கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
கட்டுரை எண்- 1493; தேதி 17 டிசம்பர், 2014.
“தங்கத்திற்குச் சோதனை அக்னியில்; வலிமை வாய்ந்தவர்களுக்குச் சோதனையோ ஆபத்துக்களை எதிர்கொள்வது தான்!” – மார்த்தா க்ரஹாம்
சாதாரணமாக உள்ள மனித ஆற்றலையும் மிஞ்சி அபூர்வமான ஆற்றலைக் கொண்ட பல பேரை இதுவரை பார்த்தோம். அறிவியல் ஒப்புக் கொள்ளும் இவர்களைப் போன்ற சூப்பர் பவர் மனிதர்கள் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் இந்திய ஹெர்குலிஸ் என்ற புகழ் பெற்ற கோடி ராமமூர்த்தி நாயுடு ஆவார். சாண்டோ ராமமூர்த்தி அல்லது புரபஸர் ராமமூர்த்தி என்ற பெயரால் பரவலாக அறியப்பட்டவர் இவர்.
1882ஆம் ஆண்டு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வீரகட்டம் என்ற ஊரில் பிறந்த இவர் விஜயநகர கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அபூர்வ கலையான வாயு ஸ்தம்பனம் மற்றும் ஜல ஸ்தம்பனம் ஆகிய கலைகளில் மிகுந்த தேர்ச்சி உண்டு. மல்யுத்தத்தில் மகாவீரர். பிரிட்டிஷ் அரசரான ஐந்தாம் ஜார்ஜ் இவருக்கு கலியுக பீமன் என்ற பட்டத்தை வழங்கி இவரைச் சிறப்பித்தார்.
1911 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து இவர் தன் நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்து அனைவரையும் அயர வைத்தார். இரும்புச் சங்கிலிகளை உடைப்பது, தோள்களில் இரும்புச் சங்கிலிகள் இணைக்கப்பட மறு முனையில் ஓடுகின்ற கார்கள் இணைக்கப்பட அவற்றை அப்படியே ஓடாமல் நிறுத்துவது போன்ற இவரது சாகஸ செயல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. இது போதாது என்று ஒரு யானையைத் தன் மார்பின் மீது ஏறி நடக்கச் செய்தார். ஐந்து நிமிட நேரம் யானையைத் தன் மார்பின் மீது நிற்கச் செய்து அதைத் தாங்கிக் காண்பித்தார்.
இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் மிண்டோ தன் காரை ஓட்டுவதற்கு முயல, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த காரின் மறுமுனையைப் பிடித்து அப்படியே நிற்க வைத்தார் இவர். இந்தச் சம்பவத்தால் இவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் இவரைப் பார்த்த பண்டிட் மதன்மோகன் மாளவியா இவரை வெகுவாகப் பாராட்டி லண்டனுக்கு அனுப்பினார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணி மேரியும் இவரது சாகஸங்களைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர் கலியுக பீமன் என்ற பட்டத்தையும் வழங்கினர்.
Eugene Sandow
ஸ்பெயினுக்குச் சென்ற இவர் அங்கு நடந்த புல்-ஃபைட்டிங் (Bull Fighting) எனப்படும் காளைமாடுகளை அடக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தார். அந்த வீர்ர்களின் வீரம் இவரை அவ்வளவாகக் கவரவில்லை. தானே களத்தில் குதித்தார். ஒரு பெரிய காளைமாட்டின் இரு கொம்புகளையும் பிடித்து அலாக்காகத் தூக்கி அதைச் சுழற்றி வீசி எறிந்தார். அனைவரும் ஆஹா. ஆஹா என்று கூவினர். பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் என அனைத்து நாடுகளிலும் இவர் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள் இவரது சூப்பர் பவரைக் கண்டு ஆச்சரியமுற்றனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இவர் தீவிர பங்காற்றினார்.
ஒரு சர்க்கஸ் கம்பெனியை நிறுவி எல்லா ஊர்களிலும் பல நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி பெரும் புகழ் பெற்ற இவர் 1942ஆம் ஆண்டு மறைந்தார். ஸ்ரீகாகுளத்தில் இவர் நினைவாக நிறுவப்பட்ட சிலை இன்றும் இருக்கிறது!
பீரங்கிக் குண்டை ஏந்திய ஜான் ஹாட்லம்
இதே போன்ற அபாயகரமான அதிசய செயல்களைத் தன் வலிமையைக் காண்பிப்பதற்காக உலகில் பல வீர்ர்களும் செய்து காட்டி வந்துள்ளனர்.
ஜான் ஹாட்லம் (John Hotlum) (தோற்றம்1845- மறைவு 1919) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு வீரர். இவர் மேடையின் ஒரு பக்கத்தில் திறந்த மார்புடன் நிற்க மறுபுறம் பீரங்கியிலிருந்து குண்டு பாய்ந்து வரும். அதை க்ளவ்ஸ் மட்டுமே போட்டுக் கொண்ட கைகளால் இவர் தடுத்துப் பிடிப்பார். இது ஏமாற்று வித்தை என்று சந்தேகப்பட்டவர்களை ஸ்டேஜிலேயே அழைத்து நிறுத்தி வைத்து 50 பவுண்டு எடையுள்ள பாய்ந்து வரும் பீரங்கிக் குண்டை இவர் பிடித்துக் காட்டிய போது அவர்கள் திகைத்தே போனார்கள்.
