Picture shows Sabari with Rama, Lakshmana
Article Written by London swaminathan
Date:25 July 2016
Post No. 3004
Time uploaded in London :– 8-05 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
கம்ப ராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் சபரி என்னும் கானகப் பெண்மணியைப் பற்றிய பாடல்கள் மிகவும் குறைவு. ஆயினும் அந்தப் பாடல்களை, ஸ்லோகங்களைப் படிக்கும்போது இலக்கிய இன்பமும், பக்திச் சுவையும் கிட்டும்.
முதலாவது, கானகத்தில் தவம் செய்யும் கிழவிக்கு கம்பன் கொடுக்கும் அடை மொழி “அருந்தவத்து அரசி”. வால்மீகி அடிக்கடி பயன்படுத்தும் “தபோநிதி” – என்பதை கம்பன் வேறு வடிவத்தில், இப்படி மிகவும் அழகாகப் பகர்கிறான்.
கம்ப ராமாயணம் முழுதும், ராமனுக்கும் சீதைக்கும் அனுமனுக்கும் கம்பன் கொடுக்கும் அடை மொழிகள் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை வாழி என்றார்
பொருள்:
சபரி சொன்னாள்: என் தந்தையே! நீ இங்கே வரப்போகிறாய் என்று கேட்டு, உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்றுதான் என் தவம் பலித்தது ( என் புண்ணியம் பூத்தது).
உடனே, அருந்தவத்துக்கு ராணியான அவளைப் பார்த்து, அன்போடு ராமன் சொன்னான்: தாயே! வழிநடையால் ஏற்பட்ட களைப்பை, உன் உபசரிப்பால் தீர்த்துவிட்டாய், நீ வாழ்வாயாக.
அவள் சொல்கிறாள்: சிவனும் பிரம்மனும், இந்திரனும் என்னிடம் வந்து, நீ சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. ராமன் இங்கே வருகிறான். அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்துவிட்டு எம் உலகத்துக்கு வருக என்று அவர்கள் சொன்னார்கள்.
(பிரம்மா, சிவன் பெயரை மட்டும் சொன்னதிலிருந்து, ராமனே விஷ்ணு என்பதையும் கம்பன் தெரிவிக்கிறான்.)
Picture: – சபரி என்ற வேடுவப் பெண்மணி
இன்னொரு பாடலில் ஞானிகள் யார் என்றும் கம்பன் சொல்கிறான். அவர்கள் “கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர்”. அதாவது, நமக்கு எல்லாம் காதில் இயற்கையாகவே துளை இருக்கிறது. சான்றோருக்கு, கேள்வி ஞானத்தால் – நல்லனவற்றைக் கேட்டதால் அத்துளை உண்டாயிற்றாம்!
சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம் ஆகும். அந்த இடத்தின் இயற்கை அழகையும் பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகையும் வால்மீகி விரிவாக வருணிக்கிறார். கமபன் அந்த இடம் சொர்க்கலோகம் போல இருந்தது என்பான்:
எண்ணிய இன்பங்கள் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே
பொருள்:
புண்ணியம் செய்தோர் போகக்கூடிய சுவர்க்கம் (துறக்கம்) போல எப்போதும் இன்பம் மட்டுமே நிலவும் — துன்பமே இல்லாத – இடம் போல இருந்தது (மதங்க முனிவரின் இருப்பிடம்)
இறுதியில் ராமனுக்கு காய் கனிகளைக் கொடுத்து சபரி உபசரிக்கிறாள். அது மட்டுமல்ல சுக்ரீவன் வாழும் இடத்துக்கு எப்படி போவது என்றும் வழிகளை விரிவாகச் செப்புகிறாள். கடை சியில் யோக சக்தி மூலம் தன் உடம்பை விட்டு நீங்கி உயிர் துறக்கிறாள்.
வால்மீகி சிறிது வேறுவிதமாக முடிக்கிறார். யோக சக்தி என்பதற்குப் பதிலாக தீயில் புகுந்து சபரி உயிர் நீத்தாள் என்று இயம்புகிறார். அக்காலத்தில் சான்றோர்கள், தனது பணிகள் முடிந்தபின் இப்படி தீப்புகுந்து உயிர் துறப்பர்.
