Picture: Making hole in a diamond
Translated by London Swaminathan
Date: 1st September 2016
Time uploaded in London:8-59 AM
Post No.3110
Pictures are taken from various sources; thanks for the pictures.
உலக மஹா கவிஞன் காளிதாசனின் காவியத்தை படியாதோர் பழங்கால பாரதத்தில் இருந்திரார். கம்பனும் படித்திருப்பான். மூவர் ராமாயணத்தைப் படித்து, முதலோனாகிய வால்மீகியையே தான் பின்பற்றுவதாக எழுதினான் கம்பன். ஆயினும் அந்த மூவர் யார் என்று உரைகாரர் வகுத்ததில் காளிதாசன் பெயர் இலை. நான் ரகுவம்சத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிடுகையில் பல ஒற்றுமைகளைக் காண்கிறேன். ஆகையால் மூவரில் ஒருவர் காளிதாசனோ?
இதோ ஒரு பாடல்:–
அதவா க்ருத வாக் த்வாரே
வம்சே அஸ்மின் பூர்வ சூரிபி:
மணௌ வஜ்ர சமுத்கீர்ணே
சூத்ரஸ்யேவ அஸ்தி மே கதி:
-ரகுவம்சம் 1-4
“நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்.”
ரகுவம்சம் 1-4
வைரத்தில் இட்ட தொளையில், தான் எளிதில் சென்றதாகக் காளிதாசன் பணிவோடு சொல்கிறான். கம்பன், ராமரின் அம்பு ஏழு மராமரங்களைத் துளைத்ததை நினைவு கூறுகிறான். இதோ கம்பன் பாடல்:-
Picture: Rama and Seven Trees
நொய்தின் நொய்ய சொல் நூல் கற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்வதற்கு எய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொல் நின்ற தேயத்தே
அவை அடக்கம், பால காண்டம்
பொருள்:–
சான்றோர்கள் சபித்த சாபச் சொல்லைப் போலத் தப்பாமல், ஏழு மராமரங்களையும் துளையிட்டான் ராமன். அவனைப் பற்றிய பெரிய சரிதத்தை சம்ஸ்கிருதத்தில் ராமாயணமாகச் செய்து முடித்த தவ முனிவன் வால்மீகியின் கவிதைகள் நிலை பெற்ற இந்த தேசத்திலே, எளியவனுக்கும் எளியவனான நான் என் கவிகள் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கினேன் . இது என்ன வியப்பு!
திடீரென ராமன் துளையிட்ட ஏழு மராமரங்கள் , கம்பனுக்கு நினைவுக்கு வந்தது ஏன்? பெரியோர்களின் சாபம் தப்பாமல் எப்படி போகுமோ, அதே போல எனது சொற்களும் வால்மீகி என்ற பெரியோனின் சொல் போன வழியில் , ஏழு மரங்களைத் துளைத்து அம்பு சென்றது போலச் செல்லும்.
வால்மீகியின் வைரத்துளை என்பது காளிதாசனின் வாசகம்
இராமனின் மராமரத் துளை என்பது கம்பனின் வாசகம்.
நேரடியாக கம்பன் அப்படிச் சொல்லாவிடினும் முன் பின் பாடல்களை காளிதாசனின் அவை அடக்கத்தோடு ஒப்பிடுகையில் அது காளிதாசனின் தாக்கம் என்பதைக் காட்டும்.
முந்தைய கட்டுரைகள் (Earlier Posts):–
புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி ,Date: 1 June 2016
‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’, 21-2-2013
You must be logged in to post a comment.