Written by S NAGARAJAN
Date: 3 November 2015
Post No:2296
Time uploaded in London :– 8-11 am
(Thanks for the pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
அறிவியல் துளிகள் தொடர்
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 30-10-2015 இதழில் வெளி வந்த கட்டுரை இது. இந்தத் தொடர் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிறது.
மறு பிறப்பு பற்றிய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தளகர்த்தர்களின் நம்பிக்கை!
ச.நாகராஜன்
“வருந்தாதே. நீ இழப்பது இன்னொரு உருவத்தில் வந்து விடும்!” – ரூமி
உலகின் தலை சிறந்த தளகர்த்தர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறுபிறப்பின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர்கள்.
நெப்போலியன் தன் படையை வழி நடத்திச் செல்லும் போது படை நடுவில் ஆவேசத்துடன் குதிரையின் மீது எழுந்து நின்று இரு கைகளையும் உயர்த்தி “நான் சார்லி மாக்னே நான் சார்லி மாக்னே” என்று உரக்கக் கூவுவானாம். (மாவீரனான சார்லிமாக்னே மேற்கு ஐரோப்பா முழுவதையும் ஒன்று படுத்தியவன். நெப்போலியனுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன்). நெப்போலியனின் ஆவேசத்தைப் பார்க்கும் அவன் படைவீரர்கள் உக்கிரத்துடன் போரிடுவார்களாம்!
அடுத்து அமெரிக்க ராணுவ தளபதியான திறமைவாய்ந்த ஜார்ஜ் பேட்டன் சரித்திரத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இரண்டாம் உலகப் போரில் அவரது சாகஸ செயல்கள் பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. பேட்டன் என்ற படம் தலையாயது. பேட்டன் தனது ஆறு முந்தைய ஜென்மங்களை வரிசையாகக் கூறுவாராம். நெப்போலியனின் படையில் தான் பணி புரிந்து போர்க்களத்தில் போரில் உயிர் துறந்ததை அவர் கூறியதுண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் தனது மறுபிறப்பு நம்பிக்கையை அவர் வலியுறுத்திக் கூறுவார்.
இத்தாலிய கவிஞனான தாந்தேக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. கவிஞர்கள் டென்னிஸன். ப்ரௌனிங், கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், ப்ளேடோ ஆகியோரும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களே. லியனார்டோ டா வின்ஸி, வால்டேர், வாக்னர், ஹென்றி ஃபோர்ட், எடிஸன், எமர்ஸன், ரஸ்கின், பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் ஆகியோரும் இதில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தவர்கள்.
எட்கர் கேஸ் 3000 மறுபிறப்பு கேஸ்களை சுட்டிக் காட்டி இருப்பது உலக பிரசித்தமான தொகுப்பு நூலானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேறொரு நாட்டில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கல்லறையைச் சரிபார்ப்பது வரை இவரது முன் ஜென்ம கேஸ்கள் பலராலும் தீவிரமாக ஆராயப்பட்டு சரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டன.
தியாஸபி இயக்கம் எனப்படும் பிரம்மஞான சபை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியவுடன் மேடம் ப்ளாவட்ஸ்கி, அன்னிபெஸன்ட் ஆகியோர் மறுபிறப்பிற்கான காரணங்களை விரிவாக விளக்கி உலகெங்கும் பேசினர். அன்னிபெஸண்ட் எழுதிய ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற 96 பக்கம் கொண்ட சிறு நூலில் மறுபிறப்பிற்கான ஆட்சேபங்களாக ஐந்தையும் அது உண்டு என்பதற்கு 14 காரணங்களையும் தெளிவாக விளக்குகிறார். நூறு குருடர்களின் ஆயிரம் வார்த்தைகளை விட நேரில் பார்த்து ஒன்றை விளக்கும் பார்வையுள்ளவனின் ஒரு வார்த்தை பொருள் பொதிந்தது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
ஹிட்லரின் ஆராய்ச்சிகள் எப்போதுமே சற்று ஆழமானவையாகவும் விசித்திரமானவையாகவும் இருக்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஹிட்லர் என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்தார் என்பதை அறிவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் டி லஸ்டிக் (Dr Robert T Lustig). இவர் எலக்ட்ரோ பயாலஜியில் பெரும் நிபுணர். இவர் ஜெர்மனி சென்று ஹிட்லர் செய்த ஆய்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார். அவற்றில் முக்கியமான சுவையான ஆய்வு ஃப்ராங்க்பர்ட்டில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் டைரக்டரான டாக்டர் பி ராஜேஸ்வ்ஸ்கி (Dr B Rajewski) செய்த ஆராய்ச்சிகளே.
