Written by S NAGARAJAN
Date: 7 January 2017
Time uploaded in London:- 5-14 AM
Post No.3521
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 26
by ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 87. இந்த வருடம் யூனான் மாகாணத்தில் ஏராளமான பிரச்சினைகள் வெடித்தன. இராணுவ வீரர்கள் நினைத்த வீடுகளுக்குளெல்லாம் நுழைந்து அட்டகாசம் செய்தனர். மக்கள் அறுவடை செய்ய வயல்வெளிகளுக்குச் செல்லவே பயந்தனர்.
ஸு யுன் நேராக ராணுவ கமாண்டரின் அலுவலகத்திற்குச் சென்றார். மக்களின் துன்பங்களை எடுத்துச் சொன்னார். உடனே பிட்சுக்களுடன் தங்கள் வயல்வெளிகளுக்குச் செல்லும் எந்த விவசாயிகளையும் ராணுவ வீரர்கள் அநாவசியமாக தொந்தரவு செய்யக் கூடாது என்று கமாண்டர் உத்தரவைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆலயத்திற்கு வந்து விட்டனர். அங்கு அரிசி, க்ஞ்சி ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டது.
கையிருப்பு தீர்ந்தவுடன் வெறும் தண்ணீரிலேயே வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிட்சுக்களுக்கும் நீரே ஆகாரம்.. தங்களால் பிட்சுக்களும் வெறும் தண்ணீரை மட்டும் ஏற்பதைப் பார்த்து விவசாயிகள் அழுதனர்.
நிலைமை சீரானவுடன் தான் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினர். இந்த அனுபவத்தால் பல விவசாயிகள் மடாலயத்தை எப்படியேனும் பாதுகாப்பது என்ற உறுதியுடன் தன்னார்வத் தொண்டர்களாக மாறினர்.
மடாலயத்தின் தலைமைப் பொறுப்பில் ஸு யுன் இருந்ததால் சூத்ரங்களை அவர் ஓதி வந்ததோடு, சான் தியானத்தையும் பல வாரங்கள் சொல்லித் தந்தார்.
இந்த கால கட்டத்தில் பட்டுப் போன் பல மரங்கள் தீடீரென்று தழைத்து பசுமையாயின! அவற்றில் தாமரை போன்ற மலர்கள் அரும்பின. ஆலயத் தோட்டத்திலோ அனைத்துக் கறிகாய்களும் அபரிமிதமாக விளைந்தன. அங்கு மல்ர்கள் பச்சைத் தாம்ரை வண்ணத்தில் தோன்றின. நிற்கும் நிலையில் உள்ள புத்தரைப் போல அந்த ம்லர்கள் விகசித்ததால் அது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
இந்த அபூர்வமான நிகழ்வை உபாசகர் ஜாங் ஜூ ஜியான் ஒரு கதையாக வர்ணித்து கல்வெட்டில் பொறித்தார். அது மடாலயத்தில் வைக்கப்பட்டது.
ஸு யுன்னுக்கு இப்போது வயது 88. இந்த வருடம் சூத்ரங்களின் விளக்கம் ஸு யுன்னால் வழக்கம் போல விவரிக்கப்பட்டன. அத்துடன் சான் தியானமும் நடத்தப்பட்டது. பல்வேறு கூடுதல் ஹால்களும் கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டன. மணி வைக்கப்பட்டிருந்த கோபுரமும் புதுப்பிக்கப்பட்டது.
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 89. இந்த வருடம் புத்தரின் சிலைகளைப் புதிதாகச் செய்வதற்காக உபாசகர் வாங் ஜியூ லிங்குடன் ஸு யுன் ஹாங்காங்கிற்குப் பயணமானார். குவாங் டாங் மாகாண கவர்னரான ஜெனரல் சென் ஜென் ரு ஹாங்காங்கிற்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி ஸு யுன்னை காண்டன் நகருக்கு விஜயம் புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு யி யாங் யுவான் சானிடோரியத்தில் ஸு யுன் தங்கலானார். அங்கு கவர்னருடன் நெங் ரெப் மடாலயத்திற்கு ஸு யுன் சென்றார். காவோ சி என்ற இடத்தில் இருந்த மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஸு யுன்னை கவர்னர் வேண்டினார். ஆனால் ஸு யுன் அந்த அழைப்பை மறுத்தார்.பல இடங்களுக்கும் சென்ற ஸு யுன் அசோகர் ஆலயத்திற்கும் சென்றார். பின் அங்கிருந்து மாஸ்டர் வென் ஷியுடன் ஷாங்காய் நகர் சென்றார். புது வருடமும் வந்தது.
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 90 வருடத்தின் முதல் மாதத்தில் ஷாங்காயிலிருந்து ஸு யுன் மவுண்ட் கு-வுக்குத் திரும்பினார். கப்பற் படை மந்திரியான யாங் ஷு ஜுவாங் ஸு யுன்னைச் சந்தித்து கு ஷான் மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டினார். சங்கத்தில் சேரும் போது முதன் முதலில் அங்கு தான் ஸு யுன் தன் தலையை மழித்துக் கொண்டார். அந்த நினைவு அவருக்கு வந்தது. அந்த நீங்காத நினைவுகளுடன் தனது குருவின் அபாரமான குணங்கள் அவர் மனதில் நிழலாடின. அந்த அழைப்பை எப்படி மறுக்க முடியும்?
ஸு யுன் தனது பொறுப்பை உதறி விடத் தயாரில்லை. உடனே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
-தொடரும்
**********