Compiled by London swaminathan
Post No.2239
Date: 13 October 2015
Time uploaded in London: காலை 9-15
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். சமய சம்பந்தமான நூல்களில் இதுவே உலகில் பெரிய நூல். இது ஒரு பெரிய பொக்கிஷம். கடல் போலப் பரந்த விஷயங்கள் இதில் உள்ளன. இதில் எப்போது மூழ்கினாலும் முத்து, பவளம், வலம்புரிச் சங்குகள் கிடைக்கும். ஆனால் இதிலுள்ள விஷயங்களை யாரும் விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிடவில்லை. இதிலுள்ள கதாபாத்திரங்கள், உவமைகள் முதலியன பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால் பொன்மொழிகளை விஷயம் வாரியாக (சப்ஜெக்ட்) வெளியிட்டால் நன்றாக இருக்கும். கீழேயுள்ள நான்கு ஸ்லோகங்கள் பல முக்கிய விஷயங்களைத் தரும்:
‘லக்கி’ திரவுபதி
சதுர்பி: காரணை: க்ருஷ்ண த்வயா ரக்ஷ்யாஸ்மி நித்யச:
சம்பந்தாத் கௌரவாத் சக்யாத் ப்ரபுத்வேநைவ கேசவ
(மஹாபாரதம், வனபர்வம்,12-127)
திரவுபதியைக் கிருஷ்ணன், காப்பாற்றியதற்கு நான்கு காரணங்கள் உண்டு:
1.சம்பந்தாத் = உறவு முறை
2.கௌரவாத் = மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு
3.சக்யாத்= நட்புமுறை
4.ப்ரபுத்வாத்= இறைவன் என்ற முறையில்
சுவர்க்கத்துக்குப் போக உதவும் படிக்கட்டு எது?
சத்யமே (உண்மை) ஸ்வர்கத்துக்கான மாடிப்படி. அதில் ஏறினால் எளிதில் சொர்க்கத்தை அடையலாம்.
ஏகமேவாத்விதீயம் யத் தத் ராஜன் நாவபுத்யசே
சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் பாராவாராஸ்ய நௌரிவ
(மஹாபாரதம், உத்யோக பர்வம்,33-47)
எவ்வாறு படகு ஒன்று கடல், அல்லது, நதியைக் கடக்க உதவுமோ அவ்வாறு சுவர்க்கம் செல்ல சத்யம் என்பது படிக்கட்டாகத் திகழ்கிறது.
ஏ, மன்னனே, நீ இதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். இதைவிட வேறொன்றுமில்லை.
(சுவர்க்கம் என்பது மேலே இருப்பதால் மேலேறிச் செல்லும் படி உவமையாக்கப்பட்டது)
தர்மத்தின் விளக்கம், இலக்கணம் என்ன?
வேதோக்த: பரமோ தர்ம: தர்மசாஸ்த்ரேஷு சாபர:
சிஷ்டாசாரஸ்ச சிஷ்டானாம் த்ரிவிதம் தர்ம லக்ஷணம்
(மஹாபாரதம், வன பர்வம்,207-83)
தர்மம் என்பது மூன்று இடங்களில் இருக்கிறது:–
வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாம் தர்மம்
தர்மசாஸ்த்ரம் = நீதி நூல்கள் செப்புவது அனைத்தும் தர்மம்
சிஷ்டாசார: = ஆசாரம் பற்றிய விதிமுறைகலைச் சொல்லுவது எல்லாம் தர்மம் ( இதை ஒவ்வொரு காலத்திலும் குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்கள் சொல்லும் மொழிகள் எனக் கொள்ளலாம்)
மற்றவர்கள் வீட்டில் சாப்பிடலாமா?
கிருஷ்ணர், கௌரவர்களின் பெரிய அரண்மனை விருந்தை விட்டுவிட்டு, தேரோட்டி விதுரன் வீட்டில் தங்கினார். ராமன், சபரி என்னும் வேடுவச்சி கடித்துக் கொடுத்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டார். கண்ணாப்ப நாயனார், எச்சில்படுத்டிக் கொடுத்ததை, சிவ பெருமான் ஏற்றார். ஏன்?
சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:
ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்
(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)
அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)
ஆபத்துக் காலத்திலும் எங்கும் சாப்பிடலாம் (உயிரைக் காப்பதே முதல் கடமை; சுவர் இருந்தால்தானே சித்திரம்? உயிர் இருந்தால்தானே சாஸ்திரம்!)
–சுபம்-
You must be logged in to post a comment.