Written by London swaminathan
Date: 21 FEBRUARY 2017
Time uploaded in London:- 19-56
Post No. 3657
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் ஆரம்பகால மன்னர்கள் (பழைய ராஜ்யம் Old Kingdom) இறந்தபோது அவர்களுடன் நூற்றுக்கணக்கான அடியாட்கள், காமக்கிழத்தியர் (Concubines), குள்ளர்களும் (Dwarves) புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இவர்கள் தானாக உயிர்த் தியாகம் செய்தார்களா அல்லது பலவந்தமாக நரபலி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்வி.
வால்மீகி ராமாயணத்தில் ராமன் சரயு ஆற்றில் விழுந்து உயிர்த் தியாகம் (ஜல சமாதி) செய்தபோது அவரோடு ஏராளமான பொது மக்களும் தாமாக முன்வந்து உயிர்த் தியாகம் செய்த செய்தி உள்ளது.
திருஞான சம்பந்தர் திருமண நாளன்று மனைவியுடன் அக்கினியில் புகுந்தபோது அவர் ஏராளமானோரை அழைத்துச் சென்றார். இது போல மன்னர்களும், புனிதர்களும் இறக்கும்போது அவர்களுடன் சென்றால் சுவர்க்கத்துக்குள் எளிதாகப் போக முடியும்; இது சொர்க்கத்துக்கு ஒரு சுருக்குவழிப்பாதை (Short cut route) என்பது மக்களின் நம்பிக்கை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது பிசிராந்தையார் முதலியோரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இந்தக் காரணத்தால்தான். வடக்கிருத்தல் என்பது ஒரு புனித நோன்பு.
மஹா பத்தினியான சித்துர் ராணி பத்மினி , அலாவுதீன் கில்ஜியின் கரங்கள் தன் மீது பட்டுவிடக்கூடாதென்பதற்காக தீக்குளித்தபோது அவளுடன் நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீராங்கனைகள் தீக்குள் பாய்ந்து உயிர் நீத்ததற்கும் இதுவே காரணம். போரில் இறப்பவர்களுக்கு வீர சுவர்க்கம் கிர்டைக்கும் என்பது பகவத்கீதையிலும் புறநானூற்றிலும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. போருக்கு முன்பாக தன்னைத்தானே பலிகொடுத்து வீரத்தைத் தூண்டிவிடும் வீரர்களின் சிலைகள் தமிழ்நாடு முழுதும் உள்ளன. இது மஹாபாரத காலத்தில் துவங்கியது மஹாபாரதத்தில் வரையப்பட்டுள்ளது.
எகிப்தில் நடந்தது என்ன?
எகிப்திலும் தாமாக முன்வது இறந்தனரா என்பதே கேள்வி
பிளிண்டர்ஸ் பெற்றி Flinders Petrie என்பவர்தான் முதல் முதலில் எகிப்தில் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவர் ABYDOS அபிதோஸ் நகரில் 1900ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்தினார். முதல் அரச வம்சத்தைச் சேர்ந்த தஜெர் (Djer of First Dynasty) என்ற மன்னரின் புதைகுழிக்குப் பக்கத்தில் 317 துணைப் புதைகுழிகள் இருந்தன. இது தவிர நைல் நதி ஓரமாக ஏராளமான கல்லறைகள் இருந்தன.
முதல் அரச வம்சம் தொடர்பான சில விஷயங்கள் சின்னச் சின்ன கல்வெட்டு வில்லைகளாகக் கிடைத்தன. அதில் முக்கிய தர்பார் நிகழ்ச்சிகளும் சமயம் தொடர்பான சடங்குகளும் வரையப்பட்டுள்ளன.
இரண்டு வில்லைகளில் பயங்கரக் காட்சிகள் உள்ளன. உயிருடனுள்ள ஒரு கைதியின் நெஞ்சில் ஒருவன் கத்தியைப் பாய்ச்சுகிறான். அவனது ரத்தத்தைப் பிடிப்பதற்காக அருகிலேயே ஒரு கிண்னம் வைக்கப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால் போர்க்கைதிகள், குற்றவாளிகளை சமயச் சடங்குகளில் பலி கொடுப்பது தெரியவந்த்துள்ளது.
