DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by S.NAGARAJAN
Date: 29 September 2015
Post No: 2198
Time uploaded in London :– 8-59 am
(Thanks for the pictures)
விஞ்ஞான விந்தை
‘அறிவியல் துளிகள்’ தொடர், பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. அதில் 239வது அத்தியாயமாக 18-9-2015இல் வெளியான கட்டுரை இது!
டெலிபதி மூலம் செய்திகளைப் பரிமாறும் காலம் விரைவில் வருகிறது!
ச.நாகராஜன்
“ஃபேஸ்புக்கின் எதிர்காலம் டெலிபதி தான்!” – மார்க் ஜுக்கர்பெர்க்
அதிசயங்கள் நிகழும் ஆனந்தமான நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது முன்னோர்களுக்குக் கிடைக்காத அரிய விஞ்ஞான அதிசயங்கள் நம் விரல் நுனிகளில் இன்று இருக்கின்றன. செல் போன். வாட்ஸ் அப், மடிக் கணினி, கணினி வழியே ஸ்கைப், முகநூல் (ஃபேஸ்புக்), ட்விட்டர் இன்ன பிற மென்பொருள்கள் என இவற்றைக் கொண்டு அமர்க்களமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு அடுத்த கட்டம் என்ன என்பதை உலகின் முக்கியமான நபர் ஒருவர் அறிவித்துள்ளார். அது தான் இன்றைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் முக்கிய விஷயம்.
சொன்னவர் ஃபேஸ்புக்கின் இணை நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க். சொன்ன விஷயம் – சமீப எதிர்காலத்தில் டெலிபதி சாத்தியம், மனத்தோடு மனம் பேசப் போகிறோம், உணர்ச்சிகளை தொலைதூரத்திலிருந்து நிஜமாகவே பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்பது தான்.
2015, ஜூன் 30ஆம் தேதி ஒரு கேள்வி–பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தன் அசாதாரணமான வார்த்தைகளால் உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.
“தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நாள் நாம் வளமான சிந்தனைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உரைகள் மூலமாகவும் போட்டோக்கள் மூலமாகவும் இன்று செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறோம். இனி எதிர்காலத்தில் வீடியோவாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அதன் பின்னர் வர்ச்சுவல் ரியாலிடி எனப்படும் மெய்நிகர் நிலை மூலமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்.இதில் புலன் மற்றும் உணர்ச்சிகரமான அனுபவங்கள் தத்ரூபமாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.”
இப்படி ஜுகர்பெர்க் சொன்னதன் உண்மையான அர்த்தம் என்ன? எதிர்காலத்தில் மூளையுடன் மூளை தொடர்பு கொள்ளப் போகிறது. அதாவது டெலிபதி சாத்தியம் தான் என்பதே இதன் பொருள்!
ஒரு ஹெட்செட்டைப் பொருத்திக் கொண்டு பாட்டைக் கேட்கிறோம் இல்லையா, அதே போல ஹெட்செட்டைப் பொருத்திக் கொண்டு மூளையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். நியூரான்கள் மூலமாக நமது மூளை நமது எண்ணங்களை நாம் விரும்பும் இன்னொருவரின் மூளையில் உள்ள நியூரான்களுக்கு அனுப்பும்.
இன்றைய தொழில்நுட்ப ரீதியாகவே ஒருவரின் மூளையை நாம் “படிக்க” முடியும் என்கிறார் பிரிட்டனில் உள்ள வார்விக் ஷைர் பல்கலைக்கழக பயோமெடிகல் பேராசிரியரான கிறிஸ்டோபர் ஜேம்ஸ். ஆனால் மூளை செல்கள் என்ன சிக்னலைத் தருகின்றன என்பது இப்போது தெரிந்தாலும் கூட அது என்ன சொல்கிறது என்பதை – டீ கோட் செய்து – அர்த்தத்தை அறிவது இன்றைய நிலையில் முடியவில்லை.
