Research Paper written by london swaminathan
Research article No 1612; Dated 30th january 2015
இந்தியா ஒரு அதிசய நாடு. பழங்கால இந்தியாவோ மிகமிக அதிசய நாடு! 15 லட்சம் சதுர மைல்கள் பரப்புடைய அகண்ட பாரதம். அத்தனைக்கும் ஒரே எழுத்து– பிராமி என்னும் லிபி. பிராமி என்றால் சரஸ்வதி என்று பொருள்! எவ்வளவு பொருத்தமான பெயர்! வட மேற்கு மூலையில் இருக்கும் ஆப்கனிஸ்தான் முதல் (கரோஷ்டி லிபியும் உண்டு) கர்னாடகா வரை பிராமி லிபியில் அசோகனின் கல்வெட்டுகள்! இலங்கையின் தென் கோடியிலும் பிராமி லிபி. இவ்வளவு அகண்ட பரப்பில் ஏன் இப்படி எழுதினர்? ஏன் எனில் இந்தியர்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும்.
இதைவிட பெரிய அதிசயம்– பழனி அருகில் கிடைத்த 2500 ஆண்டுப் பழமையான பிராமி கல்வெட்டில் வைரம் (வயிர) என்ற சம்ஸ்க்ருதச் சொல்!! ஜ என்பதை ய என்று எழுதுவது மரபு- உலகம் முழுதுமுள்ள இலக்கண விதி! வஜ்ர என்ற வடமொழிச் சொல் வைர /வயிர என்று எழுதப்பட்டுள்ளது. (எ.கா. ஜாமம்=யாமம், ஜீஸஸ்= யேசு, அஜன்=அயன், ஜூ=யூத, ஜோஸப்= யூசுப் , ஜாத்ரா=யாத்ரா, ராஜா= ராயல்; இன்னும் நூற்றுக் கணக்கில் எழுதி வைத்துள்ளேன்).
இந்த எழுத்து பல்லவ கிரந்தமாக மாறி தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் இன்றும் புழங்குகின்றன.
உலகம் முழுதும் உள்ள ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான இலக்கியங்கள் உள. வால்மீகி, வியாசன், உலகப் புகழ் காளிதாசன், கம்பன், இளங்கோ, வள்ளுவன், ஹோமர், வர்ஜில், பிளாட்டோ,சாசர், ஷேக் ஸ் பியர் — என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் மன்னர்களே புத்தகங்கள் எழுதியது உண்டா? இந்தியாவில் மட்டும் உண்டு.
மற்ற இடங்களில் இருந்தாலும் ஒன்றிரண்டு இருக்கலாம். இந்திய மக்களும் மன்னர்களும் அறிவாளிகளாக இருந்த காரணத்தால் இந்த நூல்கள் பெருகின. ஹோமரும் மோஸஸும் பிறப்பதற்கு முன்னரே இந்தியாவில் வேதங்களும் அது தொடர்பான இலக்கியங்களும் பெருகின. அளவே இட முடியாத அளவுக்கு!! உலகில் மிகச் சிறந்த அறிவாளிகள் இங்கு இருந்ததே இதற்குக் காரணம்.
இதோ இதற்கான சாட்சியங்கள்:
தமிழ் மன்னர்கள் இளம் பெருவழுதி, அறிவுடை நம்பி, நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், மாக்கோதை, கணைக்கால் இரும்பொறை, மஹாராணி பூதப் பாண்டியன் பெருங் கோப்பெண்டு முதலிய பலர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.
மன்னன் விச்வாமித்திரன் எழுதிய மந்திரங்கள் வேதத்தில் உள்ளன! அவர் பிராமணர் இல்லை. இருந்தபோதிலும் அவர் “எழுதிய” (காதில் கேட்ட) காயத்ரீ மந்திரத்தைத் தான் பார்ப்பனர்கள் முப்போதும் எப்போதும் ஓதுவர்.
