Research Article written by london swaminathan
Date: 2nd August 2016
Post No. 3028
Time uploaded in London :– 6-26 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை (தித்தியம் ஆமை ) பற்றி சொல்லப்படுகிறதே; அப்படியானால் யாகத்தில் ஆமையும் உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டவுடனே, எனக்கும் முழுப் பொருள் தெரியாது, அதுவும் அகத்துறைப் பாடலில் இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்துவது பொருளற்றதாக இருக்கிறது என்று மார்ச் மாதக் கட்டுரையில் வியப்பு தெரிவித்திருந்தேன். இப்பொழுது யாக, யக்ஞங்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கையில் திடீரெனப் புதுப் பொருள் கிடைத்தது. அது, பாட்டில் உவமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.
அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர, (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்
“வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல………………………”
பாடல் வரி ‘கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள்
தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது!
நான் கண்ட புதுப் பொருள்:-
யாக குண்டம் கட்ட செங்கற்களைப் பயன்படுத்துவர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அக்னிசயனம்’ என்று பெயர்’. பிரஜாபதியை உருவகப்படுத்தி ஆகவனீயம் என்ற தீயை அமைப்பர்; இது முத்தீக்களில் ஒன்று. ஐந்து மிருகங்களின் தலைகளும் அதில் பொருத்தப்படும்; அவைகளின் உடல்கள் நீரில் எறியப்படும். அந்த நீரைக்கொண்டு செங்கற்கள் செய்யப்படும். எறும்புப்புற்று மண்ணையும், ஒரு குழியிலிருந்து கிடைத்த மண்ணையும் கொண்டு யாகம் நடத்துவோரின் மனைவி முதல் செங்கலைச் செய்வாள்.
யாகம் செய்பவர் மூன்று செங்கற்களையும் சட்டியையும் செய்வார். அதன் மீது புதிய செங்கற்கள் செய்யப்படும்.
தீட்சைக்குப் பின்னர், பல வகை வடிவங்களில்– கழுகு, பருந்து, தண்ணீர்த் தொட்டி வடிவங்கள்– யாக குண்டங்கள் அமைக்கப்படும். செங்கற்களும் பலவகை வடிவங்களில் செய்யப்பட்டு மந்திரபூர்வமாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்படும். இதற்கு கணித அறிவு தேவை. மொத்தமுள்ள ஐந்து அடுக்குகளில் 1, 3, 5- அடுக்குகள ஒரு விதமாகவும் 2,4 அடுக்குகள மற்றொருவிதமாகவும் இருக்கும்..
நூலை வைத்து அளப்பார்கள் (எகிப்திய பிரமிடுகளிலும் இம்முறை பின்பற்றபட்டதாலும் அங்கும் சூத்ர (நூல்) என்ற சொல் பயன்பட்டதாலும் எகிப்திய பிரமிடுகளைக் கட்டுவதிலும் இந்தியர்கள் உதவினார்கள் என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.
இதற்குப் பின்னர் ஏர் கொண்டு உழுவார்கள்.
கீழ் மட்டத்தில் ஒரு மனிதன் உருவம் தங்கத்தில் செய்து வைக்கப்படும். ஐந்து அடுக்குகளிலும் சேர்த்து, 10,800 செங்கற்கள் இருக்கும்.
ஒரு அடுக்கில் ஒரு உயிருள்ள ஆமை வைக்கப்படும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது. மற்ற பல பொருட்கள் வெ வேறு இடங்களில் வைக்கப்படும். இவை எல்லாம் எட்டு முதல் 12 மாதங்களில் முடிவடையும்.
ஐந்தே நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம்.
பல நூல்கள் இதுபற்றி உரைத்தாலும் சதபத பிராமணம் என்னும் நூலே விரிவாகப் பேசுகிறது அதனுடைய 14 காண்டங்களில் ஐந்து காண்டங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அகநானூற்றுப் பாடலின் பொருள்
இப்போது அகநானூற்றுப் பாடலின் பொருள் நன்கு விளங்கும்.
அதாவது பாலை நிலத்திலுள்ள தலைவனுக்கு யாக குண்டம் உவமை. அதிலிருந்து குளிர்ச்சியான சென்ற ஆமைக்கு தலைவன் உவமை. அது எப்படி குளிர்ச்சியான குளத்துக்குச் சென்று இன்பம் துய்க்கிறதோ, அது போல நீயும் இன்பம் துய்க்க இப்போது நினைக்க வேண்டாம் என்கிறார் புலவர்.
இதில் இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. உயிருள்ள ஆமையை அவர்கள் பலி இடுவதில்லை. அதை குளிர்ந்த நீர் நிலைக்குச் செல்ல யாகம் நடத்துவோர் அனுப்பினர். அப்படி பலியிட்டிருந்தால் அதை தலைவனுக்கு ஒப்பிடமாட்டார் புலவர்!
சங்க காலத்தில் யாக யக்ஞங்கள் ஆயிரக் கணக்கில் நடந்ததால் காதல் பாட்டில் கூட யாக குண்ட ஆமை (யாமை) இடம் பெற்றுள்ளது!
ஆமை ரகசியம் அம்பலமானது!
சிந்து சமவெளி செங்கற்கள்!
சதபத பிராமணத்தில் மூன்றில் ஒரு பகுதி யாக குண்டம் அமைப்பது பற்றியது என்பது செங்கற்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில் காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் போற்றப்படுவதாலும் அதை வேத கால நாகரீகம் என்று சொல்லத் தூண்டுகிறது.
மேற்கூறிய சடங்குகளில் பல தகவல்களுக்கு இப்போது பொருள் சொல்லக்கூட ஆள் இல்லை. வேதங்களை நன்றாகப் படி தால் சங்க இலக்கியத்துக்கு மேலும் தெளிவான பொருள் காணலாம்.
முந்தைய கட்டுரை/ Previous Article
அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607) Research article written by london swaminathan
Date: 7 March, 2016
–subham–