Compiled by london swaminathan
Date: 18 March 2016
Post No. 2644
Time uploaded in London :– 18-15
(Thanks for the Pictures; they are taken from various sources)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அன்னை தெரசாவை ஒரு செயின்ட் , அதாவது புனிதர் என்று செப்டம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப் போவதாக தற்போதைய போப்பாண்டவர் ப்ரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்றைய லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானது. வழக்கமாக பத்திரிகைக்கு எழுதும் டான் ஜோன்ஸ் என்பவர்தான் இதையும் எழுதியுள்ளார்.
இந்திய அரசு இதுவரை அன்னை தெரசாவுக்கு மூன்று தபால்தலைகளை வெளியிட்டது. காங்கிரஸ் அரசு இப்படிச் செய்தபோது, மதமாற்றம் செய்யும் தெரசாவுக்கு எதற்கு இவ்வளவு தபால்தலைகள் என்று இந்து இயக்கங்கள் போர்க்கொடி தூக்கின. ஆனால் டான் ஜோன்ஸ் இந்த மாதிரி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஒருவரை செயிண்ட் என்று அறிவிக்க வேண்டுமானால் அவர் செய்த இரண்டு அற்புதங்களாவது இருக்க வேண்டும் என்பது ரோமன் கதோலிக்க கிறிஸ்தவ மத மரபு. அன்னை தெரஸா செய்ததாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களும் ஹோமியோபதி வைத்தியமே யன்றி அற்புதங்கள் அல்ல.அவை சரியான நொண்டிச் சாக்கு என்று அவர் எழுதியுள்ளார்.
இதோ அவரது வாசகங்கள்:
“செப்டம்பர் 4ஆம் தேதி அன்னை தெரஸா, புனிதர் ஆக்கப்படுவார் என்று வாடிகன் அறிவித்துள்ளது. இது கதோலிக்க அன்பர்களுக்கு ஆனந்தமளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை.ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் அன்னை தெரஸா செய்ததாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களும் “உப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை” என்ற கதையாக உள்ளன.
அந்தக் காலத்தில் புனிதர்கள், வாக்கிங் ஸ்டிக் எனப்படும் ஊன்றுதடியை மரமாக்கிக் காட்டினார்கள் (செயிண்ட் பாட்ரிக்).
பிராணிகளை மனிதர்கள் பேசுவது போல பேசவைத்தார்கள் (புனித எட்மண்ட்).
ஏசுபிரானுக்கு ஏற்பட்டது போல உடலில் காயங்களைத் தோன்றவைத்து அதிலிருந்து ரத்தம் வரச் செய்தார்கள் (அசிசி நகர புனித பிரான்ஸிஸ் மற்றும் பலர்).
வானத்தில் பறந்து காட்டினார்கள் (குபெர்டினோவின் புனித ஜோசப்).
எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவித்தார்கள் (புனித மலாசி).
துடைப்பதற்கு துணியில்லாமலேயே ஈரமான பொருள்களை காயவைத்து அற்புதம் செய்தார்கள் ( ஸ்காட்லாந்தின் புனித மார்கரெட்).
இப்படி எவ்வளவோ சொல்லலாம்.
மதர் தெரசாவின் பெயரில் இரண்டே அற்புதங்கள் உள்ளன. அவர் யாரோ ஒருவரின் அடிவயிற்றில் தோன்றிய நோயைப் போக்கினாராம்; இன்னொருவர்க்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை குணப்படுத்தினாராம். மரியாதையுடந்தான் சொல்லுகிறேன் (கிண்டலோ பகடியோ அல்ல); இது அற்புதமல்ல; ஹோமியோபதி சிகிச்சைதான்”
இவ்வாறு லண்டன் பத்திரிக்கையில் டான் ஜோன்ஸ் எழுதியுள்ளார்.
10,000 புனிதர்கள்!
ரோமன் கத்தோலிக்க மதத்தில் குறைந்தது 10,000 புனிதர்கள் இருக்கிறார்கள். முன்னர் 40 அல்லது 70 பேரை ஒரே நாளில் புனிதர் ஆக்கியபோதே பலரின் புருவங்கள் உயர்ந்தன. தற்போதைய போப், 800க்கும் மேலானோரை ஒரே நாளில் புனிதராக்கியவுடன் பலரின் புருவங்களும் நெளிந்தன. இவர் என்ன புனிதத்தன்மையே இல்லாமல், கிலோ கணக்கில், லிட்டர் கணக்கில் புனிதர்களை அளப்பார் போலிருக்கிறதே என்று பலரும் அங்கலாய்த்தார்கள். ஆனால் ஒரே இதாலிய நகரத்தைச் சேர்ந்த, அந்த 800 பேரும் மதம்மாற மறுத்தமைக்காக முஸ்லீம்களால் சிரச் சேதம் செய்யப்பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் புனிதராக்கப்பட்டனர் என்று வாடிகன் விளக்கமளித்தது.
-சுபம்-
You must be logged in to post a comment.