Pallava symbol lion in Mamallapuram (Narasimha Pallavan has lion in his name)
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1402; தேதி 10 நவம்பர், 2014.
நாம் எல்லோரும் சிறுவயதில் படித்த கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளும் ஈசாப் கதைகளும் ஆகும். சின்னச் சின்னக் கதைகளில் பறவைகளையும் மிருகங்களையும் கதாபாத்திரமாக வைத்து நமக்கு பல நீதிகளைப் புகட்டினர். இது எல்லாம் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றது பலருக்கும் தெரியாது. உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலேயே இந்தக் கதைகளில் சில உவமை வடிவத்தில் இருக்கின்றன.
ஈசாப் என்ற கிரேக்க அடிமை, தான் கேட்ட கதைகளை எழுதிவைத்தார். இவர் கேட்ட கதைகளில் பல இந்தியர்களிடமிருந்து கேட்டவை என்பதை மயில் முதலிய பறவைகள் மூலம் அறியலாம். ஏனெனில் உலகம் முழுதும் மயில் என்னும் அதிசயப் பறவைகளை ஏற்றுமதி செய்தவர்கள் நாம் ஒருவரே. ஈசாப் வாழ்ந்த நாட்டில் மயில் கிடையாது. நிற்க.
சிங்கம் பற்றிய சுவைமிகு விஷயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1.ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ் சீசர் என்று பல மன்னர் பெயர்களை ரோமானிய வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். இதில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து வந்தது. கேச+அரி = மயிர் உடைய மிருகம். ஆண் சிங்கத்தின் பிடரி மயிர் காரணமாக கேசரி என்ற பெயர் உண்டாயிற்று.
2.ஏரியல்: ஏரியல் என்ற ஹீப்ரு பெயரில் உள்ள அரி என்பது சிங்கம் என்பது ஹீப்ரூ (எபிரேய) மொழி படித்தவர்கள் அறிவர்.
3.சங்க இலக்கியத்தில் அரி: சங்க இலக்கிய நூலான ஐங்குறு நூற்றில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் (265, 268) அரி என்ற சொல்லைக் காணலாம். இது வட மொழியில் சிங்கத்துக்கு உள்ள பெயர். சிங்கத்தை ஹரி என்பர். தமிழில் “ஹ” இல்லாததால் அது “அரி” ஆய்விட்டது. இது ஹீப்ரூ வரை சென்றுவிட்டது.
தமிழில் அரி என்ற சொல் பறை, கிணை ஆகியவற்றுடனும் பல இடங்களில் வருகிறது. ஆயினும் அந்த இடத்தில் சிங்கத்தின் பொருளை எழுதவில்ல. ஆனால் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் டமார, முழவு கர்ஜனையுடன் சிங்க கர்ஜனை ஒப்பிடப்படுவதால் அரி + ஓசை என்ற இடமெல்லாம் சிங்க கர்ஜனை எனவே பொருள் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்
4. சிம்ஹ, சிம்ம: ரிக் வேதத்தில் மட்டும் சிங்கம் என்னும் சொல் கிட்டத்தட்ட 20 இடங்களில் வருகிறது. பிற்கால பிராமணங்கள் முதலியவற்றில் மேலும் பல இடங்களில் வருகிறது. இது போலவே அதர்வண, யஜூர் வேதங்களிலும் உள்ளன. சுருங்கச் சொல்லின், வேறு எந்த வன விலங்கையும் விட சிங்கமே அதிகம் இடம்பெறுகிறது.
(இருபதுக்கும் மேலான குறிப்புகளை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க)
5.இலங்கைக்கு வங்க நாட்டில் இருந்து குடியேறிய சிம்ம பாஹூவை வைத்து சிங்கள என்ற இனம் வந்ததும் அந்நாட்டுக் கொடியில் சிங்கம் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஈரானில் கோமெய்னி புரட்சி வெடிக்கும் முன், அந்நாட்டுக் கொடியில் இலங்கை போலவே வாள் ஏந்திய சிங்கம் இருந்தது. இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இருக்கிறது.
