Translated by London swaminathan
Date: 3 June 2016
Post No. 2865
Time uploaded in London :– 5-56 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
ஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். தேநீரில் ஈ விழுந்தால்கூட அதைப் பிழிந்து விட்டு வெளியே எறிவான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.
அன்பரே! இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது? என்று கேட்டார்.
கஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.
குரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.
கஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.
பின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.
இது என்ன?
கஞ்சன்:–முகம் பார்க்கும் கண்ணாடி.
இதில் என்ன தெரிகிறது?
கஞ்சன்:–நான் என்னைப் பார்க்கிறேன்.
ஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது?
கஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.
உடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.
கஞ்சனுக்கும் கதையின் நீதி புரிந்தது!
Xxx
ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்!
தாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஒரு கண்டுபிடிப்பின் உரிமையைப் பெற வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி, அவருக்கு ஒரு லட்சம் டாலர் முன் தொகை கொடுக்க முன்வந்தது.
ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்! உங்களிடமே அந்தத்தொகை இருக்கட்டும். பாதுகாப்பாகவாவது இருக்கும் என்று சொன்னார். அவர்கள் மிகவும் வலியுறுத்தவே, சரி, வருடத்துக்கு ஆறாயிரம் டாலர் வீதம் 17 ஆண்டுகளுக்குத் தாருங்கள் என்றார்.
சின்னச் சின்ன ஆசை!!
Xxxx
பணக்காரர்களுக்கு அதிக மூளையா?
ஒரு மனிதனுக்கு நிறைய பணம் சேர்ந்துவிட்டால் அவனுக்கு மூளை ஜாஸ்தி/ அதிகம் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சிகாகோ நகர கோடீஸ்வரரான ஜூலியஸ் ரோசன் பால்ட் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.
ஒருவர் 14 என்ற எண் மூலம் மில்லியன் (பத்து லட்சம்) டாலர் வென்றார். எல்லோரும் அவரிடம் போய், பல கோடி எண்கள் இருக்கையில், எப்படி 14 என்று சொன்னீர்கள்? என்றார்.
ஓ, அதுவா? ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பெரிய 9 எண் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து எண் 6 தோன்றியது. இரண்டையும் கூட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்!!!! என்றார்.
Xxx
ஜனாதிபதி சொன்ன குட்டிக் கதை!
ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் சென்றனர். நீங்கள் சில துறைகளுக்கு மட்டும் நிதி அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பணம், பட்ஜெட் அதிகாரங்களைக் கொடுங்களேன் என்றனர்.
உடனே லிங்கன் ஒரு கதை சொன்னார்:
“இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் ஒருவர் ஒரு வீடு வைத்திருந்தார். நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். அவருடைய வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாயிற்று. அந்தக் காலத்தில் ஊரில் யாருக்காவது இப்படி நஷ்டம் வந்தால், ஊர் மக்கள் எல்லோரும் பணம் கொஞ்சம் போட்டு, அவருக்கு உதவி செய்யும் நல்ல வழக்கம் இருந்தது. இந்த ஆளுடைய அதிர்ஷ்டம்! எல்லோரும் கொடுத்த பணம் அதிகமாக இருந்ததால் அவருக்கு முன்னைவிட சொகுசான வாழ்க்கை கிடைத்தது.
கொஞ்ச நாள் கழித்து அவருக்கு உதவி செய்யும் நோககத்துடன் ஒருவர் தானியம் கொண்டு வந்து கொடுத்தார்.
அவர் சொன்னார்: “சீ, சீ! நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொள்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள்!”
(பணத்தை ஒரு முறை கொடுத்துப் பழக்கிவிட்டால், பிறகு பண போதை தலைக்கேறிவிடும்! பணம் ஒரு பேய்!!)
xxxசுபம்xxx
You must be logged in to post a comment.