Written by S NAGARAJAN
Date: 28 March 2017
Time uploaded in London:- 6-42 am
Post No.3764
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாக்யா 17-3-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆராய்ந்து பார்த்தால் அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல என்று கூறும் நிபுணர்!
BY ச.நாகராஜன்
“உனது வாழ்க்கையை வாழ இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று எதுவுமே அற்புதம் இல்லை என்று வாழ்வது. இன்னொன்று எல்லாமே அற்புதங்கள் தான் என்பது போல வாழ்வது!” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வாழ்க்கையில் நாம் அற்புதங்கள் என்று சொல்பவை எல்லாம் அற்புதங்களே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் ஒரு புள்ளி விவர நிபுணர்.
ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு அற்புதம் மாதம் ஒரு தடவையாவது நிகழ்கிறது என்பது அவரது வாதம்.
டேவிட் ஜே. ஹாண்ட் (David J Hand) என்ற அந்த நிபுணர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘தி இம்ப்ராபபிலிடி பிரின்ஸிபிள்’ (The Improbability Principle – Why coincidences, Miracles and Rare Events Happen Every Day)
Probability என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நிகழ் வாய்ப்பு’ என்பது பொருள். இதற்கு எதிர்மாறாக நிகழ வாய்ப்பே இல்லாத நிலை நிகழ்வதற்கும் கூட ஒரு கொள்கை இருக்கிறது ; இதன் படி பார்த்தால் எதுவுமே அற்புதம் இல்லை என்பது ஹாண்டின் கொள்கை.
ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். பிரிட்டனில் டார்லிங்டனில் ஹில்டா சாலையில் வாழ்ந்த எண்பது வயதான ஃப்ராங்க் ஹ்யூஸ் என்பவர் இறந்து விட்டார் என்ற செய்தியை செய்தித்தாளில் பார்த்த அவரது நண்பர்கள் அனைவரும அவருக்காக நடந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு சென்று ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தனர்; அவ்ர் நினைவை போற்றிப் பேசினர். அவர் ஒரு டிரைவராகப் பணியாற்றியவர்.
ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அவர்கள் இரங்கல் தெரிவித்த அந்த் ஹ்யூஸ் கொஞ்ச தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அனைவரும் விக்கித்து நின்றனர்.
செய்தித்தாளில் வெளி வந்த ஃப்ராங்க் ஹ்யூஸ் என்பவர் இன்னொரு நபர். அவர் கடல் வழியில் சென்று அடிக்கடி வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி. அதனால் தான் இரங்கல் கூட்டத்தில் தமக்கு அறிமுகமாகாத ஏராளமான நபர்கள் இருந்தபோதும் கூட குடும்பத்தினர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இதே போல ஆங்கிலத்தில் விற்பன்னரான சாமுவேல் ஜான்ஸனுக்கு ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் நிர்வாகம் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. ஆனால் அதே அழைப்பு இன்னொரு சாமுவேல் ஜான்ஸனுக்கும் விடுக்கப்பட்டிருந்தது. அவர் செயிண்ட் மார்டின் பீல்டின் நூலகராக வேலை பார்த்த ஒருவர். ஆனால் இருவரும் புத்தகத்தை மொழிபெயர்க்கவில்லை என்பது வேறு விஷயம்!
இப்படி நம்ப முடியாத தற்செயல் ஒற்றுமைகள் ஏராளம் ஏற்படுவதை அன்றாட வாழ்வில் நாம் காண்கிறோம். அதை அற்புத சம்பவம் என்று சொல்கிறோம்.
லாட்டரியில் ஒரு எண் தொடர்ந்து இரு முறை விழுவது, ஒரே நபரின் மீது இரு முறை இடி விழுவது, அடிக்கடி ஒருவரே லாட்டரி பிரைஸில் வெல்வது போன்றவை எல்லாம் இந்த ரகம் தான்!
பிரம்மாண்டமான உலகில் ‘இதெல்லாம் சகஜம்ப்பா” என்று ஹாண்ட் கூறுவதற்கு ஐந்து விதிகளை முன் வைக்கிறார்.
நியூட்டனின் நகர்தல் பற்றிய மூன்று விதிகள் போல இவையும் உண்மை தான் என்பது அவரது வாதம்.
1)தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தே தீரும் என்ற விதி 2) மிக பிரம்மாண்டமான நம்பர்களின் அடிப்படையிலான விதி 3) தேர்வு செய்வதிலான விதி 4) நிகழக்கூடியவையே என்பது பற்றிய விதி 5) இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் என்ற விதி ஆகிய ஐந்து விதிகளில் ஒவ்வொரு அற்புதத்தையும் உரசிப் பார்த்தால் அற்புதம் என்று ஆச்சரியப்பட ஒன்றுமே இருக்காது என்கிறார் ஹாண்ட்.