18 பேர் நிற்கும் மேடையைத் தூக்கிய லூயிஸ் சிர்
க்யூபெக் நகரில் பிறந்த லூயிஸ் சிர் (தோற்றம் 1863 – மறைவு 1912) 12ஆம் வயதிலிருந்தே சூப்பர் பவர் கொண்டவர் என்று புகழ் பெற்றவர். போஸ்டனில் திரளாகக் குழுமியிருந்த மக்களின் முன்னே ஒரு குதிரையை அலாக்காகத் தூக்கிக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு முறை 18 பேர் ஒரு மேடையில் நிற்க அந்த மேடையைத் தன் முதுகின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு காண்பித்தார். மாண்ட்ரீலில் ஒரு பெரும் போலீஸ் அதிகாரி பதவி இவருக்குப் பின்னர் தரப்பட்டது!
Louis Cyr
இருவரைக் கூடையில் வைத்துத் தூக்கிய யூஜென் சாண்டோ
யூஜென் சாண்டோ (Eugen Sandow ) தோற்றம் 1867 மறைவு 1925) ப்ரஷ்யாவில் பிறந்தவர். இப்போது ஜெர்மனியில் இணைந்துள்ளது இந்தப் பகுதி. தனது வலிமையை அனைவருக்கும் காண்பிப்பதற்காக இரு மனிதர்களை இரு கூடைகளில் வலது பக்கமும் இடது பக்கமும் வைத்துத் தன் தோள்களுக்கு மேலே தூக்கிக் காட்டுவது இவர் வழக்கம்.
‘என்ன, நீ பெரிய சாண்டோவா’ என்று கேட்பது இவரை கௌரவப்படுத்தும் விதமாகத் தான்!
இப்படி நூற்றுக்கணக்கான சூப்பர் மேன்கள் காலம் காலமாக எல்லா நாடுகளிலும் பிறந்து தங்களின் அபார வலிமையைக் காட்டி வந்துள்ளனர்.
மனிதனின் வலிமைக்கு எல்லையே கிடையாதோ, என்னவோ!அறிவியல் தன் ஆய்வுகளில் இவர்களின் வலிமையைப் பதிவு செய்து வருகிறது!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1933ஆம் ஆண்டு தனது 31ஆம் வயதிலேயே நோபல் பரிசு பெற்ற பெரும் விஞ்ஞானி பால் டிராக் (Paul Dirac). அதிகமாகப் பேசாதவர். கேம்பிரிட்ஜில் அவருடன் படித்த சகாக்கள் ‘டிராக்’ என்ற ஒரு அளவீட்டையே உருவாக்கினர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு வார்த்தை என்று டிராக் என்னும் இந்த அளவீடு குறிக்கும். ஒரு முறை பிரபல விஞ்ஞானி நீல்ஸ் பொர் டிராக்கிடம், ‘ஆரம்பித்த வாக்கியத்தை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை’ என்று சொன்ன போது டிராக் ‘என்னுடைய பள்ளியில் முடிக்கத் தெரியாத வாக்கியத்தை ஆரம்பிக்கவே ஆரம்பிக்காதே என்று சொல்லித் தந்திருக்கிறார்கள்’, என்று பதில் கூறினார்.
இயற்பியல் விஞ்ஞானியான ராபர்ட் ஓப்பன்ஹீமருக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் டிராக்கோ, ”எந்த கஷ்டமான விஷயத்தையும் எளிதாக அனைவருக்கும் புரியும்படி செய்வது விஞ்ஞானம்; ஆனால் எந்த சுலபமாகப் புரியக் கூடிய விஷயத்தையும் கஷ்டமாகப் புரியாமல் செய்வது கவிதை” என்று ஓப்பன்ஹீமரின் கவிதை ஆர்வத்தை விமரிசித்தார்.
ஒருமுறை அமெரிக்க கல்வியாளர் ஒருவர் இவர் அருகில் உட்காருவதை ஒரு பெரும் பாக்கியமாக நினைத்து இவரிடம் வந்து கல்லூரி உணவு நேரத்தில் அருகில் அமர்ந்தார். ஆனால் உணவு வகைகள் வந்து கொண்டே இருந்தன. டிராக் மௌனமாகச் சாப்பிட்டாரே தவிர பேசவில்லை. பொறுமை இழந்த அமெரிக்கர், டிராக்கிடம்,” இந்த வருடம் விடுமுறைப் பயணமாக எங்காவது செல்ல உத்தேசம் உண்டா” என்று பேச்சை ஆரம்பிக்கும் விதமாகக் கேட்டார். 35 நிமிட மௌனத்திற்குப் பிறகு டிராக்,”இதை எதற்காகக் கேட்கிறீர்கள்?” என்று அவரிடம் திருப்பி ஒரு கேள்வியைக் கேட்டார்.
அவரது நண்பர்கள் அவரைப் பற்றிக் கூறுகையில் மௌனமாக இருப்பதிலேயே அவர் மகிழ்ச்சி காண்பவர் என்று கூறுவர். பிரின்ஸ்டனில் வாழ்ந்த போது அனைத்து நண்பர்களையும் விருந்திற்கு டிராக் அழைப்பார். ஆனால் விருந்து முழுவதும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாராம்.
மிகவும் கூச்ச சுபாவம் உடைய டிராக் விஞ்ஞானிகளிலேயே மிகவும் வித்தியாசமான ஒருவர்.
Pictures are taken from various websites;thanks
contact swami_48@yahoo.com
********************
You must be logged in to post a comment.