளங்கோவின் ஒரச் சார்பா? இளங்கோ பெயரில் ஐந்தாம் நூற்றாண்டில் இக்காவியத்தை எழுதியது ஒரு பிராமணனா?
வாசகர்களே ! நீங்களே எடை போடுங்கள்!!
Tejaswini Vemburia (@vemburia)
/ July 29, 2014There is one of the most important aspects of life of three varnas omitted. While in Matari’s household Kannaki serves dishes which no poet even Sanskrit poets had described “”ARASARAR PINNOR ARUMARAI MARUNGIN”. i.e., before taking food Kovalan did Anna Suddhi now practiced only by Orthodox Brahmins. Up to the period of Asoka there was only intense theological rivalry but not separate culture as such among Mimamsakas/Jains/Buddhists. It was a practice even in Jataka stories to refer only Brahmins which was followed by Ilango Adikal