WRITTEN BY S NAGARAJAN
Date: 22 September 2016
Time uploaded in London:5-41 AM
Post No.3176
Pictures are taken from various sources; thanks.
உத்வேகமூட்டும் கதைகளின் தொடர்
ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை!
ச.நாகராஜன்
உத்வேகமூட்டும் கதைகளில் இரண்டைப் (ஒரு பெனிசிலின் கதை அத்தியாயத்தில்) பார்த்தோம். இதோ இன்னும் இரண்டு!
ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுய சரிதை என்ற இந்தச் சுயசரிதையை எழுதியவர் போர்ஷியா நெல்ஸன் (Portia Nelson)
கதை நல்ல ஒரு நீதியை நமக்குப் போதிக்கும்.
முதல் அத்தியாயம்
நான் தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.
அங்கு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது. நல்ல ஆழமான பள்ளம்.
அதில் விழுந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அது எனது தவறு தான்!
அதிலிருந்து மீள்வதற்கு நெடு நேரம் ஆனது.
இரண்டாம் அத்தியாயம்
நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.
அங்கு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது.
அதைப் பார்க்காதது போல பாசாங்கு செய்தேன்.
அதில் மீண்டும் விழுந்தேன்.
அதே இடத்தில் விழுந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை
ஆனால் அதில் எனது தவறு இல்லை.
அதிலிருந்து மீண்டு வருவதற்கு நெடு நேரம் ஆனது.
மூன்றாம் அத்தியாயம்
நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.
அங்கு ஓரத்தில் மிக ஆழமான ஒரு பள்ளம் இருந்தது.
அது அங்கு இருப்பதைப் பார்த்தேன்.
இருந்தபோதிலும் அதில் விழுந்தேன். அது ஒரு பழக்கம்,
என் கண்கள் திறந்தே தான் இருந்தன.
நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.
அது எனது தவறு தான்.
உடனடியாக் அதிலிருந்து மீண்டு விட்டேன்.
நான்காம் அத்தியாயம்
நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.
அங்கு ஓரத்தில் மிக ஆழமான ஒரு பள்ளம் இருந்தது.
அதைச் சுற்றிப் போய் விட்டேன்.
ஐந்தாம் அத்தியாயம்
நான் இன்னொரு தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.
எழுதியவர் போர்ஷியா நெல்ஸன்
பணக்கார பிரபுவின் வியாதி!
பணக்கார பிரபு ஒருவர் இருந்தார். அவருக்குக் கண்ணில் வலி.
வலி தாங்க முடியவில்லை. பல டாக்டர்களிடம் கண்ணைக் காண்பித்தார். வலி தீரவில்லை. ஏராளமான நிபுணர்களை அழைத்தார். வண்டி நிறைய மருந்துகள் வந்து சேர்ந்தன.
எதையும் விடவில்லை.ஆனால் கண்வலி போன பாடில்லை! இன்னும் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது.
ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
கடைசியில் ஒரு துறவி அவனிடம் வந்தார். அவரிடம் தன் நிலைமையைச் சொல்லி அழுதார் பிரபு.
துறவி கூறினார்; “ஒன்றுமே இல்லை, இது. சுலபமாகக் குணம் ஆகி விடும். நீங்கள் சில காலம் பச்சையாக இருப்பதை மட்டுமே பார்க்க வேண்டும், அவ்வளவு தான். நான் வருகிறேன்.”
அவர் கிளம்பி விட்டார்.
சிகிச்சையோ விநோதமாக இருந்தது. ஆனால் எளிதாகப் பின்பற்றக் கூடியது தானே!
பிரபு ஏராளமான பெயிண்டர்களை உடனே வரவ்ழைத்தார். பார்க்கும் இட்மெல்லாம் பச்சை வண்ணத்தை அடிக்கப் பணித்தார்.
எங்கு நோக்கினும் பச்சை! ஒரே பச்சை.
பீப்பாய் பீப்பாயாக பச்சை வண்ணம் அவர் மாளிகையில் எப்போதும் இருக்க ஆரம்பித்தது. எதைப் பார்த்தாலும் அது பச்சையாக இருக்க வேண்டுமே!
சில நாட்கள் கழிந்தன. துறவி மீண்டும் பிரபுவைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்த காவலாளிகள் ஓடோடிச் சென்று ஒரு பீப்பாய் பச்சை வண்ணத்தை எடுத்து வந்து அவர் மீது தெளித்தனர்.
ஏனெனில் அவர் காவி ஆடையை அணிந்திருந்தார். அவரைப் பச்சை ஆக்கி விட்டனர்.
துறவி சிரித்தார்.
“அடடா! பச்சையாக் எதையும் பிரபு பார்க்க வேண்டுமே என்பதற்கா இந்தப் பாடு. நீங்கள் இப்படி உலகத்தையே பச்சை ஆக்குவதற்குப் பதில் ஒரு பச்சைக் கண்ணாடியை வாங்கி பிரபு அணிவதற்குக் கொடுத்திருக்கலாமே! முழு உலகையும் பச்சை ஆக்குவது சாத்தியமா, என்ன!”
நாமும் நமது பார்வையை மாற்றிக் கொண்டால் உலகமும் அதன்படியே தோற்றமளிக்கும்!
உலகை மாற்ற முயல்வது முட்டாள் தனம்! முதலில் ந்மது பார்வையை ஒழுங்காக ஆக்கிக் கொள்வோம்!”
குட்டிக் கதைகள் தாம், ஆனால் போதிக்கும் நீதியோ!
************
You must be logged in to post a comment.