Written by London swaminathan
Date : 15th August 2016
Time uploaded in London: 17-56
Post No.3065
Pictures are taken from various sources; thanks for the pictures.
கம்பராமாயணம் ஒரு தேன் கூடு; பிழியப் பிழிய தேன் வரும். ஆனால் என் போன்றோர் இலக்கிய நயத்துக்காக நூல்களைப் படிப்பதில்லை. அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளையும் தத்துவ உண்மைகளையும் ஆழத் துருவி ஆராய்வதே நோக்கம். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதை படலத்தில் கம்பன் ஒரு அசாதாரண உவமையைக் கையாளுகிறான். இதைப் பார்க்கும் போது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் அறிவு இருந்திருப்பது புலனாகிறது.
இதோ பாட்டும் அதன் பொருளும்:–
வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்
பொருள்:
மாயமான் வடிவத்தில் சென்று சீதையை ஏமாற்று — என்று ராவணன் ஏவியபோது மாரீசன் மன நிலை பற்றிய பாடல் இது:–
“இராவணன் செயலால தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்பிற்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம இலக்குவரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். இது எப்படி இருந்ததென்றால்….
ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத் தனமை அடையும் போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான். அந்த மாரீசனின் மன நிலையை நம்மால் முடியாத அளவுக்கு அவன் பயப்பட்டான்”
இந்தப் பாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது இலக்கிய நயம்: விஷ நீரில் மீன் இருந்தாலும் சாகும். வெளியே போனாலும் சாகும். அது போல மாரீசன் மாய மான் வேடம் போடாமல் சென்றால் ராவணன் கொன்றுவிடுவான். மாய மான் வேடம் போட்டாலோ ராமன் கொன்று விடுவான்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!
இரண்டாவது அறிவியல் விஷயம்:
ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால் அது மக்களுக்குப் புரிய வேண்டும்; தெரிந்திருக்க வேண்டும்.
நீர் நிலைகள், குறிப்பாக ஆழமான கிணறுகள், அசுத்தமடைவதும், அதனால் மீன்கள் இறப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வேளை நீரை அசுத்தம் செய்யாதீர்கள்! நடுக்குறும் மீனின் கதி , உங்களுக்கும் வரும் என்று கம்பன் அறிவுரை பகர்கிறான் போலும்.
எது எப்படியாகிலும் இப்பேற்பட்ட உவமை அரிதிலும் அரிது. கம்பன் கையாளும் உவமைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவன் மேதா விலாசமும் நமக்கு வெள்ளிடை மலையென விளங்கும்.
–SUBHAM–