ராஜேஸ்வ்ஸ்கி மூளை, நரம்பு மண்டலம் மூலமாக செய்திகளை அனுப்புகிறது என்ற பாரம்பரிய கொள்கையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ரேடியோ ஒலிபரப்பு போல நேரடியாக செய்திகள் மூளையிலிருந்து உடல் அங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கான சோதனைச்சாலை ஆதாரங்களையும் அவர் வைத்திருந்தார். இந்த முடிவுகள் வியக்கத்தக்க ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் பற்றிய தீர்க்கமான உண்மைகளைத் தந்திருக்கும். ஆனால் உலக யுத்த முடிவில் அரைகுறையாக கைவிடப்பட்ட ஹிட்லரின் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளுள் இதுவும் ஒன்றானது.
ஹிந்து மத யோகிகளை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் பக்கம் மறு ஜென்மத்திற்கென்றே ஒதுக்க வேண்டும். அமெரிக்காவை மிகவும் கவர்ந்த யோகாதா சத் சங்கத்தை நிறுவிய பரமஹம்ஸ யோகானந்தா தனது ‘ஆயோபயாக்ராபி ஆஃப் எ யோகி’ (Autobiography of a Yogi) நூலில் தரும் சம்பவம் சுவையானது.
அவருக்குத் தெரிந்த ஒரு பையன் சீக்கிரமாகவே இறக்கப் போகிறான் என அவருக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பையன் பெயர் காசி. அவன் யோகானந்தரிடம் நான் அடுத்த பிறவி எடுக்கும் போது எங்கு பிறந்திருந்தாலும் என்னைக் கண்டுபிடித்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டான். சில நாட்கள் கழித்து பொல்லாத விதிப்படி அவனது மரணம் சம்பவித்தது. சில காலம் சென்ற பின்னர், யோக முறை மூலம் ஆவி உலகில் சஞ்சரித்த யோகானந்தர், காசி மறு பிறவி அடைந்து விட்டானா என்று பார்த்தார். அவரது உள்ளுணர்வு அவன் சீக்கிரமே பிறக்கப் போகிறான் என்று கூறியது.
ஆனால் எங்கு? எப்போது பிறக்கப் போகிறான்?
ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தா தெரு ஒன்றின் வழியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது உணர்வில் ‘நான் காசி, இங்கு இருக்கிறேன்’ என்று தெளிவான குரல் ஒலித்தது.
காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல தன் சகாக்களுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்தார் யோகானந்தர். அந்த வீட்டு எஜமானிக்கு பிரசவ சமயம். யோகானந்தர் காசி பிறக்கும் இடம் இது தான் என நிச்சயித்தார். வீட்டு எஜமானன், எஜமானியிடம் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று ஆரம்பித்து அங்க அடையாளங்களைத் தெளிவாகச் சொன்னார். அவன் ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அதில் செல்வான் என்பதையும் கூறி விட்டுச் சென்றார். அதன் படியே நடந்தது. பிறந்த குழந்தை காசியின் மறு தோற்றம் போல இருக்க, சில காலம் சென்ற பிறகு அவன் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானான்.
இது போன்ற சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. புனரபி ஜனனம் புனரபி மரணம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு) என்ற ஆதி சங்கரின் வாக்கும் நவீன விஞ்ஞானிகளின் வாக்கும் ஒத்துப் போகும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.
மனிதப் பிறவியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என வாழ்க்கையில் சில நிமிடங்களேனும் சிந்திக்க வைக்க விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பெரும் தூண்டுகோலாக விளங்குகின்றன!
அறிவியல் அறிஞர் வாழ்வில்
அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரும் சிறந்த ராஜ தந்திரியும் விஞ்ஞானியும் மாபெரும் கண்டுபிடிப்பாளருமான பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் (1706-1790) மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 84 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது 22ஆம் வயதிலேயே தனது கல்லறையில் பொறிக்க வேண்டிய வாசகத்தை இப்படி எழுதி வைத்தார்:
The Body of B. Franklin, Printer
Like the Cover of an old book
Its contents worn out,
And Stripped of its Lettering and Gilding,
Lies here, Food for Worms,
But the Work shall not be wholly lost:
For it will, as he believed,
Appear once more
In a new and more elegant Edition
Corrected by the Author
இதன் சுருக்கமான பொருள் இது தான்: பிரிண்டர் பெஞ்சமின் ஃப்ராக்ளினின் உடல் பழைய புத்தகத்தின் அட்டை போல உள்ளடக்கம் தேய்ந்து, எழுத்துகள் உரிக்கப்பட்டு மெருகு தேய்ந்து புழுக்களுக்கு உணவாக இங்கே இருக்கிறது. ஆனால் அது முழுவதுமாக தொலைந்து போகாது; ஏனெனில் அவர் நம்புவது போலவே அது மீண்டும் தோன்றும் – அதை எழுதியவரால் சரி செய்யப்பட்டு ஒரு புதிய இன்னும் அதிக எழிலுடன் கூடிய பதிப்பாகத் தோன்றும்.
இறுதி வரை அவருக்கு மறுபிறப்பு பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.
*********
You must be logged in to post a comment.