யாதவ மன்னன் — இடைச் சாதி கண்ணன் – அருளிய பகவத் கீதை உலகப் பெரும் நூல்.
ஜனக மன்னர் விவாதித்த உபநிஷத்துகளும் மன்னர் கொடுத்தவை.
யவனர் ,சகரர் இன மக்களை பாரத மண்ணில் இருந்து ஓட ஓட விரட்டிய விக்ரமாதித்தன், காளிதாசனை ஆதரித்ததோடு வேதாளக் கதைகள் தோன்றவும் காரணம் ஆனான்.
காஷ்மீரைச் சேர்ந்த புலவன் மாத்ருகுப்தன் மன்னர் பதவி வகித்தான். பல நூல்களை எழுதினான்.
காளிதாசனுடன் தொடர்புடைய மற்றொரு மன்னன் போஜன். இது விக்ரமாதித்தனின் வேறு ஒரு பெயராகவோ அல்லது அவனுக்கு அடுத்து வந்தவனாகவோ இருக்கலாம். தமிழில் கூட கபிலர், பரணர் போன்ற புலவர்கள் பல மன்னர்களைப் பாடினர். அதைப் போல காளிதாசனும் பல மன்னர்கள் ஆட்சிக் காலம் வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
போஜன் என்றாலே அறிவாளி என்னும் பொருள் இருந்ததால், எல்லா புத்திசாலி மன்னர்களும் தன்னை போஜன் என்று அழைத்துக் கொண்டனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நூலில் மூன்று போஜ மன்னர்களைக் குறிப்பிடுகிறார். வேதகால இலக்கியமான ஐதரேய பிராமணத்தில் போஜ மன்னன் பெயர் வருகிறது. ஆக பல போஜர்கள் இந்தியாவை ஆண்டார்கள்.
ஆயினும் வலரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பத்தாம் நூற்றாண்டு போஜ மன்னர் 84 நூல்களை எழுதி உலகப் புகழ் பெற்றுவிட்டார். இவர் இத்தாலிய அறிஞர் லியார்னோடா டா வின்ஸியைவிட அதிக விஷயங்களை எழுதிவிட்டார். குதிரை சாத்திரம் முதல் விமான சாஸ்திரம் வரை எல்லாம் இவருக்கு அத்துபடி. இவர் வாழ்ந்த தாரா என்னும் மத்தியப் பிரதேச நகரில் இவரது ஸம்ஸ்கிருத இலக்கண சித்திரக் கவி ஒன்று, ஒரு மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் 1932ஆம் ஆண்டு மயிலாப்பூர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விவரங்களை எனது ஆங்கிலக் கட்டுரையிலும் காண்க:
Old Sanskrit Inscriptions in Mosques and on Coins
https://tamilandvedas.com/2012/03/17/old-sanskrit-inscriptions-in-mosques-and-on-coins/
பல்லவ மன்னனின் காமெடி நாடகம்
அப்பர் என்னும் திரு நாவுக்கரசரை படாத பாடு படுத்தியவன் மாமன்னன் மகேந்திர பல்லவன் (கி.பி.600-630). அவனே பின்னர் சைவ சமயத்துக்குத் திரும்பினான். அவன் காபாலிகர், புத்த, சமண சன்யாசிகளில் இருந்த கபட வேட தாரிகளைக் கிண்டல் செய்து மத்த விலாசப் பிரஹசனம் என்ற சம்ஸ்கிருத நகைச்சுவை நாடகத்தை எழுதினான்.
இதே காலத்தில் வாழ்ந்த ஹர்ஷ வர்தனன் என்னும் மன்னன் மூன்று வடமொழி நாடகங்களை எழுதினான். நாகா நந்தம், பிரியத்ர்சிகா, ரத்னாவளி என்ற மூன்றில் நாகனந்தம் மட்டும் ஜீமூடவாகனன், நாகர்கள் பற்றியது மற்ற இரண்டும் காதல் கதைகள்! உதயணன்- வாசவதத்தா காதல் விடயத்தை அடிப்படையாக உடையவை.
