Research Article No.2026
Written by S NAGARAJAN
Swami_48@yahoo.com
Date : 29 July 2014
Time uploaded in London : 6-13 am
ச.நாகராஜன்
பாரதியாரின் ஆய்வு
பாரதத்தில் உள்ள ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் பற்றி ஆழ்ந்த ஆய்வு செய்தவர் மஹாகவி பாரதியார் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.
இந்த ஆய்வின் முடிவில் அவர் பல நல்ல கருத்துக்களை தேசம் உய்வதற்காகக் கூறியுள்ளார்.
எந்த உண்மையையும் சொல்ல அவர் தயங்கியதே இல்லை என்பதே மஹாகவியின் வாக்கை சத்திய வாக்காகக் கொள்ள வைக்கிறது.
அவரது பல கட்டுரைகள் மற்றும் பாடல்கள் வெவ்வேறு கால கட்டங்களில் கிடைக்கப் பெற்றதால் அவை மொத்த தொகுப்பு நூல்களாக அனைவரும் வாங்கிப் படிக்கும் படி இது வரை வரவில்லை.
ஆகவே முயன்று தான் அவரது “ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் காண” வேண்டியதாயிருக்கிறது.
‘முஸ்லீம்களின் சபை’ என்ற கட்டுரை 1910,பிப்ரவரி முதல் தேதியிட்ட ‘விஜயா’ இதழில் வெளி வந்துள்ளது. அதில் ஹிந்து–முஸ்லீம் ஐக்கியத்தைப் பெரிதும் பாரதியார் வலியுறுத்துகிறார்.
பாரதத்தில் உள்ள முஸ்லீம்கள் யார்?
அந்தக் கட்டுரையின் கடைசி பாரா இது:
“இந்தியாவிலுள்ள மஹம்மதீயர்கள் யார்? இவர்களெல்லாம் ஹிந்துக்களாய் இருந்து, பிறகு மஹம்மதீய துரைத்தன நாளில் இஸ்லாம் மதத்தைத் தழுவினவர்களே. அப்படியிருந்தும், மதம் வேறுபட்ட போதிலும், நடை, உடை, பேச்சு, பழக்க வழக்கங்கள், இவைகள் இன்னும் மாறவேயில்லை. மஹம்மதீயச் சக்கரவர்த்திகள் அரசாண்ட டில்லி மாநகரில் இம்மூன்று மஹம்மதீயத் தலைவர்கள் ஹிந்து முஸ்லீம்களின் ஐக்கியத்தைப் பற்றி வற்புறுத்திப் பேசியது யாவரும் கொண்டாடத்தக்கினதே. அதன்படி மஹம்மதீயர்கள் நடந்து கொள்வார்களாக!”
மிகத் தெளிவாக இப்படி பாரத தேசத்தின் இன்றைய முஸ்லீம்கள் ஒரு காலத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்களே என ஆணித்தரமாக மகாகவி கூறுகிறார்.
கட்டுரையில் குறிப்பிடப்படும் மூன்று மஹம்மதீயத் தலைவர்கள் – 1) ஆகா கான் 2) ரைட் ஹானரபில் அமீர் அலி 3) ஆற்காட்டு நவாபு வம்சத்துச் சிற்றரசர்.
இவர்கள் ஹிந்து முஸ்லீம் இணைந்து பாடுபட வேண்டுமென்ற கொள்கையை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை
பாரதியாரின் சொற்களில், “மஹம்மதீயர்களாகிய தங்கள் மதத்தினவர்களெல்லாம் ஒரு ஜாதி; மற்ற இந்தியர்களெல்லாம் வேறு ஜாதி” என்று சொல்லி வந்தனர்.
ஹிந்து–முஸ்லீம் ஒற்றுமை தேவை
ஆனால் காங்கிரஸில் உள்ள, “பல முஹம்மதீய மேதாவிகளும் ஶ்ரீ நவுரோஜி முதலானவர்களும் ஹிந்துக்களும் மஹம்மதீயர்களும் ஒத்துழைப்பது தான் இந்தியாவிற்கு நன்மை உண்டாக்கும்” என்றனர்.
பாரதியார் மேலும் கூறுகிறார்:-“இவ்விருவரும் இந்தியாவின் கண்கள். ஒரு கண்ணை நொள்ளையாக்க முயன்றால் மற்றதும் நொள்ளையாகி விடும். ஐக்கியமே பலம். பிரிவே பலவீனம் என்று அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி வந்தனர்.”
பல காரணங்களால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத தலைவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொண்டனரே என்று மகிழ்கிறார் பாரதியார்.
“அந்த ஹிந்து மஹம்மதீய ஐக்கியத்தின் ஆவசியகத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததற்காக நாம் மனமார வந்தனம் செலுத்துகிறோம்” என்கிறார் அவர்.
ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் மஹாகவி அவர்கள் ஆதியில் ஹிந்துக்களே என்பதையும் கூறி விடுகிறார். ஒற்றுமைக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவிக்கிறார்.
விடுதலைக்கு வீறு பெற சிவாஜியின் பேச்சு
இந்த தேசத்தின் எழுச்சிக்கு, நாம் துருக்கருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த சிறுமையை சிவாஜி வாயிலாக எடுத்துக் கூறி, எழுச்சியுற வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார்.
இதை வலியுறுத்தும் விதமாக எழுந்த அற்புத கவிதையே “சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற கவிதையாகும்.
அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
–தொடரும்
You must be logged in to post a comment.