Article Written S NAGARAJAN
Date: 14th August 2016
Post No. 3059
Time uploaded in London :– 6-31 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
12-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!
ச.நாகராஜன்
“இனி மேல் பிறக்கப் போகிறவர்களுக்கு நல்லவர்களாக இருங்கள். நீங்கள் வந்து சேர்ந்த இடத்தை விடச் சிறந்ததான இடத்தை அவர்களுக்காக உருவாக்குங்கள். அவர்கள் உங்களுக்கு நன்றியுடைய்வர்களாக இருப்பார்கள்.” – பங்காம்பிகி ஹப்யரிமானா
செயற்கை அவயவங்களைத் தயாரித்து மூளை செயல்பாட்டுடன் அதை ஒருங்கிணைக்க வைத்த அதிசயத்தை மட்டும் டர்பா (அமெரிக்க இராணுவத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு) செய்யவில்லை.
எதிர்கால உலகை எப்படி அமைப்பது என்பதையும் அது திட்டம் தீட்டி வருகிறது – இராணுவ நோக்கில்!
ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு என்பதில் அது காட்டும் அக்கறையே தனி!
ஒரு வினாடிக்கும் கீழான நேரத்தில் எந்த ஒரு மொழியையும் இன்னொரு மொழியில் கூற வல்ல மொழியாக்கத் தொழில் நுட்பம் அதனிடம் இப்போது தயார்! அதி நவீனமான காண்டாக்ட் லென்ஸுகளையும் அது தயாரித்து விட்டது.
அடுத்ததாக அதன் கவனம் செயற்கை அறிவு மற்றும் ரொபாட் வீரர்கள் ஆகியவற்றின் பயன்பாடு தான்!
2045ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் (அல்லது எப்படி இருக்க வேண்டும்) என்பதை அது தீர்மானித்து விட்டது!
எதிர்காலத்தை நோக்கி என்ற பொருள் படும் ‘ஃபார்வேர்ட் டு தி ஃப்யூச்சர்’ (Forward to the Future) என்ற ஒரு வீடியோ தொடரை அது யூ டியூபில் அண்மையில் வெளியிட்டுள்ளது
அதில் டர்பாவைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் எப்படி தொழில்நுட்பம் இன்னும் 30 வருடங்களில் (அதாவது ஒரு தலைமுறையை முப்பது வருடங்கள் என்று கணக்கிடும் தற்போதைய கணக்கை எடுத்துக் கொண்டால், அடுத்த தலைமுறையில்) உலகை மாற்றப் போகிறது என்பதை விளக்குகின்றனர்.
இதில் முதல் அதிசயக் கணிப்பை வெளியிடுபவர் பாம் மெல்ராய் (Pam Melroy) என்னும் விண்வெளி விண்கல எஞ்ஜினியர், இவர் ஏற்கனவே விண்வெளியில் பறந்த விண்வெளி வீரரும் கூட.. இப்போது டர்பாவின் துணை டைரக்டர். தந்திர உத்திகளைக் கையாளும் பிரிவில் ட்ரோன்களை உருவாக்கும் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.
இராணுவத்திற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட ‘வாம்பயர் ட்ரோன்ஸ்’ (Vampire Drones) என்று ஒரு திட்டம் உள்ளது. சூரிய ஒளியில் இந்த வாம்பயர் ட்ரோன் பறக்கும் போது அது இருப்பதே யாருக்கும் தெரியாது. மாயாஜாலமாகப் பறக்கும் பிசாசு ட்ரோன் அது. நமது குரலை இனம் கண்டு ஆணைகளை நிறைவேற்றும் செயற்கை அறிவைப் பயன்படுத்தும் ட்ரோன்கள் இப்போது தயாரிக்கப்படும் நிலையில் உள்ளன1 சிக்கலான பல காரியங்களை இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் செய்யும்!
எம்பதடிக் சிஸ்டம் (Empathetic System) என்று ஒரு அமைப்பு. இதில் ரொபாட்டுகள் போர் புரிய போர்க்களம் செல்லும், அங்கு அந்த வினாடியில் எதிரிகளில் யார் என்ன உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களது உடல் தகுதி, திறன் எப்படி இருக்கிறது என்பதை இவை நன்கு கணித்து அதற்குத் தக போரிடும்! 2030இல் மனிதர்கள் போர்க்களம் செல்ல மாட்டார்கள். கைகலப்பிற்காக ரொபாட்டுகள் களத்திற்குச் செல்லத் தயாராகிவிடும்.
