கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:- 1298; தேதி: 19 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது எட்டாவது கட்டுரை.
மகாவம்சத்தில் தானாக மனிதன் தீப்பற்றி எரியும் ஒரு அதிசய நிகழ்வும் பதிவாகியுள்ளது இதை ஆங்கிலத்தில் Spontaneous Human Combustion (SHC) என்று அழைப்பர். இது அபூர்வமாகவே நிகழக்கூடியது. 5000 ஆண்டு இந்துமத வரலாற்றில் பத்து முதல் பதினைந்து சம்பவங்களே இருப்பதாகச் சொல்லலாம்.
திருஞான சம்பந்தர் தனது திருமணம் நடந்தபோது புது மனைவி மற்றும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலிய நூற்றுக் கணக்காணோருடன் ஜோதியில் கலந்தார்.
ஆண்டாள் ஜோதியில் கலந்தார்.
திருப்பணாழ்வார் ஜோதியில் கலந்தார்.
நந்தனார் ஜோதியில் கலந்தார்.
என்றெல்லாம் படிக்கிறோம். நாத்தீகர்கள் இதைக் கண்டு நகைப்பதுண்டு. தீ விபத்துக்களை இப்படிச் சொல்லிவிட்டார்கள் அல்லது கீழ்ஜாதி நந்தனாரையும் திருப்பணாழ்வாரையும் தீயில் தள்ளிவிட்டு பிராமணர்கள் இப்படிக் கதை கட்டிவிட்டார்கள் என்று கதைப்பதும் உண்டு.
ராமலிங்க சுவாமிகள் ஜோதி வடிவில் கலந்ததையும் நம்பாதோர் உண்டு. கண்ணகி தன் ஒரு முலையைத் திருகி எரிந்து மதுரையை எரித்ததாக நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் சொல்வதைக் கண்டு நகைப்போரும் உண்டு.
ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் தாயின் சிதைக்குப் பார்வையாலேயே தீ மூட்டினர் என்பதைச் சந்தேகிப்போரும் உண்டு. ஆனால் இந்துக்கள் இதை உண்மை என்றே நம்புவர். பல நூறு கோடி ஆட்களில் இப்படிச் செய்தவர் பத்துப் பேரே என்பதே இதை அபூர்வ சம்பவம் என்று காட்டும்.
இதே போல வடக்கிலும் சில சம்பங்கள் உண்டு. கோபால் நாயக் என்பவர் தீபக் என்னும் ராகத்தைப் பாடினால் மனிதர்கள் தீப்பற்றி எரிந்துபோவார்கள் என்கிறார். மொகலாய சக்ரவர்த்தி அக்பர், அப்படியானால் தண்ணீருக்குள் நின்று பாடுங்கள் என்கிறார். அப்படிப் பாடினாலும் தண்ணீரிலும் தீ தோன்றி நான் எரிந்துவிடுவேன் என்று சொன்னபோதிலும் மன்னனே சொல்கிறாரே என்று அவர் தீபக் ராகத்தை இசைத்தார். தீப்பிழம்பாக மாறி மாண்டு போனார் பாடகர்.
மகாவம்சத்தில் இத்தகைய இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று புத்தர் காலத்தில் நடந்தது. காஸ்யபர் என்ற மகாதேரர் புத்தரின் சடலத்தை மூன்று முறை சுற்றி வந்தவுடன் புத்தரின் சிதை தானாகவே எரிந்ததாக மகாவம்சம் பகரும். இது மகாவம்சம் 30-ஆவது அத்தியாயத்தில் வருகிறது.
மற்றொரு சம்பவம் மகாவம்சம் 5-ஆவது அத்தியாயத்தில் வருகிறது.
முன்னொரு காலத்தில் காட்டில் வாழும் ஒருவன் பாடலிபுத்ரம் அருகில் காட்டில் உள்ள குந்தி என்ற வனதேவதையைக் காதலித்தான். இருவரும் கூடியதன் விளைவாக அவள் தீசன், சுமிதன் என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இருவரும் மகாவருண தேரரிடம் தீட்சை பெற்று அரிய சக்திகளைப் பெற்றனர்.
