கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1509; தேதி 23 டிசம்பர், 2014.
This article is available in English as well.
Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 2
தமிழ் அதிசயம் -6
தமிழ் மொழியில் சில எழுத்துக்களில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியம் தடை விதிக்கிறது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் தமிழர்கள் தங்கள் மொழியை வளர்க்க மூன்று தமிழ்ச் சங்கங்கள் வைத்தது அவர்களுக்குத் தெரியும்!
தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியம் என்று சான்றோர் கூறுவர். இதை எழுதியவர் “ஒல்காப் புகழ்” தொல்காப்பியன் ஆவார். இவர் விதித்த தடையையும் மீறி ச- என்னும் எழுத்தில் துவங்கும் சுமார் 14 சொற்கள் சங்க இலக்கியத்திலேயே உள்ளன. இவைகள் வடமொழிச் சொற்களே! சகடம், சங்கம், சடை, சமன், சரணம், சருமம், சலதாரி, சலம், சனம், சண்பகம் முதலியன அவை.
தமிழ் அதிசயம் -7
இதே போல “ஞ” என்னும் எழுத்திலும் சொற்கள் துவங்கக் கூடாது என விதி. ஏன் இப்படி விதித்தனர் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியும் சங்க இலக்கியத்தில் ஞமலி (நாய்), ஞமன் (யமன்) ஆகிய சொற்கள் உண்டு. ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. இதற்கு என்ன காரணம் என்பது எங்கும் இல்லை.
‘’ச’’ என்பதன் மீது விதிக்கப்பட்ட தடைதான் வியப்பைத் தருகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ‘’ச’’ சப்தத்துடன் துவங்கும் சொற்கள் ஏராளம். தமிழில் நாம் இன்றும் கூட சங்கு, சங்கம், சமம் முதலிய சொற்களைப் பயன்படுத்துகிறோம் இவை வட மொழிச் சொற்கள். ஒருவேளை வட மொழியுடன் வேறுபடுத்த இந்த விதியை வைத்தனரோ! ஏனெனில் வடமொழியில் ‘’ச’’ – வர்கத்தில் நான்கு விதம் உண்டு. இது தவிர ஆங்கிலத்திலுள்ள ஸ், ஷ் போன்று சப்தம் உடைய நான்கு வகைகள் வேறு வட மொழியில் இருக்கின்றன. வியாசர் என்னும் மாமுனிவர் அதிகமான ஸ்லோகங்களை ‘’ஸ’’ என்னும் எழுத்தில் துவங்கியதால் அவருக்கு சகாரகுக்ஷி என்று பெயர் எனவும் சான்றோர் கூறுவர். இதனால்தான் தமிழில் ச-வுக்குத் தடை விதித்தனரோ!
ய,ர,ல, ஞ – ஆகிய சில எழுத்துக்களுக்கும் தடை விதித்ததற்குக் காரணம் கூறப்படவில்லை!
தமிழ் அதிசயம் -8
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ அஹ்து அஃது, இஹ்து, இஃது
ஆய்த எழுத்தும் ஒரு விநோத எழுத்தே. இதை சங்க காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி நாம் அதிகம் பயன்படுத்தவில்லை. இந்த மூன்று புள்ளி உடைய எழுத்து கல்வெட்டுகளில் காணப்படாததால் தொல்காப்பியர் காலத்தை முதல் சில நூற்றாண்டுகளில் வைப்போரும் உளர்.
ஆய்த எழுத்தைக் கண்டு பிடித்ததே தொல்காப்பியரோ என்று எண்ணவும் சில காரணங்கள் உண்டு. வடமொழியில் விசர்க்கம் என்னும் இரண்டு புள்ளி எழுத்து போல இதைப் பயன்படுத்த அவர் எண்ணி இருக்கலாம். வடமொழியில் ராம என்பதற்குப் பின் விசர்க்கம் ‘’ : ’’ (ராம: ) வந்தால் ராமஹ என்பர். ஹரி எனபதற்குப் பின் ‘’ : ‘’ வந்தால் ஹரிஹி என்பர். ஆனால் இது போல தமிழில் ஆய்தம் பயன்படுத்தப்படவில்லை. ஃ என்பது அஹ் என்ற சப்தத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது இல்லாமலேயே தமிழ் மொழி வாழ முடியும் என்று அனைவரும் ஒப்புக் கொள்வர். ஒவ்வொரு மொழியிலும் சில விநோதங்கள் உண்டு. தமிழ் மொழியில் ஃ மற்றும் மொழி முதல் எழுத்துகள் பற்றிய விதிகள் எல்லாம் விநோதமாக உள்ளது.
தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்று பழைய உரைகாரர்கள் கூறுகின்றனர். புதிய புத்தங்களில் அவருடைய பூர்வீகத்தை இருட்டடிப்புச் செய்கின்றனர். அதை இருட்டடிப்பு செய்யாமல் அதை எழுதி அதற்கு மறுப்புரை எழுதினால் தவறில்லை. இவ்வளவு பீடிகை எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஆரியதரங்கிணி என்ற புத்தகம் எழுதிய திரு கல்யாணராமன் இந்தோநேஷியாவில் ஒரு அகத்தியர் சிலை அருகே த்ருணபிந்து என்ற பெயரில் தொல்காப்பியர் சிலை இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால் இடத்தின் பெயர் இல்லை. அது சரியானால், அதையே- த்ரி பிந்து என்று படித்தால் முப்புள்ளி என்று ஆகும். இது ‘’ ஃ ’’ கண்டு பிடித்ததால் அவருக்கு இட்ட பெயரோ என்று நான் கருதுவதுண்டு. இது ஒரு கற்பனையே. மேலும் ஆதாரம் கிடைக்கும் வரை கற்பனையாகவே எண்ணல் வேண்டும்.
தமிழ் அதிசயம் -9
ஔ- கார மர்மம்
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உயிர் எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒன்று. குறில் எ, ஒ ஆகியன வடமொழியில் இல்லை. அதற்குப்பதில் க்ரு என்ற எழுத்து உண்டு. இருந்தபோதிலும் அரிதாகவே பயன்படுத்தப்படும் ஆனால் இரண்டு அரிச்சுவடியிலும் ‘’ஔ’’ என்னும் எழுத்து இருந்தும் யாரும் பயன்படுத்தவில்லை. சங்க காலப் புலவர் முதல் வள்ளுவன், பாரதி வரை ஔ—வில் பாட்டு துவங்கவில்லை. சங்கப் புலவர் எழுதிய 30,000 வரியிலும் வள்ளுவன் எழுதிய 2660 வரிகளிலும் ‘’ஔ’’ என்ற எழுத்தில் துவங்கும் சொல்லே இல்லை. ஔவையாரையும் அவ்வை என்றே எழுதினர். ஆனால் அங்கிலத்தில் ‘’ஔ’’ல் (ஆந்தை) போன்ற ஒலிகள், சொற்கள் உண்டு.
தமிழும் சம்ஸ்கிருதமும் வேற்றுமை (விபக்தி), அரிச்சுவடி போன்ற பல விஷயங்களில் ஒத்துப் போவதால் சிந்து சமவெளி ஒலிக் குறிப்புகளும், சொல் துவக்கமும் இதே போலத்தான் இருக்கவேண்டும். அதாவது 25 விழுக்காடு சொற்கள் உயிர் எழுத்தில்தான் துவங்கும். அ என்னும் எழுத்து அதிகமாக இருக்கும் ஆ என்பது குறைவாக இருக்கும். இ என்பது அதிகம் இருக்கும் ஈ என்பது அரிதாகவே இருக்கும். இப்படிப் பல அபூர்வ ஒற்றுமைகளை எனது ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனக்கு சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்க மான்ய உதவி கிடைத்தால் அதை நொடிப்பகுதியில் அலசி ஆராய இது போன்ற பல நூதன உத்திகள் என்னிடம் உள.
Pot with Brahmi script near Vadalur (Script writing: Atiyakan)
தமிழ் அதிசயம் -10
அ என்னும் எழுத்தைக் கண்டு பிடித்தது யார்?