அதிகமான சங்கத் தமிழ் பாடல்களைப் பாடிய பிராமணப் புலவன் – “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” – கபிலனும் இப்படி தீப்புகுந்து உயிர்நீத்தான்.
சபரி பாடல்களில் இருந்து நாம் அறிவது என்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்வோம்:–
Picture:– சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம்
1.அந்தக் காலத்தில் பெண்களும் நல்ல ஆன்மீக அறிவு பெற்றிருந்த்னர். அவ்வையாருக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் சபரி. அப்போதே பெண்கள் ஆன்மீக தாகம் கொண்டு தவம் செய்தனர்.
2.ராமன் போன்றாரும், சபரியும் கானகத்தில் – வெஜிட்டேரியன் உணவை மட்டுமே சாப்பிட்டனர். காயும் கனிகளும் கீரையும் தேனும் திணை மாவுதான் அவர்கள் உண்டவை.
3.சான்றோர்கள் தன் தவ வலிமையால் உடல் துறப்பது, தீப்புகுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதாவது உடலைத் துச்சமாக எண்ணினர். நாம் பழைய உடைகளைக் குப்பைக் கூடையில் எறிவது போல அவர்கள் உடலைத் துறந்தனர்.
4.கானகத்தில் இருந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை அழகு மிக்கவை அவை சொர்க்க லோகம் போன்று இன்பமே எந்நாளும் என்ற இடமாகத் திகழ்ந்தன.
5.சபரி கடித்துச் சுவைத்து கொடுத்த பழங்களை ராமன்- மன்னன் மகன் — ஜாதி வேறுபாடின்றி சாப்பிட்டதையும் நாம் அறிவோம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை – ராமன் குகன் சம்பவத்திலும், சபரி சம்பவத்திலும் காட்டுகிறான்.
- எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய-திராவிட வாதத்துக்கு செமையடி கொடுக்கிறது ராமாயணம். ஆதிகுடிகள், வேடுவர்கள் என்போரெல்லாம் திராவிடர் என்றும் , ராமன், கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் ஆரியர் என்றும் பிதற்றினர் வெளி நாட்டினர். அது தவறு – சபரியும் கூட யோக வாழ்வு நடத்தினாள் என்று காட்டுகிறது இந்த சம்பவம். மேலும் ராமனும், கிருஷ்ணனும் “காக்கா கறுப்பு” நிறத்தோலினர் என்பதையும் நாம் அறிவோம். ஆக நிறவேற்றுமை புகுத்திய வெளி நாட்டுப் பேய்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறது சபரி நிகழ்வு
7.சபரி என்ற வேடுவப் பெண்மணிக்கு நல்ல பூகோள அறிவு இருந்ததையும் இச்சம்பவம் காட்டும். அதாவது அவள், சுக்ரீவன் வாழும் ரிஷ்யமுக பர்வதத்துக்குப் போகும் வழியை இராம இலக்குவருக்கு இயம்புகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் நிலவியது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னர் ‘கூகுள் மேப்’- ஐ (Google Map) விட அதிக அறிவு இருந்தது பெண்களுக்கு.
8.இப்படலம் சுவர்கம் பற்றிய தகலையும் நமக்குத் தருகிறது. சுவர்க்க லோகம் இன்பமே எந்நாளும் நிலவும் இடம். அங்கு துன்பம் என்பதே கிடையாது.
சபரி பிறப்பு நீங்கு படலத்தை கம்பன் முடிக்கும் முன்பாக, சபரி தன் யோக சக்தியால் உயிர் நீத்ததை ராமன் அதிசயத்தோடு பார்த்த செய்தியையும் கம்பன் கூறுகிறான்:-
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்றி எய்தி
இந்த அதிசயத்தகவலை நமக்குக் கொடுத்த கம்பனுக்கும் வால்மீகிக்கும் நாமும் நன்றி சொல்வோம்.
–subham–
You must be logged in to post a comment.