ஒருமுறை மூத்தவரை ஒரு விஷப் பூச்சி கடிக்கவே அவர் வலியால் துடித்தார். இளையவர் உதவ முன்வந்தபோது நெய் கிடைத்தால் போதும் என்றும் ஆனால் அதை பிட்சைக்குச் செல்லும்பபொழுதுதான் வாங்கலாம் என்றும் நிபந்தனை போட்டுவிட்டார். இளையவர், பிட்சைக்குச் சென்றபோது கொஞ்சமும் நெய் கிடைக்கவில்லை. இதற்குள் வலி அதிகமாகி அவர் மரணத்தை நெருங்கினார். அப்போது அவர் உடல் காற்றில் மிதந்தது. அவர் தேஜோ கான வாசனத் தியானத்தில் ஆழ்ந்தார். உடம்பு ஜோதி வடிவமானது எலும்புகள் மட்டுமே எஞ்சின. மன்னன் செய்தி கேட்டு விரைந்து வந்தான். காற்றில் மிதந்த எலும்புகளை யானை மீது ஏறிச்சென்று சேகரித்து உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தான்.
இதைச் சொன்ன மகாவம்சம் தேஜோ கான வாஸனம் என்ன என்பதை உரையில் விளக்குகிறது:
தியானத்தில் ஈடுபடும் துறவி தனது சிந்தனை முழுவதையும் ‘’நெருப்பு’’ என்பதில் ஒருமுகப்படுத்துவது. இதனால் உடலுக்குள் அக்னி மூண்டு முழுவதும் எரித்து அழித்துவிடும்.
இதை நாம் வள்ளலார் கதையுடன் ஒப்பிடலாம். கண்ணகி, பட்டினத்தார், ஆதிசங்கரர் கதைகளுடனும் ஒப்பிடலாம். யோக சக்தியால் எதுவுமே சாத்தியம். விஞ்ஞானிகளுக்கு — இந்துக்கள் அளவுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படவில்லை. ஆகையால் இத்தகைய விஷயங்களை ஏற்க மறுக்கின்றனர். மனோசக்தியின் வலிமையை விஞ்ஞானம் அறியும் நாளில் இதற்குப் புதிய விஞ்ஞான விளக்கமும் புதிய பெயரும் தருவர்!!!
பி.பி.சி திரைப்படம்
வெளிநாட்டிலும் இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகளில் வருகின்றன. 1992 ஆம் ஆண்டிலும் இப்படி நடந்தவுடன் இதுபற்றி ஆராய்ச்சி செய்து பி பி சி ஒரு டாகுமெ ன் டரி தயாரித்தது. அதில் விஞ்ஞானிகள் பல விளக்கம் கொடுத்தனர். எல்லாம் அரை குறையான விளக்கமே. கால்கள் மட்டும் எரியாமல் உடம் முழுவதும் எப்படி எரிய முடியும்? மின்சாரச் சுடுகாட்டில் 1000 டிகிரி சென் டி கிரேடிலும் எரியாத எலும்புகள் கால்களை மட்டும் விட்டுவிட்டு உடல் முழுதும் எப்படி எரிந்து சாம்பாலயின? இப்படிப் பல புதிர்கள்!!! சடலம் எரிந்தும் பக்கத்தில் உள்ள மேஜை நாற்காலிகள் தீப்பிடிக்கதது ஏன்?
இத்தனை புதிர்களுக்கும் அவர்கள் சப்பைக்கட்டு பதில்கள் தந்தனர். மனித உடலில் கொழுப்பு அதிகம் இருந்தால் இப்படி நடக்கலாம், மீதேன் வாயு சேர்ந்தால் இப்படி நடக்கலாம், குடிகாரராக இருந்தால் இப்படி நடக்கலாம் என்று பல விளக்கங்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு மாணவன் மாடிப்படியில் இருந்து இறங்கிவந்த ஜோரில் தீப்பிழம்பானான். அவன் உடைகள் புத்தம் புதிய உடைகளாகக் காட்சிதந்தன. கருகவே இல்லை அப்போது இவ்வளவு பதிவு செய்யும் வசதிகள் இல்லாததால் வேறு எந்த நிரூபணமும் இல்லாமல் செய்தி மட்டுமே பத்திரிகையில் வெளியானது
சித்தர்களின் அஷ்ட மஹா சக்திகளை நம்பும் இந்துக்களுக்கு இவைகள் எல்லாம் கொசுறு!
Please read my earlier articles:
The Mysterious Death of Great Hindu Saints (Posted Nov.15, 2011)
Strange Facts about V I P Deaths (27th April 2012)
Contact swami_48@yahoo.com
Source book : Mahavamsam in Tamil ; translated by S Sankaran, 1986, Rs.25
You must be logged in to post a comment.