Written by London Swaminathan
Date: 8 May 2017
Time uploaded in London: 20-19
Post No. 3889
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
உரைகல் பற்றிய உவமைகளைக் காளிதாசனும் சங்கத் தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்தியுள்ளனர். உலகில் வேறு எந்தக் கலாசாரத்திலும் பார்க்கமுடியாத உவமைகள் இவை.
இதிலிருந்து இரண்டு விஷயங்கள் புலப்படும்:
- உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான். மக்கள் எல்லோருடைய கைகளிலும் தங்கம் இருந்ததால் புலவர்கள் தங்கத்தின் மாற்றைப் பார்க்கும் உரைகல் உவமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
- உலகப் புகழ் பெற்ற அறிஞன், கவிஞன் காளிதாசன் கி.மு .இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாகப் பல அறிஞர்கள் 700 ஆண்டு வீச்சில் அவரது காலத்தை நிர்ணயித்தனர். உலகில் வேறு எந்தக் கவிஞகுக்கும் இல்லாத சிறப்பு இது!
ஆனால் நானோ 20, 30 கட்டுரைகள் மூலமாக காளிதாசன் சங்க காலத்துக்கும் முன்னால் வசித்தவன் என்றும் இதற்கு 200-க்கும் மேலான காளிதாசன் உவமைகள், சங்கத் தமிழரின் பதினென் மேல்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றன என்றும் காட்டிவருகிறேன். அவ்வகையில் உரைகல் உவமையும் சேரும். காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் பயன் படுத்தியுள்ளனர். ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
காளிதாசன் பகர்வது:-
செல்வத்துக்கு அதிதேவதையான லெட்சுமி ஓரிடத்திலும் நிலையாக இருக்க மாட்டாள்; ஆனால் மன்னன் அதிதிக்கு அருள்புரியும் நோக்கத்தோடு அவன் எப்போதும் அவனிடம் இருந்தாள் எப்படி இருந்தாள் என்றால் உரைகல்லின் மீது காணப்பாடும் தங்க ரேகை போல நிலையாக இருந்தாள் (ரகுவம்சம் 17-46)
प्रसादाभिमुखे तस्मिंश्चपलापि स्वभावतः।
निकषे हेमरेखेव श्रीरासीदनपायिनी॥ १७-४६
prasādābhimukhe tasmiṁścapalāpi svabhāvataḥ |
nikaṣe hemarekheva śrīrāsīdanapāyinī|| 17-46
மேகதூத காவியத்தில் காளிதாசன் புகல்வான்:
மேகமே! உஜ்ஜைனி நகர ராஜவீதிகள் வழியாக, காதலர் வீட்டுக்குச் செல்லும் காதலிகளுக்கு உன் மின்னல் வெளிச்சத்தால் வழிகாட்டு. உன் மின்னலானது உரைகல்லில் படிந்திருக்கும் தங்க ரேகை போல மெல்லியதாக இருக்கட்டும் (மேக.36)
இதே போல விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் உரைகல் உவமை வருகிறது
சங்கத் தமிழ் புலவர்கள்
சங்கத் தமிழ் புலவர்கள் செப்பியதைக் காண்போம்:
நற்றிணையில் (25) பேரிசாத்தனார்:-
செவ்வரி இதழ் சேண்நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி, பசுங்கேழ்ப்
பொன் உரை கல்லின், நல்நிறம் பெறூஉம்
வளமலை நாடன்
பொருள்:
நீண்ட தூரம் கமழும் பிடவப் பூவின் நறுந்தாதை நுகர்ந்த வண்டு, அந்த மகரந்தத் தூள் படிந்ததால் பொன் உரை கல் போலத் தோன்றும் வளம் உடைய நாட்டவனே…………………………………….
நற்றிணை (3) பாடலில் இளம்கீரனார் மொழிவது:-
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறா அர் நெல்லி வட்டு ஆடும்
பொருள்:
பொன்னை உரைக்கும் கல்லைப் போல வட்டமான அரங்கு அமைத்து, தம் தொழிலைக் கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காயை விளையாட்டுக் கருவியாகக் கொண்டு ஆடுவர்.
கச்சிப்பேட்டு நன்னாகையார் குறுந்தொகையில் (192) உரைப்பது:
மின்னின் தூவி இருங்குயில், பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப, மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
பொருள்:
மின்னுகின்ற இறகுகளை உடைய இனிய கரிய குயில் மாந்தோட்டப் பூவிலுள்ள நறும் தாதைப் பூசி, பொன்னை உரைத்த உரைகல் போல விளங்கும்.
பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல் (178):
வண்பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து
அலங்குகுலை அலரி தீண்டித்தாது உகப்
பொன்னுரை கட்டளை கடுப்ப…………..
பொருள்:
வெண் நாரைகள் இருப்பது போலத் தோன்றும் வெள்ளிய கூதளன் செடியின் அசையும் கொத்தில் உள்ள மலரில் பொருந்தியது; அப்போது அம்மலரின் பொடி மேலே உதிர்தலால் பொன் உரைக்கும் கட்டளைக்கல் லைப் போல அழகுற தோன்றியது.
உருத்திரக்கண்ணனார் (ருத்ராக்ஷன்) பாடிய பெரும்பாணாற்றுப் படையிலும் இப்படி உவமை உண்டு.
திருக்குறளில் (505)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
பொருள்:
அவரவர் செய்யும் செயல்களே அவர்களுடைய பெருமை, சிறுமை என்ற தகுதியைக் காட்டும் உரைகல்லாக இருக்கின்றன
–Subham–