Written by London Swaminathan
Date: 13 November 2016
Time uploaded in London: 14-15
Post No.3350
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
இயம் சீதா மம சுதா
“இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல் போல தொடர்ந்து வரட்டும்” — என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது பிற்காலத்தில், மகளைக் கொடுக்கும் எல்லா தந்தையரும் சொல்லும் சொற்களாக, வாக்கியமாக மாறிவிட்டது.
“இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ!, ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண் ஹீஷ்வ பாணிநா”– பால காண்டம், வால்மீகி ராமாயணம்.
Siva and Uma kalyan
திருவாசகத்தில்
மாணிக்க வாசகரும் கூட இந்தச் சொற்ளை அப்படியே பயன்படுத்தியுள்ளர். அவருக்குப் பின்னர் வந்த கம்பன், பயன்படுத்தியதில் வியப்பில்லை. ஏனெனில் அவரே தான் வால்மீகி யைப் பின்பற்றி ராமாயணத்தை இயற்றியதாகக் கூறுகிறார்.
திருவாசகத்தின் ஒரு பகுதியான திருவெம்பாவையில் வரும் பாடல் இதோ:-
உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப் போங்ககேள்
-திருவெம்பாவை, 19
மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி (POSTED ON 15TH JANUARY 2012) என்ற எனது பழைய கற்பனைப் பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்
Siva and Parvati wedding, Ellora
கம்ப ராமாயணத்தில்
கம்பனும் இதை ராமன் வாயிலாக வெளிப்படுத்துகிறான் (கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்)
நெய்யடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்
கைய்யடை என்ற அச் சனகன் கட்டுரை
பொய்யடை ஆக்கிய பொறி இலேனொடு
மெய்யடையாது இனி விளிதல் நன்றரோ
பொருள்:-
இராமன், இலக்குவனை நோக்கிச் சொன்னது:– நெய்வார்த்து உண்டாக்கப்பட்ட ஹோமத்தீயின் முன்னால், சீதையைக் கொண்டுவந்து நிறுத்தி, இவள் உனக்கு அடைக்கலம் என்று என்னிடம் ஜனகன் கூறினான். அந்த சொற்களை இன்று பொய்யாக்கிவிட்டேனே. இனிமேல் நான் இதை மெய்யாக்க முடியாது. ஆகையால் நான் இறப்பதே மேல்.
இன்றும் கூடப் பெண்களைத் திருமணம் செய்து கொடுபோர், “ இனி இது உங்கள் வீட்டுப் (பெண்) பிள்ளை; உங்களிடம் அடைக்கலம் புகுந்துவிட்டாள்; கண்மணி போலக் காப்பாற்றுஙள்” -என்று சொல்லி (ஆனந்தக்) கண்ணீர் விடுவதைக் காணலாம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜனகன் சொன்ன அந்த சத்திய வாக்கியம் “இயம் சீதா மம சுதா” — காலத்தால் என்றும் அழியாத கல்லெழுத்து ஆகிவிட்டது. இவள் உன்னை நிழல் போலப் பிந்தொடர்வாள் — என்று ஜனகன் சொன்ன சொல்லும் உண்மையானது. கானகம் என்பது கொடிய விலங்குகள் வாழும் இடம் என்ற போதும் அவன் பின்னால் நிழல் போலப் போனாளே அந்தப் பெண்ணரசி! ஒவ்வொரு கட்டத்திலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு நல்ல செயல்களைத் துணிந்து செய்த கதா பாத்திரங்களினால் என்றும் அழியாத காவியம் ஆகிவிட்டது இராமாயணம்!
–subham–