கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1521; தேதி 27 டிசம்பர், 2014.
வால்மீகி ராமாயணத்தில் அனுமன் கொண்டுசென்ற மோதிரத்தை சீதையிடம் கொடுத்த காட்சி மிகவும் பிரசித்தமான காட்சி. இதே போல சாகுந்தலம் எனும் உலகப் பிரசித்தி பெற்ற நாடகத்தில் துஷ்யந்தன் கொடுத்த மோதிரமும் பலரும் அறிந்ததே. எந்தெந்த மொழிகளில் ராமாயணம் எழுதப்பட்டதோ அந்தந்த மொழிகளில் சீதை மோதிரம் பெற்ற காட்சி கட்டாயம் இருக்கும். காளிதாசனும் ரகுவம்சத்திலும் இதைக் குறிப்பிடுவான்.
காளிதாசனின் மற்றொரு நாடகமான மாளவிகா அக்னிமித்ரத்திலும் பாம்பு மோதிரம் வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்தில் கலித்தொகையில் மருதன் இளநாகன் பாடிய மருதக் கலியில் சுறாமீன் மோதிரம் பற்றி வருகிறது. விசாகதத்தன் எழுதிய முத்ரா ராக்ஷசத்திலும் மோதிரம் முக்கியப் பங்கு ஆற்றுகிறது.
இலக்கிய நயத்தை ரசிப்பவர்களுக்கு மட்டுமின்றி மோதிர ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கும் இவற்றிலிருந்து பல செய்திகள் கிடைக்கின்றன:–
Ring found near Karur in a Perumal temple
1.மோதிரங்கள் அரசாங்க முத்திரைகளாக பயன்படுத்தப்பட்டன.
2.சகுந்தலைக்கு துஷ்யந்தன் கொடுத்த மோதிரத்திலும், சீதைக்கு ராமன் அனுப்பிய மோதிரத்திலும் அவரவர் பெயர்கள் இருந்தன. அதை அந்தப் பெண்மணிகள் படித்தனர். அந்தக் காலத்தில் பெண்களுக்கு எழுத்தறிவு இருந்ததை இது காட்டுகிறது.
3.மாளவிகாக்னிமித்ர நாடகத்தில் பாம்பு மோதிரம் மூலம் விஷம் இறக்கப்படுகிறது. மோதிரம் குறித்த நம்பிக்கைகளை இது காட்டுகிறது.
4.சகுந்தலையை மணம் புரிய விரும்பிய துஷ்யந்தன் நிச்சயதார்த்த மோதிரமாக அவளுக்குக் கொடுக்கிறான். இப்பொழுது வெளிநாடுகளில் “என்கேஜ்மென் ட் மோதிரம்” — என்பது மிகப்பெரிய விஷயம்- மிகப்பெரிய பிஸினசும் கூட. இந்த வழக்கத்தை உலகிற்குக் கற்பித்தவர்கள் இந்துக்களே.
Romanian ring
5.ராமர், துஷ்யந்தன் மோதிரங்களில் அவரவர் பெயர் இருந்தது அந்த காலத்தில் இருந்த பெயர் எழுதும் வழக்கத்தையும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னமேயே இப்படி பெயர்கள், எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதையும் காட்டுகிறது. சிந்துவெளி எழுத்து முத்திரைகளிலும் பெயர்கள், ஊர்கள் இருக்கலாம்.
6.கலித்தொகையில் பரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவனுக்கு ஒரு பரத்தை மோதிரம் கொடுத்ததும் அதில் சுறாமீன் படம் இருந்ததும் தெரியவருகிறது. பரத்தையிடம் எல்லோரும் பொருளை இழப்பர். ஆனால் இங்கோ பரத்தை அன்பின் மிகுதியால் ஒரு வாடிக்கையாளருக்கு மோதிரம் கொடுத்ததை அறிகிறோம்.
Roman ring with their names
7.கலித்தொகை மோதிரக் காட்சியில் தலைவி கோபத்துடன் வசைமாரி பொழிவது தெரிகிறது. மன்மதனின் மகரக் கொடியில் உள்ள சுறாமீன் படத்தைக் காட்டி உன் இதயத்தை நிரந்தரமாக வசப்படுத்துகிறாளோ என்று தலைவனையும் விலைமாதரையும் குறை கூறுகிறாள்
8.வெளிநாடுகளில் மோதிரங்கள், கிரீடங்கள், நகைகள் ஆகியவற்றை காட்சிக்கு வைக்கின்றனர். இதனால் அவர்களுக்குப் பெரும்பொருள் கிடைக்கிறது. இந்தியர்களும் இவ்வாற் செய்யவேண்டும். நாம் அனைத்தையும் உருக்கி அழித்து விட்டோம் — ஆனால் இன்னும் கூட மன்னர்களின் அரண்மணைகளிலும், கோவில்களிலும் பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றிலும் ஆராய்ச்சி செய்யலாம்.
