Written by S NAGARAJAN
Date:29 April 2017
Time uploaded in London:- 7-28 am
Post No.3861
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ஜோதிடமே துணையாகும்
ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம்:
விதி விளக்கம் – 1
ச.நாகராஜன்
ஜோதிடம் கடல் போன்ற ஒரு சாஸ்திரம். இதை நீந்திக் கடந்தவ்ர்கள் மிகச் சிலரே.
ஜோதிடத்தில் பலன் பார்க்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. திதியைப் பற்றி அவ்வளவாக யாரும் பொதுவாகப் பொருட்படுத்துவதில்லை.
ஆனால் ‘சோதிட தர்ஸனம் என்னும் விதி விளக்கம்’ என்னும் நூல் திதியின் அற்புத மஹிமைகளை நன்கு விளக்குகிறது.
1897ஆம் ஆண்டு “க்வர்ன்மெண்ட் உத்தியோகஸ்தராயிருந்து பென்ஷன் வாங்கி வரும் மிட்டா – முனிசாமி செட்டி. பி.ஏ. (பச்சையப்பன் காலேஜ்)” எழுதிய இந்த நூல் 1934ஆம் ஆண்டு சென்னையில் பதிக்கப்பட்ட ஒரு நூலாகும்.
நூலாசிரியர் தரும் பல்வேறு தகவல்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை.
அவற்றில் சிலவற்றை இந்தக் குறுந்தொடரில் பார்க்கலாம்.
- இந்து விரதமும் திதியும்
நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கும் விரதங்களும் முக்கிய பண்டிகைகளும் திதியை முதன்மைப் படுத்தியே அமைக்கப்பட்டுள்ளன. அனேக விரதங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே காணலாம்:
- கணேச சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி – சதுர்த்தி
- ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி
- ரத சப்தமி – சப்தமி
- கிருஷ்ண ஜயந்தி அல்லது கிருஷ்ணாஷ்டமி – அஷ்டமி
- ஸ்ரீ ராம நவமி – நவமி
- மஹா சிவராத்திரி,ம்ஹா சதுர்த்தசி – சதுர்த்தசி
- சித்திரா பௌர்ணமி – பௌர்ணமி
- மாளய அமாவாசை அல்லது சர்வபிதுரு அமாவாசை – அமாவாசை
இது தவிர இறந்த கால திதி அனுஷ்டானம், சில நட்சத்திர சம்பந்தமான திதிகள், சங்கராந்தி சம்ப்ந்தப்பட்ட திதிகள், ராமாயணம், ம்ஹாபாரதம் ஆகிய காவியங்களில் வரும் முனீஸ்வரர், ஆசாரியர் ஆகியோரின் பிறந்த அல்லது திதிகள் போன்றவை திதிகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
ஒவ்வொரு ஹிந்துவும் இறந்த கால திதியை அனுஷ்டித்தே பெரியோர்களுக்குச் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்கிறார்.
ஆகவே விதி விளக்கத்திற்குரிய் திதியை ஒவ்வொருவரும் தீர்க்கமாக அனுஷ்டிக்க வேண்டும்.
திதிகளே நவகிரகங்களுக்கு இருக்கும் ந்ன்மை தீமை பலன்களைத் த்ருகிறது. தீமையான திதியினால் அமைந்த கிரகங்களும் கூட எக்கதியில் அவைகள் நன்மையோ அல்லது இஷ்ட ப்ராப்தியோ செய்கின்றனவென்றும் , தீமையோ அல்லது மாரகமோ எப்போது செய்கின்றனவென்றும், எக்காலத்தில் யோகம் அதாவது, ஒரு ஜன்மாவின் லௌகிக அந்தஸ்து பொருள், சொத்து, க்ஷேமம், இவைகளுக்கு தீமையையோ அல்லது க்ஷேமத்தையோ விளைவிக்கின்றன என்றும் திதிகளினாலேயே ஏற்படுகின்றன.
ஒவ்வொருவரும் தங்கள் திதியை மிக நுட்பமாகக் கவனித்து வந்தால் அதன் பலனையும் உற்று நோக்கி வந்தால் திதியில் இருக்கும் தெய்வீக ரகசிய ந்ன்மை, தீமையை அறிய முடியும்.
இப்படிக் கூறும் இந்த ஜோதிடர், சோதிடத்தில் திதியின் மஹிமையை அலசி ஆராய்ந்து தருகிறார். நூலாசிரியர் தரும் மேலும் சில் சுவையான தகவல்களை அடுத்துக் காண்போம்.
-தொடரும்