One of the Biggest Lingas, Thanjavur Brhadeeswar Temple, Tamil Nadu
மஹா சிவராத்திரி அன்று சிறப்பான சில சிந்தனைகள்!
சிவராத்திரி சபதம்!
Post No.1655; Dated 16th February 2015
by ச.நாகராஜன்
எளியவரின் கேள்விகள்
கடவுள் இருக்கிறாரா?
இருக்கிறார் எனில் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?
அவரை என்னால் ஏன் காணமுடியவில்லை? எப்படிக் காண முடியும்?
யாருடன் நான் சேர்வது? யாரை நான் உதறுவது? சுருக்கமாகச் சொல்லப் போனால் யாருக்கு நான் ஓட்டுப் போடுவது?
இப்படி எல்லாம் கேள்வி எழுவது உலகியல் வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்!
இதற்கான பதில்களை அற்புதமாக அருளாளர்கள் தங்கள் அழியாப் பாடல்களில் தந்துள்ளனர்.
Thirukkaravasal Maragatha (Emerald )Linga
அப்பரின் அற்புத பதில்கள்!
இவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துள்ள அழியாத் தவநெறிச் செல்வர் அப்பரின் அருளுரைகளை சிவராத்திரி தினத்தன்று பார்த்துத் தெளிவோம்!
“விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்” என்கிறார் அப்பர். விறகிலே தீ போல பாலிலே நெய் போல மறைந்து நின்று இருக்கிறான் எம் சிவ பிரான் என்பதே கடவுள் இருக்கிறாரா, எங்கே இருக்கிறார் என்று கேட்பவருக்கான பதில்!
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
எப்படி இருக்கிறார் எனில் மாசு இல்லாத வீணை போல, மாலை மதியம் போல, வீசுகின்ற தென்றல் போல, வீங்கு வசந்தம் போல மூசு வண்டறை தடாகம் போல அவனது நீழல் உள்ளது என்பதே எப்படி இருக்கிறார் என்பதற்கு அவர் தரும் பதில்!
One of the Natural wonders of the World-Ice Linga of Amarnath Caves, Kashmir, India
நியூட்டனின் பதில்!
பிரபல விஞ்ஞானி நியூட்டன் ஒரு பெரும் ஆத்திகவாதி. அவரது நண்பர் ஒருவரோ பெரிய நாத்திகர். நியூட்டனின் கடவுள் பக்தியை அவர் ஏற்கவில்லை. ஒரு நாள் நியூட்டன் சூரிய மண்டலத்தின் மாதிரி ஒன்றை ஸ்கேல் மாடலில் அதாவது சிறிய் அளவில் சூரிய மண்டலம் இருப்பது போலவே சுற்றி வரும் கிரகங்களின் தூரம். ஓடு பாதை. அளவு ஆகியவற்றை எல்லாம் நிர்ணயித்து சுழலும்படியான ஒரு அமைப்பில் செய்து வைத்திருந்தார். அற்புதமான அந்தச் சாதனத்தில் ஒரு சிறிய கைப்பிடியைச் சுற்றினால் கிரகங்கள் தனது இயல்பில் சுழல அதனதன் ஓடு பாதையில் அது அது தனது வேகத்தில் சென்று சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்.
நியூட்டனின் நண்பர் ஒரு நாள் உள்ளே வந்தார். இந்த அபாரமான அமைப்பைப் பார்த்து பிரமித்து நின்று விட்டார். அப்போது அந்த அறையின் ஓரத்தில் தன் மேஜையின் அருகே நாற்காலில் அமர்ந்து நியூட்டன் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். வந்த நண்பர் வியப்புடன் கூவினார்:” ஆஹா! பிரமாதம்! நியூட்டன்! இதை யார் செய்தது?” அவரது ஓங்கிய குரலுக்கு நியூட்டனிடமிருந்து சுவாரசியமின்றி சாந்தமான குரலில்,”ஒருவரும் இல்லை!” என்று பதில் வந்தது. தனது கேள்வியை நியூட்டன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணிய நண்பர் சற்று உரக்க,”இதை யாரேனும் செய்திருக்க வேண்டுமே! யார் செய்தது என்று நான் கேட்கிறேன்!” என்றார்.
Crystal/ Spatika Linga
இன்னும் அமைதியான தாழ்ந்த குரலில் நியூட்டன், “அது தான் ஒருவரும் செய்யவில்லை என்கிறேனே” என்றார்.
இப்போது நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. தன் நண்பர் இடக்காகப் பதில் சொல்கிறார் என்று நினைத்த அவர் நியூட்டனிடம் சென்று அவரின் தோளைக் குலுக்கி, “ யாரும் செய்யாமல் இது எப்படி உருவானது? தானே தோன்றியதா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அவரைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் நியூட்டன். வானத்தைச் சுட்டிக் காட்டினார், பிறகு சொன்னார்:” இதோ மேலே பாருங்கள். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், அதன் சுழற்சிகள்! இவை எல்லாம் தானே சுற்றுகையில் இந்த வெறும் சாதனம் தன்னைத் தானே தோற்றுவித்திருக்கக் கூடாதா, என்ன!”