6.சிங்கபுரம் என்பதே சிங்கப்பூர் ஆனதாகச் சொல்லுவர். இன்னும் சிலர் ஸ்ருங்கபுரம் (கொம்பு போல நீண்ட பகுதி — என்பர். இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள். மலேய தீபகற்ப வரைபடத்தைப் பார்ப்போர்க்கு இது விளங்கும்).
7.இலங்கையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதலே (சிம்மபாஹு—விஜயன்) சிங்கம் பிரபலமானது. ஆனால் இந்தியாவின் தென்பகுதியிலோ, தென் கிழக்காசிய நாடுகளிலோ இது கிடையாது. ஆயினும் சிற்பங்களிலும், படங்களிலும், இலக்கியங்களிலும் உண்டு.
யாளி என்ற விநோத விலங்கு
8.யாளி, வ்யால= லியோ= லியாண்டர்
வ்யால/ யாளி என்ற ஒரு மிருகம் இந்துக் கோவில் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இல்லாத மிருகம். சிங்கத்தை விட வலியது என்பர். நிறைய கிறிஸ்தவப் பெயர்கள் லியோ, லியாண்டர், லியார்னடோ என்பனவும் ஆங்கிலச் சொற்களான லயன் (சிங்கம்) லியோ (சிம்ம ராசி) முதலியனவும் யாளி, வ்யால என்பதில் இருந்து வந்தன. யாளி என்ற சொல்லை கண்ணாடியில் பார்த்தால் லியா என வரும் இவ்வகை சொற்களை கண்ணாடி உருவச் சொற்கள் என்பர். இப்படியும் வந்திருக்கலாம். அல்லது வ்யால என்னும் மிருகம் பெயர் லயன், லியோ என்றும் நேராகவும் வந்திருக்கலாம்.
9. இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன் என்பதைப் பலரும் அறிவர். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் அதனால் அவனுக்கு சர்வ தமனன் என்ற பெயரும் உண்டு. இதைப் பாரதியாரும் பாடுகிறார்:–
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி – நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.
வேதத்தில் சிங்கக் கதைகள்
10.உலகில் கதை இலக்கியத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களே. வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, புராணங்களில் பிராணிகளை வைத்துச் சொல்லப்படும் ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. இவைகளில் பலவற்றை புத்த, சமண மத நூல்களிலும் காணலாம். பஞ்சதந்திரக் கதைகளும் ஹிதோபதேசக் கதைகளும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின. இன்று உலகம் முழுதும் பரவிய ஆங்கில ஹாரிபாட்டர் கதைக்கான “கரு” எல்லாம் விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளிலும், கதைக்கடல் (கதாசரித்சாகரம்) என்னும் வடமொழி நூல்களிலும் உள்ளன.
11.ரிக்வேதத்தில் (கி.மு1700க்கு முன்) எல்லா மண்டலங்களிலும் சிங்கம் பற்றிய குறிப்புகள் இருப்பதால் ஒரு காலத்தில் சரஸ்வதி நதிதீரம் முதல் கங்கைச் சமவெளி வரை சிங்கம் உலவி இருக்கவேண்டும். இப்பொழுது குஜராத் மாநிலக் காடுகளில் மட்டுமே சிங்கம் உளது. ஆண்டாள் திருப்பாவையில் சிங்கம் பற்றி தத்ரூபமாகப் பாடியிருப்பது பற்றி எனது முந்தைய கட்டுரையில் காண்க.
12..ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி வரும் இரண்டு உவமைகள் அக்காலத்திலேயே பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகள் இருந்ததற்குச் சான்று பகரும் (RV 10-28-4 and 7-18-17).