ஆனால் ஒவ்வொரு மன்னர் இறந்தபோதும் ஏராளமானோர் பலிகொடுக்கப்பதற்கான ஆதாரஙள் எதுவும் இல்லை. ஆரம்ப கால கிசா பிரமிடுக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக கல்லறைகள் இருந்தபோதும் அவை எல்லாம் அரசாங்க திகாரிகள் இறந்தபின்னர் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டவையே. இது அவர்களுக்குக் கிடைத்த ஒரு சலுகை!
முதல் அரசவம்ச (First Dynasty) கால கல்லறைகளில் ஒரு முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. இறந்தவரின் பெயரும் அவர் பதவியும் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயர் அதிகாரிகள் இல்லை. அரசரின் சேவகர்கள், காமக் கிழ்த்தியர், குள்ளர்கள் ஆகியோரின் கல்லறைகளாகும்.
இந்தியாவிலும் அரண்மனைகளில் குள்ளர்களை வேலைக்கு வைக்கவேண்டும் என்று நீதி சாத்திரம் கூறுகிறது. இந்தியாவிலும் அரசனின் அந்தப்புரத்தில் இதுபோல கள்ளக் காதலிகள் இருப்பர்.
அவர்களுடைய சடலம் உள்ள நிலை, எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டனர் என்பதை ஆராய முடியாதவாறு கல்லறைத் திருடர்கள் அவைகளைத் தோண்டி நிர்மூலம் செய்துவிட்டதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டது.
சீனா, மெசபொடோமியா, பழைய நூபியா(Old Nubia) ஆகிய நாடுகளின் கல்லறைகளில் சடலமோ, எலும்புக்கூடோ உடகார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அது உயிருடன் புதைக்கப்பட்ட ஆசாமி என்பதை அறிந்தோம். சில இடங்களில் ஒரே கல்லறையில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட தையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எகிப்தில் அப்படி இல்லாமல் இற ந்தோருக்கு மரியாதை கொடுத்திருப்பதைக் காண முடிகிறது. தனித்தனி கல்லறைகளில் சடலங்கள் புதைக்கப் பட்டன. தலையைச் சீவி பலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு புரியாத விசித்திரப் புதிர் மட்டும் இருக்கிறது! ஆஹா (Aha) என்ற மன்னரின் (பாரோவின்) கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்ட எல்லோருடைய வயதும், 25-க்கும் குறைவு! அரசன் மறைவை அடுத்து அவர்களும் இறந்தது அல்லது இறக்கவைக்கப்பட்டது தெரிகிறது
நரபலி தடயங்கள்
முதல் அரச வம்சத்தின் இரண்டு அரசர்களின் (பாரோக்கள்) கல்லறைகளில் நரபலிக்கான நல்ல தடயம் கிடைத்தன. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது மன்னரின் மீதுள்ள அபிமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்களா என்று சொல்ல முடியாது. சமர்கேட் Semerkhet (சமரகேது), கா (Qaa) (இந்துமதத்தில் கா என்றால் பிரம்மா என்று பொருள்) ஆகிய இருவரின் கல்லறைகளுக்கு அருகிலுள்ள சில கல்லறைகள் ஒரே நேரத்தில் மூடப்படுள்ளன. அவர்களாக உயிர்த் தியாகம் செய்திருக்கலாம். 1989ல் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ இறந்தவுடன் அவருடைய பழைய நன்றியுள்ள ஒரு சேவகன் தற்கொலை செய்துகொண்டான்; காரணம்- மன்னருக்கு மேலுலகத்திலும் சேவை செய்ய!
எகிப்திலும் மக்களின் சமய நம்பிக்கை காரணமாக இறந்திருக்கலாமே! நமது நாட்டிலேயே ராமாயண, புறநானூற்றுச் சான்றுகள் உளவே!
-சுபம்–