இந்த சிக்னல்களை டீ–கோட் செய்து விட்டால் ஒருவர் என்ன எண்ணுகிறார் என்பதைச் சொல்லி விட முடியும். அதைக் கண்டுபிடிக்கத் தான் இன்றைய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.
ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும் எண்ணத்தின் மொத்த வோல்டேஜ் மற்றும் மின்சக்தியை அறிய முடிகிறது. ஆனால் அது எதைத் தெரிவிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை! இந்த மர்மம் துலங்கும் நாள் நெருங்குகிறது.
உண்மையில் ஒரு எண்ணம் என்பது என்ன என்பதை விஞ்ஞானிகளால் இன்று கூட விளக்க முடியவில்லை.
அப்படி இருக்கும் போது, ஜுக்கர்பெர்க்கின் தீர்க்கதரிசன வாக்கு எப்படி நடைபெறப் போகிறது?
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு பல விசித்திரமான சோதனைகளை நடத்தி முடித்திருக்கிறது. மூளையின் மோட்டார் கார்டெக்ஸ் (தமிழில் இயக்கப் புறணி) பகுதி வழியே இரு நபர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்யும் சோதனையைத் தான் இந்தக் குழு செய்து பார்த்துள்ளது.
வெவ்வேறு அறைகளில் இருவர் இருக்கின்றனர். அவர்கள் தலையில் எலக்ட்ரோட் பொருத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் வழியே அவர்களில் ஒருவரின் தலையிலிருந்து சிக்னல்கள் கிளம்பி இன்னொருவரின் தலைக்குச் சென்று சேர்கிறது! அதாவது ஒரு மோட்டார் கார்டெக்ஸிலிருந்து இன்னொரு மோட்டார் கார்டெக்ஸுக்குச் செய்தி வெற்றிகரமாகச் சென்று சேர்கிறது! எந்த வார்த்தையை அனுப்புபவர் நினைக்கிறாரோ அதற்கான சிக்னலைப் பெறுபவர் அந்த வார்த்தையையும் டீ–கோடிங் முறையில் சரியாக புரிந்து கொள்கிறார்
இது உண்மையான விஞ்ஞான விந்தை!
ட்யூக் பல்கலைக் கழகத்தில் நடந்தது இன்னொரு விசித்திரமான சோதனை. இரண்டு எலிகளின் மூளைகள் இணைக்கப்பட்டன. முதல் எலிக்கு சிக்னல் தரப்பட்ட போது அது விஞ்ஞானிகள் வைத்திருந்த நெம்புகோலைத் தட்டியது. இரண்டாவது எலிக்கு சிக்னல் தரப்படாமல் இருந்தாலும் இரு எலிகளின் இணைப்புகளால் அதுவும் நெம்புகோலைத் தட்டியது.
இரு மூளைகளும் இணைக்கப்படலாம் என்பதை அறிந்த விஞ்ஞானிகள் பரவசம் அடைந்தனர்.
எலிக்கு எலி சரி! ஆனால் மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? ஆரம்ப கால முயற்சி தான் இது! இதில் முன்னேற வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!
மூளை இணைப்பு சம்பந்தமான ஆராய்ச்சிகள் மும்முரமாக உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.
சும்மா சொல்லவில்லை ஜுக்கர்பெர்க்! நடந்து முடிந்த ஆராய்ச்சிகளின் பலன்களை வைத்தே நாளைய உலகம் பற்றிச் சொல்லி இருக்கிறார்.
யாராவது ஏதாவது சொன்னால் நம்ப முடியாது!
ஆனால் சொன்னவர் ஃபேஸ்புக்கைத் தந்தவர் ஆயிற்றே. கோடிக்கணக்கான மக்களின் முக தரிசனத்திற்குக் காரணமானவர் எதைச் சொன்னாலும் நம்பலாம். டெலிபதி மூலமாகவே அவரைப் பாராட்டும் காலமும் வரலாம்!
***************
You must be logged in to post a comment.