One of the most beautiful Natarajas; smiling Nataraja of Gangai Konda Choza Puram, Tamil Nadu
நியூட்டனின் பதிலால் விக்கித்து நின்று விட்டார் அவர். கோடானு கோடி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் இன்ன பிறவற்றையும் தோற்றுவித்தவன் யார்? அவருக்கு உறைத்தது. அன்று முதல் அவர் சிறந்த ஆத்திகரானார்.
விஞ்ஞானி நியூட்டன் சொன்ன பதிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “இயற்கையைப் பார்; அதைப் படைத்தவனை அறி” என்று மூசு வண்டறைப் பொய்கையைக் காட்டிக் கூறிய அருளாளர் அப்பர்,
“விறகில் தீ ஆகவும், பாலில் நெய்யாகவும் மறைய நின்றிருப்பவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்று கூறி அவனைப் பார்க்க – அடைய – உறவு என்னும் கோலை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் அவன் நம் முன் வந்து நிற்பான்”
என்கிறார்.
Sringeri Acharya’s Abhisheka to Spatika Linga
இதை விட அற்புதமாக எளிமையாக இறைவனை அடையும் வழியை யாரேனும் சொல்லி இருக்கிறார்களா?!
“விறகில் தீயினின் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணி ஜோதியான்
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே”
தென்னாடுடைய சிவன் அவன்! எந்நாட்டவர்க்கும் இறைவன் அவன்!
வாழ்த்த வாயும் நினைக்க மனநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தநத தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
ganapathy Sachidananda Swamiji’s Abhishek to Lord Shiva
வீழ்த்த வாவினையே நெடுங்காலமே என்று பலகாலம் சிவனை எண்ணாமல் காலம் கழித்த தன் வினையை எண்ணி நோகிறார் அப்பர். இப்படி அவர் சொல்வதற்கான காரணம் நம்மை நல் நெறிப் படுத்தவே!
“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்” என்று நம்மை அறை கூவி அழைக்கும் அப்பர் இறைவனை காண முடியாமல் நாம் இருப்பது நம் பண்டை வினைப் பயனாலே என்பதைச் சொல்லி, “ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே” என்கிறார்.
1008 Lingas at Tiruvannamalai, Tamil Nadu
யாருடன் சேர்வது!
இப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அப்பர் யாருடன் சேருவது, யாரை உதறுவது, இன்னும் கேட்டால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தானா சொல்ல மாட்டார்!
“சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லர் ஆகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!”
என்ற அவரது வாக்கு அள்ள அள்ளக் குறையாத சங்க நிதி, பத்ம நிதி இரண்டையும் கொடுத்து பூலோகம் இந்திர லோகம் இரண்டையும் ஆளும் உரிமையையும் தந்தாலும் அவர் சிவனுக்கு அன்பர் இல்லை எனில் அவர் செல்வத்தை உதறி எறிந்து அவரையும் உதறுவோம். மாறாக கொல்லக் கூடாத பசுவைக் கொன்று தின்னும் புலையன் என்றாலும் அவன் சிவனின் அன்பன் எனில் அவனை கடவுளாக வணங்கி அவன் தாள் பணிவோம்” என்கிறார்!
Curd/ Yogurt Abhishek
ஆழ்ந்த கருத்து உடைய இந்தப் பாடல் சிவ அன்பர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் பேணிக் காப்பதற்கான லட்சியப் பாடல்!
சிவனை வணங்காதார் முகம் பார்க்காதே என்று அவர் சொல்லும் போதே பணத்தையும் சலுகைகளையும் தந்து ஓட்டுக் கேட்கும் நாத்திகர் பக்கம் சேராதே, மாறாக எளியவராக இருந்தாலும் சிவன் கோவிலையும் சிவ பக்தியையும் போற்றும் நல்லோரை நாடு, வணங்கு என்று அவர் கூறுவதில் இக உலக இயலுக்கான உபதேசமும் அதில் அடங்கி இருக்கிறதல்லவா!
சிவராத்திரி சபதம்
மஹா சிவராத்திரி அன்று அப்பரின் அருளை வேண்டி மாபெரும் சபதம் ஏற்போம்!
சிவனை வணங்காத நாத்திகரை ஒரு நாளூம் சேரோம்; எம் நண்பர்களையும் சேர விடோம்; சிவ பக்திச் செல்வர்களுடன் இணங்குவோம்; அவர்களை வணங்குவோம் என்ற சபதம் ஏற்று முன்னேறுவோம்.
சிவ பிரானின் தமர் (தமர் – உறவினர்) நாம் , ஆகவே அவர் வாக்குப் படி
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”
தென்னாடு உடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
Bilva/ Vilva Archana to Lord Siva
************
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.