Article written by London swaminathan
Date: 1 June 2016
Post No. 2859
Time uploaded in London :– 8-03 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
Poet Kalidasa
அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது. ஆயினும் அவர்கள் முதல் பாடலை எழுதி பெரும் காவியத்தைத் துவக்கியபோது இது மக்களின் ஆதரவைப் பெறுமா, காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா என்றெல்லாம் பயமும் ஐயமும் இருந்திருக்கும். அவர்களிருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன் காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:
திதீர்ஷு துஸ்த்ரம் மோஹாத் உட்டுபேன அஸ்மி சாகரம்
சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!
காளிதாசனின் ரகுவம்சம் 1-2
xxx
மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்
ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:
எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)
ரகுவம்சம் 1-3
xxx
அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:
மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:
நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்
ரகுவம்சம் 1-4
காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.
கம்பன் ஒரு பூனை!
கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ
–பாலகாண்டம்
பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.
முத்தமிழ்த் துறையின் முறைபோகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.
தெய்வ மஹா கவி வால்மீகி
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே
பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.
(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)
ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.
–சுபம்–
You must be logged in to post a comment.