9.இந்திய செல்வங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஏல நிறுவனங்களுக்கு ரகசியமாக வந்து விடுகின்றன. இதைத் தடுக்க அரசும், சர்வ தேச நிறுவனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
10.ரோமானிய மோதிரங்களை தமிழர்கள் இறக்குமதி செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. மீன் பொறித்த, டால்பின் பொறித்த மோதிரங்கள் கிரேக்க , ரோமாஇய கலாசாரங்களில் உள்ளன. கப்பல் ஓட்டி வரும் மாலுமிகள் அனதந்த நாட்டிலுள்ள விலைமாதர்களிடம் செல்வதும் செல்வங்களை இழப்பதும் உலகறிந்த விஷயம். பாலியல் நோய்களுக்கே கடலோடி நோய்/ மாலுமி நோய்கள் என்று பெயர்.
Tamil heritage foundation later adopted this emblem from the ring that disppeared mysteriously from Tamil Nadu.
11.ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் ரத்ன அங்குலீயம் அணிந்த மன்னர்களைக் குறிப்பிடுவான். திருப்பதி, திருவனந்தபுரம் கோவிலகளிலும் மன்னர்களின் அரண்மனை கஜானாக்களிலும் இன்று அதுபோல மோதிரங்கள் இருக்கின்றன. அவைகளைக் காட்சிக்கு வைத்தால் பெரும்பொருள் கிடைக்கும்.
இதோ கலித்தொகை மோதிரப்பாடல்:
சிறுபட்டி; ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ? யாம் காண்கு;
அவற்றுள் நறாவிதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
குறி அறிந்தேன்; காமன் கொடி எழுதி என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் —–
( மருதக் கலி, கலித்தொகை)
Romanian cameo ring
சீதைக்குக் கிடைத்த மோதிரம்
சுந்தர காண்டத்தில் சீதையிடம் அனுமன் மோதிரத்தைக் கொடுக்கவும் அதில் ராம என்னும் நாமத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறாள் சீதா தேவி. அனுமன் மீது புதிய நம்பிக்கை பிறக்கிறது. அந்தக் காலத்தில் புதியோரிடம் இப்படி அடையாளப் பொருளைக் கொடுத்து அனுப்புவது வழக்கம் என்றும் தெரிகிறது
இதே போல துஷ்யந்தன் கொடுத்த மோதிரமே கடைசியாக சகுந்தலையை மன்னனிடம் இணைக்கும் சாட்சியாக / தடயமாக அமைகிறது. அதை அவள் சோம தீர்த்தம் என்னும் இடத்தில் புனித நீராடுகையில் தவற விடவே அதை ஒரு மீன் விழுங்குகிறது அதைப் பிடித்த செம்படவர்கள் அதை அரசனிடம் சேர்ப்பிக்கின்றனர். அது பழைய நினைவுகளைக் கொணரவே அவன் மீண்டும் சகுந்தலையை ஏற்கிறான். அதற்கு முன்னர் அவளை யார் என்று தெரியாது என்கிறான். அவன் கொடுத்த நிச்சயதார்த்த மோதிரத்தை அவனே மறந்து விடுகிறான்.
காளிதாசனின் மாளவிகா அக்னிமித்ர நாடகத்தில் வரும் பாம்பு மோதிரமும், ரகு வம்சத்தில் வரும் சீதை மோதிரக் காட்சியும், சாகுந்தலத்தில் வரும் மோதிரக் காட்சியும், விசாக தத்தன் நாடகத்தில் வரும் மந்திரி ராக்ஷசனின் மோதிரக் காட்சியும் வால்மீகி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட கருவில் உருவானவையே என்பதில் ஐயமில்லை.
கொடுங்கோலர்களான நந்த வம்சத்தினரின் ஆட்சியினை சாணக்கியன் என்னும் பார்ப்பனன் வேருடன் வீழ்த்திய முத்ரா ராகஷச வரலாற்று நாடகத்தில் நந்த வம்ச மன்னன் மந்திரி ராக்ஷசனின் மோதிரம் முக்கியப் பங்காற்றுகிறது.
ஆக மோதிரம் என்பது பழங்காலத்தில் முக்கிய அடையாளம், முத்திரை, அரசாங்கச் சின்னம் என்பதை அறிய இந்த இலக்கியக் குறிப்புகள் உதவும். மேலை நாடுகளில் மோதிரங்கள் பற்றிய தனி ஆராய்ச்சிப் புத்தககங்கள் கிடைக்கின்றன. கண்காட்சிகளில் மோதிரங்கள் பளிச்சிடுகின்றன. நாமும் மோதிர ஆரய்ச்சி செய்து இருக்கும் மோதிரங்களிலாவது கிடைக்கும் வரலாற்றுத் தடயங்களை அறிதல் வேண்டும்.
தமிழ் நாட்டில் கிடைத்த ஒரு அருமையான ரோமானிய மோதிரம் ஒரு சில நாட்களுக்குள் மாயமாய் மறைந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அது இப்பொழுது வெளிநாட்டில் இருக்கும் என்பதும் அதைவிற்றவர் பல லட்சம் பெற்றிருப்பார் என்பதும் ஊகித்தறியக்கூடியதே.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.