தன் சொந்த அனுபவத்தின் மூலம் இந்த விதிகளை அவர் விளக்குகிறார்.
2012ஆம் ஆண்டு அவர் பிரிட்டனில் டெல்போர்டில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போது ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனக்கென ஒரு அறையைப் பதிவு செய்தார்.
ரிஸப்ஷனில் இருந்த பெண்மணி சற்று திகைத்தார். இப்போது தானே டேவிட் ஹாண்ட் என்று அறையை ‘புக்’ செய்தேன், அவர் உள்ளே இருக்கிறாரே என்று குழப்பத்துடன் வினவினார்.
ஹாண்டும் சற்று திகைத்துப் போனார். ஆனால் சரி பார்த்ததில் உள்ளே இருந்தவர் இன்னொரு டேவிட் ஹாண்ட். இது எப்படி சாத்தியம்? இங்கு தான் அவரது ‘ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் இரண்டு சம்பவம் வரலாம்’ என்ற விதி வருகிறது.
ஒரு ஹோட்டலில் 400 பேர் அறையை பதிவு செய்வதாக கணக்கில் எடுத்துக் கொண்டு ஹாண்ட் வருடம் 20 முறை ஹோட்டலில் அறையைப் பதிவு செய்யும் வழக்க்ம் உடையவர் என்பதையும் கணக்கில் கொண்டால் ரிஸப்ஷனில் இருக்கும் பெண்மணிக்கு 8000 வாய்ப்புகள் ஒப்பிடுவதற்கு கிடைக்கின்றன. ஒரு வருடத்தில் ஹாண்ட் சந்திக்கும் நபர்களை விட இந்த எண்ணிக்கை மிக அதிகமானது என்பதால் இப்படி ஒரே பெயரில் ஒரு ஹோட்டலில் இரு நபர்கள் இருப்பது சாத்தியம் தான் என்று ஆகிறது.
திடீரென இப்படி ஒரே ஒரு சம்பவத்தைப் பார்த்து வியக்காமல் உலகில் உள்ள ஹோட்டல்களில் எல்லாம் எந்தப் பெயரில் எத்தனை பேர் தங்குகின்றனர் என்று பார்த்தால் இதை விட ஆச்சரியகரமான தற்செயல் ஒற்றுமைகளை நிறையக் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஹாண்ட்.
ஜனத்தொகையில் 50000 பேர்கள் ஒரே பெய்ரைக் கொண்டிருந்தால் அவர்களில் 263 முறை ஹோட்டலில் அறையை பதிவு செய்தால் நிச்சயமாக இரு முறை ஒரே பெயரைக் கொண்டவர்கள் ஒரே ஹோட்டலில் இருப்பார்கள் என்கிறது அவரது புள்ளி விவர ஆய்வு.
அற்புதங்களை நம்புபவர்களுக்கு இந்த ஆய்வு சற்று ஏமாற்றத்தைத் தருவது உண்மை. அவர்கள் தரப்பு வாதம் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்
அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..
சைக்கோஅனாலிஸிஸின் தந்தை என்று புகழப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட் மனிதர்களுக்கு ஏற்படும் விதவிதமான் போபியாக்களைப் பற்றி – பல்வேறு பயங்களைப் பற்றி -விளக்கியுள்ளார்.
ஆனால் அவருக்கே இரண்டு போபியாக்கள் உண்டு. ஒன்று fern என்னும் ஒருவகை தாவரத்தைப் பற்றிய பயம். எதற்காக இந்த வகைச் செடியின் மீது பயம் வருகிறது என்பதை அவரால் விளக்க முடியவில்லை.
இன்னொரு பயம் ஆயுதங்களைப் பற்றியது. ஆயுதங்களைப் பற்றிய பயமானது உணர்ச்சி மற்றும் செக்ஸில் பக்குவமான முதிர்ச்சி அடைந்தவர்க்கு ஏற்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அவருக்கு weapons – ஆயுதம் என்றாலும் பயம் fern – ஃபெர்ன் என்ற செடி என்றாலும் பயம்!
ஆயுதங்களைப் பற்றிய பயத்திற்கு HOPLOPHOBIA என்று பெயர்.
ஃபெர்ன் பற்றிய பயத்திற்கு PTERIDOPHOBIA என்று பெயர்
சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட போபியாக்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போபியா இருக்கிறது!
–subham–
You must be logged in to post a comment.