சுதாசன் என்ற மன்னனுக்கு இந்திரன் வழங்கிய உதவியால் அவன் மகத்தான வெற்றி பெற்றன். பல மன்னர்கள் எதிர்த்த பத்துராஜா யுத்தத்தில் அவன் வெற்றி பெற்றது “சிங்கத்தை ஆடு தோற்கடித்தது” போல இருக்கிறது என்று ஒரு ரிஷி பாடுகிறார். வேறு ஒரு இடத்தில் “நரி சிங்கத்தைத் தோற்கடித்தால் அது அதிசயமன்றோ!” என்று இன்னொரு புலவர் வியக்கிறார். இவை எல்லாம் கதைக்கான கருக்கள்.
13.வடமேற்கு இந்தியா முழுதும் சிங்கம் சீறிப்பாய்ந்த போதும், சிந்து சமவெளியில் ஒரு சிங்க முத்திரையும் இல்லை. இதே போல குதிரைப் படமும் பசு மாட்டின் படமும் இல்லை!! காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ!— இது ஒரு பெரிய மர்மம். ஒருவேளை பசு, அஸ்வமேத யாகக் குதிரை இவைகளை முத்திரையில் பொறிப்பது அபசாரம் என்று கருதிவிட்டானோ!!!
Narasimha from Hampi (Picture from Wikipedia)
14.இந்துக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தது சிங்கம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று நர+சிம்ம அவதாரம்= பாதி மனிதன்+பாதி சிங்கம்!
15.சிம்மாசனம் என்னும் சொல் ,இந்து மத தோத்திரங்களிலும், கதைகளிலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றது. இந்தக் கருத்தை உலகிற்கு தந்தவனும் இந்துவே. சிங்கத்தைக் காட்டு ராஜாவாக உயர்த்தியதும் நம்மவரே என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து தெரிகிறது. விக்ரமாதித்தன் சிம்மாசனம், ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – என்ற சம்ஸ்கிருத மரபுச் சொற்றொடர்கள் இதற்குச் சான்று.
16.பாபர், ஹைதர், ஷேர் (ஷா), சிங், சிம்ம, கேசரி – முதலிய மன்னர் பட்டங்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள்படும். முஸ்லீம் மன்னர்களும் கூட நம்மிடமிருந்து அவ் வழக்கத்தைக் கற்றனர்.
17.சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிம்மன் தனக்குப் பிறகு எல்லா சீக்கியர்களும் சிங் (கம்) என்ற பெயரைச் சூடவேண்டும் என்று சொன்னதால் சீக்கியர் அனைவரும் சிங் என்ற பின்னொட்டுப் பெயர் வைத்துள்ளனர். மற்ற வட இந்திய ஜாதியினரும் சிங் என்று பெயர் வைப்பர். ஆகையால் எல்லா சிங் – குகளும் சீக்கியரல்ல.
18.ரிக்வேதத்தில் அக்னி, ருத்ரன் ஆகியோரை சிங்கத்துடன் ஒப்பிட்டுப் பாடிய துதிகள் உள. சிம்ம கர்ஜனை, இடி முழக்கம் போன்ற ஒலியுடைய முரசுடன் ஒப்பிடப்படுகின்றது சிங்க வேட்டை பற்றிய வருணனைகளும் இருக்கின்றன. பெண் சிங்கத்தின் வலிமையையும் வீரத்தையும் பாராட்டும் பாடல்களும் உள.
Lion Throne (Simha Asanam) at Louvre Museum, France;photo by london swaminathan.
19.உலகின் முதல் அகராதி- நிகண்டு ஆன அமரகோசம் வடமொழியில் சிங்கத்துக்குரிய பத்து சொற்களைப் பட்டியலிடுகிறது:-
சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷ, ம்ருகேந்த்த்ர, பஞ்சாஸ்ய, ம்ருகத்ருஷ்டி, ம்ருகரிபு, ம்ருருகச்ன, கண்டிரவோ எனப் பல பெயர்களைத் தருகின்றது.
20.இலங்கைத் தமிழர் பெயர்களில் புலிகளை விட பாலசிங்கம், விக்ரமசிங்கம் போன்ற சிங்கம் பெயர்களே அதிகம்!!
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.