உலகில் எல்லா மொழிகளும் அ- வில்தான் துவங்க முடியும் என்ற மாபெரும் உண்மையை, முதல் (1) திருக்குறளில் வள்ளுவனும் வள்ளுவனுக்கு முன் கிருஷ்ண பரமாத்மா கீதையிலும் சொல்லி வைத்தனர். அதற்கு முன் ரிக் வேத முனிவர்கள் சொல்லி வைத்தனர்.
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் ‘’அக்னி மீளே புரோஹிதம்’’ என்ற செய்யுளுடன் துவங்கி அக்னி என்னும் செய்யுளுடன் 10,000-க்கு மேலான மந்திரங்களுடன் முடிவடைகின்றன. கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத மந்திரங்கள் எல்லாம் ஓம் என்னும் மந்திரத்துடன் சொல்ல வேண்டும் என்பது விதி. அந்த ஓம் என்னும் ஏக அக்ஷரமும் ‘’அ+உ+ம’’ என்ற அ-வில்தான் துவங்கும். ஆக உலகிற்கு ‘’அ’’ என்னும் எழுத்தைக் கற்பித்து அரிச்சுவடியில் முதல் எழுத்தாக வைத்ததும் நாம் தான். இதை ஏசு பிரானும் பைபிளில் ‘’ஐ ஏம் தெ ஆல்பா அண்ட் ஒமேகா’’ என்று கூறுவதை உலகம் அறியும். அவர் இமயமலையில் முனிவர்களிடம் வேத உபநிஷத் பகவத் கீதையைக் கற்றுச் சென்றதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
Tamil’s wonderful ancient art KOLAM. Only Tamil girls in the whole wide world can draw perfect mathematical diagrams without any instruments!!
சிவ பெருமான், பாணினி என்னும் உலக மகா இலக்கண வித்தகனுக்கு வழங்கிய 14 மாஹேஸ்வர சூத்ரங்களில் முதல் சூத்திரமும் அ-வில் துவங்குவதே! பாணிணியின் உலக மஹாப் புலமையைக் கண்டு வியந்த பாரதி உலகம் நம்ப முடியாத திறன் (நம்பருந்திறல் பாணிணி) என்று பாடுகிறார்.
வாழ்க தமிழ் மொழி! வாழ்க நிரந்தரம்!
Subramania Aiyer Govindaswamy
/ December 24, 2014அன்புள்ள திரு ஸ்வாமிநாதன் அவர்களே
தொல்காப்பியத்தில் ‘ச’ வில் தொடங்கும் சொற்களுக்குத் தடை இல்லை. சூ 62 ம் திரு பாலசுந்தரம் அவர்களின் உரையையும் காணவும்
சூ. 62:
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே
(29)
க-து:
சகர மெய் ஒன்பது உயிரிசைகளொடு கூடி உயிர்மெய்யாய்
வருமென்கிறது.
பொருள்:சகரமாகிய எழுத்தும் அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாத
ஏனைய உயிரோசைகளுடன் மேலனவற்றைப் போல மொழி முதலாதற்குச்
செல்லும். உம்மை எச்ச உம்மை. மூன்றும் என்னும் முற்றும்மை தொக்கது.
கிளவி – கிளத்தலை உடையது என எழுத்தின் மேலாயிற்று.
எ – டு : சாரல், சின்னம், சீரை, சும்மை, சூழ்ச்சி, செல்வம், சேவல்,
சொன்றி, சோனை எனவரும்.
வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்து செய்யுட்சொல்லாக வரும்
வடசொற்களை இவ்வதிகாரப் புறனடையாற் கொள்க. எ – டு: சடை,
சதுக்கம், சமன், சமழ்ப்பு, சகடம் எனவரும்.
‘ச’ வல்லின எழுத்து. பள்ளியில் இதை cha என்று தான் கற்றுக் கொடுக்கிறார்கள். தற்கால பேச்சிலே இது ஸ sa என்று தான் ஒலிக்கிறது. அப்படியாயின் இது இடையின எழுத்து தானே. எப்படி வல்லினமாகும்?
‘ச’ வரிசையில் எல்லா இந்திய மொழிகளிலும் 4 ஒலி/வரி வடிவங்கள் உள்ளன. தெலுங்கில் 6 உள்ளன. அவை இவ்வாறு.
Ca, tca,cha, ja,dja,jha
கோவிந்தஸ்வாமி