கங்கா தேவியின் மதுரா விஜயம்
மதுரை மீனாட்சி கோவில்— துலுக்கர்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மூடிக்கிடந்தபோது விஜய நகர மாமன்னர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற குமார கம்பண்ண என்ற நாயக்க மன்னர் தலைமையில் படைகளை அனுப்பினர். அவன் மாபெரும் வெற்றி கண்டு தமிழகம் எங்குமுள்ள கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். அவன் படை எடுத்த போது அவனுடன் கூடவே வந்தாள் அவனுடைய மனைவி மஹாராணி கங்காதேவி. அவள் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல தான் கண்டவற்றை அப்படியே சம்ஸ்கிருதக் கவிதையாகப் பொழிந்து தள்ளினார். இந்த நூலின் பெயர் மதுராவிஜயம். உலகில் போர் பற்றிய முதல் நேரடி வர்ணனை இந்த நூலில்தான் உள்ளது— மற்ற நூல்கள் போர் முடிந்தபின் எழுதியவை.
ராஜபுத்திர இளவரசி மீராபாய் பாடிய 1300 பஜனைப் பாடல்களை யார் மறக்க முடியும்?
விஜய நகர மன்னர்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் ஸ்ரீரங்க நாதர் மேல் ஆண்டாள் கொண்ட பக்தியை மெச்சி தெலுங்கில் ஆமுக்தமால்யதா என்னும் காவியத்தைப் படைத்தார்- வாழ்னாள் முழுதும் போர்கள் செய்து வெற்றி வாகை சூடிய ராயருக்கு புத்தகம் எழுதவும் நேரம் கிடைத்தது இந்திய மண்ணின் மகிமை.
உலகில் பல மொழிகளில் புகழ் மிகு இலக்கியங்கள் உண்டு என்று கண்டோம். ஆயினும் பழங்காலத்தில் இப்படி இல்லை. எகிப்தில், பாரசீகத்தில், சுமேரியாவிலும் நூல்கள் இருந்தன. ஆனால் அவைகளை இலக்கியங்கள் என்று சொல்ல முடியாது சுமேரியாவில் இரண்டு கிளை மொழிகளில் தலா 60,000 வரிகள் வீதம் எழுதி வைத்துள்ளனர். ஆயினும் இவை எல்லாம் நூல்கள் ஆகா.
மனு என்பவர் வேத காலம் முதல் பெயர் பெற்ற மன்னர் ஆவார். இவர்தான் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதியவர். இவருக்கு முன் பாபிலோனிய ஹமுராபி (கி.மு 1750) வாழ்ந்தார் என்று சொல்வோரும் கூட, ஹமுராபியின் சட்டதிட்டம் புத்தக வடிவில் இல்லை என்பதை அறிவர். மனுவின் பெயர் வேதத்தில் உள்ளது. வேதத்தின் காலம் கி.மு 4000 என்கபார் ஜெர்மன் அறிஞர் ஜாகோபி.
வேறு சில அரச எழுத்தாளர்களின் பெயர்கள்:
யசோவர்மன் – கி.பி.735
காலசூரி மயூர ராஜா–கி.பி.800
விக்ரஹ ராஜ தேவ – கி.பி. 1153
நேபாள மன்னன் அமோக வர்ஷன் – எட்டாம் நூற்றாண்டு.
Bhoja statue in Bhopal, M.P. India
இந்தியமன்னர்கள் அருமையான நூல்களை எதற்காக எழுதினார்கள்? நாம் படித்துப் பயன் பெற வேண்டும், எழுதியவர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தானே! போஜன் எழுதிய 84 நூல்களையும் படிப்போம்; நாகானந்தம், ரத்னாவளி,ஆமுக்த மால்யதாவைப் படித்து ரசிப்போம். மத்தவிலாசப் பிரஹசனத்தைப் படித்துச் சிரித்து மகிழ்வோம்.
contact swami_48@yahoo.com
–சுபம்–