எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல;
ஆன்மீகக் கட்டுரை!!!
Compiled by london swaminathan
Post No.2248
Date: 16 October 2015
Time uploaded in London: 13-26
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி வசித்து வந்தனர். பொழுது விடிந்தால் சண்டைதான். மனைவி ஏதாவது பேசத் துவங்கினால் கணவன் சொல்லுவான்: “வாயை மூடு, இன்னும் ஒரு வார்த்தை பேசினால் நான் வீட்டைவிட்டு வெளியேறி சன்னியாசம் வாங்கிவிடுவேன்.” இதைக் கேட்டவுடன் அவளும் பயந்து வாயை மூடி விடுவாள்! பாவம் அந்தப் பதிவிரதை! ஒன்றும் செய்ய இயலாமல் விழித்தாள், முழித்தாள், தன்னையே பழித்தாள், நாட்களைக் கழித்தாள்!
ஒரு நாள் அவளுடைய கணவன் வெளியூர் வேலையாகப் போனார். அந்தப் பெண்மணியின் புத்தி வேலை செய்யத் துவங்கியது. தன்னுடைய கணவர் அடிக்கடி போய் தரிசித்துவரும் ஒரு துறவி கிராமத்துக்கு வெளியே ஒரு எளிமையான குடிலில் வசிப்பது அவளுக்குத் தெரியும். ஓடினாள், ஓடினாள், ஊரின் எல்லைக்கே ஓடினாள்!
குடிலில் வசிக்கும் குருநாதர் காலில் விழுந்தாள். சுவாமி! காப்பாற்றுங்கள். உங்களை வந்து தரிசித்துப் போகும் என் கணவர் காரணமே இல்லாமல் தினமும் கோபிக்கிறார். நியாயம் சொன்னால் சந்யாசம் வாங்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். நீங்கள்தான் வழி காட்டவேண்டும்” – என்றாள்.
குருநாதர் சொன்னார், “தாயே! அஞ்சற்க. அடுத்த முறை சந்நியாசி ஆவேன் என்று சொன்னால், “அன்பரே , போய்வாருங்கள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை” என்று சொல்லி கதவையும் திறந்து வெளியே அனுப்பிவிடுங்கள். என்னிடம் வரட்டும். அருள் மழை பொழிகிறேன் – என்றார்.
மறு நாளும் வந்தது. சூரியன் உதிக்கத் தவறினாலும் தவறுவான். கணவன் சண்டைபோடத் தவறுவதில்லை! வழக்கமான பல்லவியை ஆரம்பித்தான். நீ ஏதேனும் சொன்னால் நான் வீட்டைவிட்டு வெளியேறுவேன். சந்யாசம் வாங்குவேன் – என்று மிரட்டினான்.
அவள் சொன்னாள், “ அன்பரே! போய் வாரும். உமக்கும் நல்லது, எமக்கும் நல்லது; எனக்கு இகலோக சௌக்கியம் கிட்டட்டும் உமக்கு பரலோக சாம்ராஜ்யம் கிடைக்கட்டும்” – என்று ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’– என்னும் பாணியில் சொல்லிவிட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தாள்.
அவன் ஆண் மகனல்லவா! வீராப்போடு வெளியேறினான். துறவியின் குடிலுக்கு வந்தான். “ஸ்வாமி! ஒரு நற்செய்தி. இன்று முதல் பந்த பாசங்களை வேரறுத்து விட்டேன். இனி எமக்கு எவ்வித உறவுமில்லை. வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்; இனி உங்கள் பணியிலேயே வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன். குருவருள் இருந்தால் திருவருள் கிட்டுமன்றோ என்றான்.
குரு சொன்னார், “ வா மகனே! வா! உனக்காக இவ்வளவு நாளாகக் காத்திருந்தேன். என் காலடியில் அமர்க—என்றார்.
சற்று நேரத்தில், “சிஷ்யர்களே ஓடிவாருங்கள் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்த அற்புத உண்மையை நவில்வேன்! செவி மடுங்கள்!! என்றார். எல்லா சிஷ்யர்களும் வந்தனர். ஒரு சீடனை அழைத்து, சீடனே! வேப்பமரத்திலுள்ள எல்லா இலைகளையும் பறித்து வா. உதவிக்கு இன்னும் பலரை அழைத்துக் கொள் என்றார். அவனும் சிறிது நேரத்தில் வேப்ப மரத்தையே ஒடித்து வந்து நின்றான். அனைவரும் இந்த இலையை அரைத்து லட்டு போல உருட்டுங்கள் என்றார். எல்லோரும் வேப்பிலை லட்டு செய்தனர். இன்று முதல் நமது பிரதான உணவு இதுதான். இதனால் ஆரோக்கியம் பெருகும்; பிரம்மசர்ய சக்தி வளரும் என்றார். உடனே சிஷ்யர்கள், ஆளுக்கு பத்து, இருபது என்று வேப்பிலைக் கட்டிகளை – லட்டுகளை—பார்சல் கட்டிக் கொண்டனர். மனைவியை விட்டுப் புதிதாக வந்த சீடனும் அவ்வாறே செய்தான்.
காலை உணவு , மதிய உணவு, இரவு உணவு, மறு நாள் உணவு – என்று அல்லும் பகலும் அனவரதமும் வேப்பிலைக் கட்டி உணவுதான். திடீரென புது சிஷ்யன் மறைந்து விட்டார்! குருநாதர் ரகசியமாக ஒரு சீடனை உளவு பார்க்க அனுப்பினார். மனைவியை விட்டு ஆஸ்ரமத்துக்கு வந்த அந்த ஆசாமி, மீண்டும் வீட்டுக்கே திரும்பிப் போய்விட்டார் என்றும் வீட்டில் நல்ல சமையல் விருந்து மணம் வீசுகிறது என்றும் உளவாளி கண்டுபிடித்து வந்து குருநாதரிடம் சொன்னார்.
திரும்பிவந்த கணவனுக்கு விருந்துச் சாப்பாடு. அவனும் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டில் அப்புறம் சண்டை சத்தமே இல்லை. வேப்பிலை ரகசியம் அந்த மனைவிக்கும் குருநாதருக்கும் மட்டுமே தெரியும்!
–சுபம்–
You must be logged in to post a comment.