கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1266; தேதி 4 செப்டம்பர் 2014
School Days Stories
“உலகம் தட்டை சார்”
பள்ளிக்கூடங்களில் பெரிய கல்வி அதிகாரிகளின் (D E O டி.ஈ.ஓ) சோதனை நாள், அதாவது இன்ஸ்பெக்சன் (Inspection) என்று ஒரு சடங்கு உண்டு. அப்பொழுது பள்ளிக்கூடம் மிகவும் சுத்தமாக இருக்கும். எல்லோரும் நன்றாக உடை உடுத்தி வருவர். யாரும் தாமதமாக வரக்கூடாது என்று ஒரு வாரம் முன்னதாகவே எச்சரித்து விடுவார்கள். ஆசிரியர்களும் இன்ன பாடம்தான் நடத்துவேன் இன்ன கேள்விகள்தான் கேட்பேன் என்று முன்னரே மாணவர்களுக்குச் சொல்லிவிடுவார். எல்லாம் ‘ரிஹர்சல்’ (ஒத்திகை) செய்து பார்த்து விடுவர். அந்த சூழ்நிலயில் நடந்ததுதான் இந்தக் கதை!!
ஒரு புத்திசாலி வத்தியார் இருந்தார். “டேய், பையன்களா, நான் நாளைக்கு டி.ஈ.ஓ (District Educational Officer டிஸ்ட்ரிக்ட் எடுகேஷனல் ஆபீஸர்) வரும் போது பூகோள பாடம் நடத்துவேன். நான் யாரையாவது ஒருவரை பூமி தட்டையா, உருண்டையா என்று கேட்பேன். பதில் மறந்து போனாலும் கவலைப் படாமல் என் மூக்குப் பொடி டப்பாவைப் பாருங்கள்.
இதோ பார், இதுதான். இது என்ன வடிவமோ அதைச் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி தன்னுடைய உருண்டையான மூக்குப் பொடி டப்பாவைக் காட்டினார். பையன்களுக்கு ஒரே மகிழ்ச்சி! எவ்வளவு எளிய கேள்வி! எவ்வளவு சின்ன பதில் என்று!
பூகோள வாத்தியாரின் மனைவிக்கும் தெரியும் பள்ளிக்கூடத்துக்கு பெரிய அதிகாரி சோதனைக்கு வரப்போகிறார் என்று? மறுநாள் என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்தப் பெண்மணி, தனது கணவர் எங்காவது அழுக்கடைந்த பழைய மூக்குப் பொடி டப்பியைக் கொண்டு போய்விடுவாரோ என்று எண்ணி புத்தம் புதிய டப்பியில் மூக்குப் பொடியை நிரப்பி ஆசிரியர் பைக்குள் போட்டுவைத்து வழி அனுப்பினார். அந்த புதிய மூக்குப் பொடி டப்பி தட்டையான சதுர வடிவம் உடையது. அப்பாவி ஆசிரியருக்கு அது தெரியாது.
காலை மணி பத்து. ஆசிரியரின் கெட்ட காலம்! முதல் வகுப்பாக இவரது அறைக்குள் நுழைந்தார் டி.ஈ.ஓ. அழகாக புவி இயல் பாடம் நடத்திவிட்டு ஒரு பையனை நோக்கி பூமியின் வடிவம் என்ன? என்று கேட்டார். பையனுக்கோ பெரிய அதிகாரியைப் பார்த்தவுடன் ஒரே உதறல். உடனே ஆசிரியர் பைக்குள் இருந்த மூக்குப்பொடி டப்பியை லாவகமாக எடுத்துக் காட்டினார். அதன் தட்டை வடிவத்தைப் பார்த்த பையன், “ஐயா, உலகம் தட்டையாக சதுரமாக இருக்கும் என்றார். டி.ஈ.ஓ.வுக்கு ஒரே சிரிப்பு. அவருடன் வந்த தலைமை ஆசிரியர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. வாத்தியார் முகத்திலோ அரை டன் அசடு வழிந்தது!!
போத் ஆப் யூ ஆர் ‘உராங்’!
Both of you are urang (wrong)!
மூக்குப் பொடி டப்பி வகுப்பறை சம்பவத்துக்குப் பின்னர் தலைமை ஆசிரியருக்கு ஒரே கவலை. அடக் கடவுளே! நம் பள்ளிக்கூடம் ‘பேர்’, ரிப்பேர் ஆகிவிடுமே என்று.
அடுத்ததாக ஆங்கிலப் பாடம் நடத்தும் ஒரு வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியரும் (D E O ) டி.ஈ.ஓ.வும் நுழைந்தனர். அங்கு இதைவிட பெரிய தலைவலி காத்திருந்தது.
ஆசிரியர் ஒரு பையனைப் பார்த்து
What is the SSpelling far Kuvaneltj (Knowledge)? வாட் இஸ் தெ ஸ்ஸ்பெல்லிங் பார் குவாநலெட்ஜ்? என்று கேட்டார்.
அந்தச் சொல்லில் கே என்னும் ஆங்கில எழுத்து ஒலிக்காது/ சைலன் ட் என்பது ஆசிரியருக்குத் தெரியாது.
பையன் அதற்கு மேல் மண்டு!!
ஐ டோண்ட் க்நோ சார், என்றான். Ai tont kkno (know), sir
தலைமை ஆசிரியர்க்கு உதறல் எடுக்கத் துவங்கி விட்டது. ஆசிரியருக்கே ஆங்கிலம் தெரியவில்லை, உச்சரிப்பும் தெரியவில்லை என்றால் பள்ளிக் கூடத்தையே மூடச் சொல்லி அதிகாரி ‘’ரிப்போர்ட்’’ கொடுத்து விடுவாரோ என்று பயந்து நடுங்கினார்.
அந்த நேரத்தில் டி.ஈ.ஓ. திருவாய் மலர்ந்தருளினார்:
போத் ஆப் யூ ஆர் “உராங்” poth ap u or Uraang (wrong) என்று சொல்லிவிட்டு நாலெட்ஜுக்கு ஸ்பெல்லிங் எழுதிக் காட்டினார் Naledj னாலெட்ஜ் என்று.
தலைமை ஆசிரியருக்கு உயிர்வந்தது!!
மண்டு டீ.ஈ.ஓ. வாழ்க என்று மனதுக்குள் வாழ்த்தினார்!!!
Contact swami_48@yahoo.com
Pictures are taken from various websites; not connected with the anecdotes here;thanks.
You must be logged in to post a comment.