Written by S NAGARAJAN
Date: 28 December 2016
Time uploaded in London:- 5-34 AM
Post No.3490
Pictures are taken from different sources; thanks.
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 84.
புத்த தர்மத்தில் பக்தர்களில் ஏழு பிரிவுகள் உண்டு.
- பிட்சுக்கள் – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இவர்கள்
- பிட்சுணி – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்மணிகள்
- சிக்ஷம்ணா – ஆறு உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
- ஸ்ரமணிரா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
- ஸ்ரமணிரிகா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகப் பெண்மணிகள்
- உபாசகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியன்
- உபாசிகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியப் பெண்மணி
இந்த ஏழு வகைப் பிரிவினரின் அஸ்திகளை வைப்பதற்காக ஒரு பெரிய ஸ்தூப கட்டிடம் இந்த வருடத்தில் அமைக்கப்பட்டது.
அதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது பத்தடி ஆழத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில், “ஸ்ரீமதி லி. ஃபான் யாங்கைச் சேர்ந்தவர் ஜியா ஜிங் ஆட்சியில் (1525-1526ஆம் ஆண்டு) நான்காம் ஆண்டில் மறைந்தவர்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அவரது முகம் உயிரோடிருப்பது போல அன்றலர்ந்த நிலையில் இருந்தது. அவரை எரியூட்டும் சமயம் அந்த சிதையிலிருந்து எழுந்த ஜுவாலைகள் தாமரை வடிவில் உருவெடுத்தன.அவரது அஸ்தி உபாசிகாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.
ஆலயத்திற்கு வலப்புறத்தில் இருந்த அனைத்து கல்லறைகளும் தோண்டப்பட்டன. எரியூட்டப்பின்னர் எடுக்கப்பட்ட அஸ்திகள் ஸ்தூபத்தில் முறைப்படி வைக்கப்பட்டன.
ஒரு கல்லறையில் இருந்த கல்லறை வாசகத்தில் டாவோ மிங் என்ற பிட்சுவின் வாழ்க்கை பற்றி பொறிக்கப்பட்டிருந்தது. அவர் டாவோ-குவாங் ஆட்சியின் போது (1821-1850) பிறந்தவர். சங்கத்தில் சேருமாறு அவர்கள் பெற்றோரால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டவர். முறைப்படியான சடங்குகளுக்குப் பின்னர் அவர் அவலோகிதேஸ்வரர் நாமத்தைச் சொல்ல ஆரம்பித்தார்
அவர் படுத்த படுக்கையாக கிடந்த சமயம், ஒரு நாள் இரவு போதிசத்வர் அவர் கனவில் தோன்றி அவரைக் குளிக்குமாறு ஆணையிட்டார். அதற்குப் பின்னர் அவர் கனவில் போதிசத்வர் வரவே இல்லை.
குளித்ததற்குப் பின்னர் அவர் கால்கள் மிகவும் இலேசாக ஆயின. அடுத்த நாள் காலை அவரால் மற்றவர்களைப் போல நடக்க முடிந்தது. அவர் அகத்தில் ஞானம் உதிக்கவே இறுதி வரை போதிசத்வர் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கல்லறையில் இருந்த் சவப்பெட்டியின் மூடி கரையானால் அரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கரையான் அரிப்பு ஒரு சித்திர வடிவில் இருந்தது. அது ஒரு ஏழு மாடி எண்கோண ஸ்தூப வடிவில் இருந்தது. அந்த பிட்சுவின் தவத்திற்கான சித்தியாக அது அமைந்திருந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.
இப்படியாக அந்த ஆண்டு முடிவிற்கு வந்தது.
-தொடரும்
******