Written BY S NAGARAJAN
Date: 28 April 2016
Post No. 2762
Time uploaded in London :– 5-44 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
100 வயது வாழ்ந்த பெரியோர்
(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய மூன்றாவது கட்டுரை இது.)
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -3
ச.நாகராஜன்
ஸு யுன்னின் தந்தைக்கு மகன் சங்கத்தில் சேர்ந்து புத்த தர்ம பிரசாரத்தில் ஈடுபட விரும்புவது நன்கு புரிந்து விட்டது.
வேங் என்ற ஆசிரியரை நியமித்து தாவோ புத்தகங்களைக் கற்பிக்கச் செய்தார்.
பதிநான்காம் வயதிலிருந்து மூன்று ஆண்டுகள் இந்தப் படிப்பு தொடர்ந்தது. ஆனால் ஸு யுன்னுக்கோ இதில் மனம் செல்லவில்லை.
17ஆம் வயதில் பாட்டி விரும்பியபடி இரண்டு பெண்களை அவருக்கு மணமுடித்தனர். கல்யாணம் ஆனதால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஸு யுன். ஆனால் அந்த இரு மனைவிகளிடமும் தாம்பத்திய உறவை அவர் மேற்கொள்ளவே இல்லை.
பத்தொன்பதாம் வயதில் உலகைத் துறக்க நிச்சயித்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதாவது அவ்ர் முழு துறவியாகி விட்டார்.
தந்தை அவரைத் தேட ஆட்களை அனுப்பினார். ஆனால் ஸு யுன்னோ வேலைக்காரர்களுக்குத் தெரியாதபடி ஒளிந்து கொண்டார்.
மவுண்ட் கு (Mount Gu) என்ற இடத்தில் ஆசார்யர் மியா லியான் (Master Miao-lian) என்பவரிடம் சீடராக இருந்து பயிற்சியைப் பெற்றார்.
காலப் போக்கில் அவரது இருபத்தைந்தாம் வயதில் அவர் தந்தையும் இறந்தார். அவருக்கு வீட்டுத் தொடர்பே அற்றுப்
போனது.
கடினமான தவ வாழ்க்கையை காட்டில் அவர் தொடங்கினார். அங்குள்ள ஓநாய்களோ அல்லது புலிகளோ ஒரு நாளும் அவரைத் துன்புறுத்தவில்லை. பாம்புகளும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.
அவரது 31ஆம் வயதில் அவர் வென்ஸ்ஹோ (Wenzhou) என்ற மலைக்கு வந்தார். அங்கு ஹுவா டிங் என்ற சிகரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த குடிசை போன்ற ஆலயத்தின் கதவைத் தட்டினார். அதிலிருந்த ஆசார்யார் அவரிடம் உடலுடன் மனதைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லியதோடு பத்து ஆண்டுகளை வீணாகக் கழித்து விட்டாயே என்று கடிந்து கொண்டார்.
பின்னர் மனமிரங்கி அவ்ரைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். இன்னும் கடினாமான பயிற்சிகள் தொடங்கின. ஆனால் ஆசார்யரே அவரின் தவத்தைக் கண்டு அவரை மெச்சினார்.
பிறகு மிக நீண்ட நெடிய பயணத்தை அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று மடாலயங்களைப் பார்த்தார். திபெத்தில் தலாய்லாமா அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்த பின்னர் இந்தியா வந்தார்.
காசியில் தரிசிக்க வேண்டிய இடங்களைத் தரிசித்த பின்னர் கல்கத்தா சென்றார். அங்கிருந்து சிலோன், பர்மா என்று பல நாடுகளில் உள்ள புத்த ஆலயங்களைத் தரிசித்து விட்டு பின்னர் சீனா திரும்பினார்.
மஹாகாஸ்யபரின் சமாதி உள்ள காக் ஃபுட் மலையில் ஏறினார்.
மஹாகாஸ்யபரின் குகைக் கோவிலின் வாயிலின் முன் வந்து நின்றார். அங்கு புத்தரின் சீடரான ஆனந்தர் வந்த போது அந்த குகைக் கதவுகள் தானாகத் திறந்து கொண்டதாம்.
அந்த வாயிலுக்குப் பெயர் ஹுவா ஷூமென். அதன் பொருள் பூ மலரும் வாயில்! அங்கு சென்ற ஸு யுன் ஊதுபத்திகளை ஏற்றியவுடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அங்கிருந்த பெரிய மணி தானாக மூன்று முறை ஒலித்தது. அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் அதிசயித்தனர்,
மிகப்பெரும் மஹா புருஷர் ஒருவர் வரும் போது தான் அது தானாக மூன்று முறை ஒலிக்குமாம்.
அனைவரும் ஸு யுன்னை பக்தியுடன் பார்த்து வணங்கினர்.
360 தவ சாலைகளும் 72 பெரும் கோவில்களும் இருந்த அந்த மலையில் இப்போது வெறும் பத்துக் கோவில்கள் கூட இல்லை!
அடுத்து தன் ப்யணத்தை தொடர்ந்த ஸு யுன் ஜி-கி என்ற மலைத்தொடருக்கு விஜயம் செய்தார்.
அங்கு அவர் வந்தவுடன் அனைத்துப் பூக்களும் மலர்ந்தன.
அங்குள்ள அனைவரும் இந்த அதிசயத்தைப் பார்த்து மலைத்தனர்.
தலைமைத் துறவி வந்து ஸு யுன்னிடம்,” இங்குள்ள சுவடிகளின் படி இப்படி மலர்கள் மலர்வது இதற்கு முன்னர் சில சமயமே நடந்திருக்கிறது.இங்குள்ள மலர்ச் செடிகள் தெய்வீகத் தன்மை கொண்டவை. நல்ல ஒரு தவ புருஷர் இங்கு வந்தால் மட்டுமே அவை மலரும்” என்று ஆனந்தத்துடன் சொல்லி அவரை வரவேற்றார். அவரது ஐம்பதாவது வயதில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. மேலும் அவர் பயணத்தைத் தொடங்கினார். பத்தாயிரம் லி (2000 லி என்பது 620 மைல்களுக்குச் சமம்) என்ற நெடுந்தூரத்தைக் கால்நடையாக நடந்து கடந்த அவர் தனது மனம் தூய்மையாக விளங்குவதை உணர்ந்தார்.
பத்தாயிரம் சாஸ்திர நூல்களைப் படித்த பின்னர் பத்தாயிரம் மைல் பயணத்தை மேற் கொள் என்று பழைய கூற்று ஒன்று உண்டு.
ஸு யுன் தன் பயணத்தை விடாமல் தொடர்ந்தார்.
இப்போது அவருக்கு வயது 56.
– தொடரும்
You must be logged in to post a comment.