
The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.
Research Article by S NAGARAJAN
Post No.2240
Date: 13 October 2015
Time uploaded in London: காலை 9-34
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
ரிஷிகள் சரித்திரம்
ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?
ச.நாகராஜன்
ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இதிஹாஸங்களும் நமது புராணங்களும் ஏராளமான ரிஷிகளின் சரித்திரத்தைக் குறிப்பிடுகின்றன.
மஹாபாரதத்தில் ஆதி பர்வம் மற்றும் சல்ய பர்வத்தில் வரும் இரு ரிஷிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
அக்னிவேசர்
இவர் அக்னியிலிருந்து ஜனித்தவர். இவர் தவ சக்தியுள்ள ஒரு ரிஷி. பரத்வாஜருடைய சிஷ்யர். இவர் சூத்திரம் இயற்றியவரில் ஒருவர்.
பரத்வாஜரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட ஆக்னேயாஸ்திர மந்திரத்தை பரத்வாஜருடைய புத்திரரும், தம்முடைய சீடருமான துரோணாசாரியாருக்கு இவர் உபதேசம் செய்தார்.
அதே போல, சாதாரண மனிதர்கள் மேல் பிரயோக்கிக்கக் கூடாததும், உலகையெல்லாம் அழிக்கக் கூடியதும், எப்போது பிரயோகித்தாலும் வீண் போகாததுமான “பிரம்மசிரஸ்” என்ற அபூர்வமான தேவாஸ்திரத்தையும் துரோணருக்குக் கொடுத்தார்.
அதை துரோணர் அர்ஜுனனுக்குக் கொடுத்தார்.
அர்ஜுனனுக்கு மட்டும் துரோணர் இதை ஏன் கொடுக்க வேண்டும்? அதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.
ஒரு நாள் அனைத்து சிஷ்யர்களுடனும் கங்கையில் குளிப்பதற்காக துரோணாசாரியர் சென்றார். குளிக்கும் போது, பலமான முதலை ஒன்று அவரது கணுக்காலைப் பிடித்தது. தன்னை விடுவித்துக் கொள்ளும் சக்தி அவருக்கு உண்டு என்றாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. “முதலை என்னைப் பிடித்து விட்டது. காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரலிட்டார். மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். அர்ஜுனனோ ஐந்து அம்புகளை வீசி நீருக்குள் இருந்த முதலையைக் கொன்று துரோணரை விடுவித்தான்.
இதனால் துரோணர் மகிழ்ந்தார்.
அர்ஜுனனுடைய திறமையை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணிய துரோணர், அனைத்து சிஷ்யர்களையும் அழைத்தார்.
துரியோதனன், சித்திரஸேனன், துச்சாஸனன்,விவிம்சதி, அர்ஜுனன், அஸ்வத்தாமா ஆகியோரை முன்னே வரச் சொல்லி, மண்ணால் ஒரு குழந்தையைச் செய்து அதை சிஷ்யர்கள் பார்க்கும் போதே கங்கையில் போட்டார். அனைவரின் கண்களையும் துணிகளால் கட்டி, வில்லைக் கொடுத்தார். “கண் கட்டியிருக்கும்படியே ஜலத்தில் இருக்கும் பொம்மைக் குழந்தையை அடியுங்கள்” என்றார்.
மற்றவர்கள் பேசாமல் இருக்க, அர்ஜுனன் மட்டும் 15 பாணங்களினால் நீருக்குள் மூழ்கி இருந்த அந்த பொம்மையை அடித்தான்.
அனைவரிலும் அர்ஜுனனே திறமைசாலி என்ற முடிவுக்கு வந்த துரோணர் ‘பிரம்ம சிரஸ்’ என்ற அஸ்திரத்தை உபதேசித்தார். அஸ்திரம் விடுவது, திருப்பி வாங்குவது, அதன் சொரூப நிர்ணயம் ஆகிய மூன்றையும் விதிப்படி அர்ஜுனன் கற்றுக் கொண்டான். அர்ஜுனனிடம், “மனிதர்கள், அற்ப சக்தியுள்ளவர்கள் மேல் இதை பிரயோகிக்காதே! மனிதரல்லாத தேவர் முதலியோர் உன்னை வருத்துவாரானால் இதை நீ பிரயோகிக்கலாம்” என்றார் துரோணர். “உலகில் உன்னைப் போன்ற ஒரு வில்லாளி இன்னொருவன் இனிமேல் இல்லை” என்று புகழாரமும் சூட்டினார். (சல்ய பர்வம் 143வது அத்தியாயம்)
(மஹா பாரதம், ஆதி பர்வம், 140வது, 143வது அத்தியாயம்)
அரிஷ்டஸேனர் அல்லது ஆர்ஷ்டிஸேனர்
முன்னொரு காலத்தில் பிரம்மா தமது சக்தியால் “லோகாலோகம்” என்ற பர்வதத்தைப் படைத்து அருளினார். அங்கே ஒரு சிறந்த புண்ணீய தீர்த்தம் இருக்கிறது.
அந்த இடத்தில் அரிஷ்டஸேனர் என்னும் பெரும் முனிவர் கடுமையான தவம் செய்து பிராமணர் என்னும் உயர் பதவியை அடைந்தார்.
இவரைப் பற்றிய இன்னொரு செய்தி மஹாபாரதம் சல்ய பர்வத்தில் நாற்பத்தோராவது அத்தியாயத்தில் வருகிறது:
ஆதி காலத்தில் கிருத யுகத்தில் அரிஷ்டஸேனர் என்ற ஒருவர் இருந்தார். அவர் தனது குருவின் வீட்டில் இருந்து கொண்டு கல்வி கற்று வந்தார்.
அவ்வாறு வெகு காலம் கற்றும், குருகுலத்தில் இருந்தும், அவரது வித்தை ஒரு முடிவுக்கு வரவில்லை. வேதங்களும் முடிவு பெறவில்லை. பிறகு கவலையுடன் அவர் பெரும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் மூலம் வேதங்களை அறிந்தார்.
அவ்வாறு சிறந்த கல்வியையும், வேத ஞானத்தையும் அடைந்து மேலே சொன்ன தீர்த்தத்தில் இருந்து கொண்டு பெரும் பயனைப் பெற்றார்.
அவர் பிறகு அந்தப் புண்ணிய தீர்த்தத்திற்கு மூன்று வரங்களை அளித்தார்.
“இன்று முதல் சரஸ்வதி நதியினுடைய இந்த தீர்த்தத்தில் குளிப்பவன் அசுவமேத யாகம் செய்த பெரும் பயனை அடைவான்.
இன்று முதல் இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு பாம்புகளாலும், காட்டு மிருகங்களாலும் எவ்வித அபாயமும் நேரிடாது.
சிறிய முயற்சிகளைச் செய்பவனும் கூட இவ்விடத்தில் பெரும் பயனை அடைவான்.”
இந்த மூன்று வரங்களையும் கொடுத்து விட்டு அரிஷ்ட ஸேனர் சுவர்க்கத்தை அடைந்தார்.
(மகா பாரதம், சல்ய பர்வம் அத்தியாயம் 41)
—சுபம்–
***
You must be logged in to post a comment.