அடுத்து ஸ்டெஃபானி டாம்ப்கின்ஸ் (Stefanie Tompkins) என்ற நிலவியல் நிபுணர், 2045இல் நேனோ தொழில்நுட்பம் உலகை ஆளும் என்று கூறுகிறார். இவர் டர்பாவின் இராணுவ அறிவியல் அலுவலகத்தில் டைரக்டராக இருப்பவர். கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்கிறார் இவர். இப்போதே செயற்கை அங்கங்கள் வந்ததைச் சுட்டிக் காட்டும் இவர் அந்த அங்கங்களின் கனம் சில அணுக்களின் கனம் தான் என்கிறார். காண்டாக்ட் லென்ஸ் உணரவே முடியாத அளவு மெலிதாக இருக்கும்1 எதிர்கால உலோகங்கள் மிக மெலிதாக இருக்கும். ஆனால் அதே சமயம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வலிமையுடன் இருக்கும் என்பது இவர் தரும் கணிப்பு.
ஜஸ்டின் சான்செஜ் (Justin Sanchez) என்பவர் மூளையியல் விஞ்ஞானி. டர்பாவின் உயிரியல் துறையில் பணியாற்றுபவர். இவர் கூறுவது : 2045இல் எண்ணத்தின் மூலமாக இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். 2045இல் நண்பர்களும் உறவினர்களும் மூளையின் மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியும். (அதாவது டெலிபோன் உள்ளிட்டவை அவுட் ஆஃப் டேட்!)
எலக்ட்ரானிக் ஆர்கிடெக்சர் எனப்படும் மின்னணுவியல் கட்டிடத் தொழில்நுட்பம் வீட்டைக் கட்ட உதவும். நினைத்தால் எண்ணம் மூலமாகவே பல்புகள் எரியும். சிறிய சென்ஸர்கள் தனக்குள்ளேயே சக்தியைக் கொண்டிருப்பதால் வயர்கள், மின்சாரம் என்பதெல்லாம் அவுட் ஆஃப் டேட்!
எதிர்கால வீடுகளுக்கும் இன்றைய வீடுகளுக்கும் துளிக் கூட சம்பந்தம் இருக்காது. அறிவியல் வீடுகளில் அடுத்த தலைமுறை வாழத் தொடங்கும்!
துள்ளிக் குதித்து ஓடி வரும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யுமா அல்லது அவர்களை ஆளுமா?
முப்பதே வருடங்கள், பொறுத்திருங்கள்! முடிவு தெரிந்து விடும்!!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,
அமெரிக்க இரசாயன நிபுணரான வாலஸ் ஹ்யூம் கரொதர்ஸ் (Wallace Hume Carothers 1895-1937) 1935ஆம் ஆண்டு நைலானைக் கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடிக்க ஏழு வருடங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டிய்தாயிற்று. ஒரு சிறிய அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை செய்தது. நைலானைப் போன்ற ஒன்றை அவர் முதலில் தற்செயலாகக் கண்டு பிடிக்கவே, அதை மேம்படுத்தி தான் நினைத்தவாறு நைலானைக் கண்டுபிடித்தார்.
பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து செய்யப்பட்ட பட்டு காலுறைகளின் விலை மிக அதிகம். ஆனால் நைலான் சாக்ஸ்களோ விலை மிகவும் குறைவு. நைலான் முதன் முதலில் அமெரிக்காவில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உபயோகத்திற்கு வந்தது. 50 லட்சம் காலுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்க்கப்பட்டது! இரண்டாம் உலகப் போர் மூளவே நைலானுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. பாராசூட்டுகளில் நைலான் பயன்படுத்தப்படவே அதன் மதிப்பு இன்னும் அதிகமானது.
தான் கண்டுபிடித்த நைலான் சந்தையில் இப்படி சக்கைப் போடு போட்டு விற்பனை ஆவதைப் பார்க்க வாலஸ் ஹ்யூமுக்குக் கொடுத்து வைக்கவில்லை.
மிக்க மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர் 1937இல் சயனைடைச் சாப்பிட்டுத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார். அவரது மனைவி அப்போது கர்ப்பிணி. வாலஸ் இறந்த பின்னர் அவருக்கு மகள் பிறந்தாள்.
நைலான் என்ற பெயர் வரக் காரணம் டூ பாண்ட் நிறுவனத்தின் இரு தலைமையகங்களான நியூ யார்க் மற்றும் லண்டன் ஆகியவை இணைக்கப்பட்ட வார்த்தை (New York LONdon) என்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. அனைவராலும் சுலபமாகச் சொல்லும் வார்த்தை எது என்று கண்டு பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்த வார்த்தையே இது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. நுசில்க், வகாரா(வாலஸை கௌரவிக்கும் பெயர் இது) என்ற பெயர்களெல்லாம் பரிசீலிக்கப்பட்டு நைலான் என்ற பெயர் பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நைலானின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 54 லட்சம் டன்கள் என்ற அளவையும் தாண்டி விட்டது!
நைலான் இன்று பயன்படாத இடமே இல்லை!
******
You must be logged in to post a comment.