Written by S NAGARAJAN
Date: 10 May 2017
Time uploaded in London:- 5-50 am
Post No.3894
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ஜென் குருமார்களும் சீடர்களும் – சுவையான சம்பவங்கள்!
ச.நாகராஜன்
ஜென் பிரிவில் ஏராளமான குருமார்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய சீடர்களும் உண்டு.
ஜென் பிரிவைப் பொறுத்த மட்டில் பல்வேறு விதமாக அவர்கள் சீடர்களுக்குச் சொல்லித் தருவார்கள்.
புரிந்து கொள்ள வேண்டியது சீடனின் கடமை. புரியாவிட்டால் புரியும் வரை புரியும் படி அவர்கள் சொல்லித் தருவர்.
இதையொட்டிய நூற்றுக் கணக்கான சம்பவங்கள் உண்டு.
இரண்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.
- கொள்ளிக்கட்டை பாடம்
ஹகுயின் (Hakuin) என்று ஒரு ஜென் மாஸ்டர். அவர் தன் சீடர்களிடம் டீக்க்டை வைத்திருக்கும் ஒரு பெணமணியைப் பற்றி வெகுவாகப் புகழ்வார். அவர் ஜென் மார்க்கத்தை நன்கு புரிந்திருக்கும் விதத்தை பெருமிதத்துடன் கூறுவார்.
அவரது சீடர்கள் அவர் கூறுவதை நம்ப மறுத்தனர்; சந்தேகப்பட்டனர். ஒரு சின்ன டீக்கடைவைத்திருக்கும் பெண்மணி எப்படி ஜென் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்க முடியும்?
இதைச் சோதிக்க சீடர்கள் ஒவ்வொருவராக அங்கு செல்வதுண்டு. அவர்கள் வரும் போதெல்லாம் அந்தப் பெண்மணி வ்ருபவர்களை நோக்கி அவர்கள் டீ அருந்த வந்திருக்கிறார்களா அல்லது ஜென் பற்றி அறிய வந்திருக்கிறார்களா என்று கேட்பார்.
டீ அருந்தத் தான் என்று பதில் வந்தால் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான டீயை சுவைபடப் போட்டுத் தருவார்.
மாறாக ஜென் பற்றி அறியத்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னால் சமிக்ஞை மூலம் கடைக்குப் பின்னால் போகச் சொல்வார்.
பின்னர் கடையிலிருக்கும் அடுப்பிலிருந்து கொள்ளிக்கட்டையை எடுத்து ஒரு அடி அடிப்பார்.
இதற்கு யாரும் தப்பியதே இல்லை.
- சுவர் ஏறிக் குதிக்கும் சீடர்
செங்காய் (Sengai0 என்று ஒரு ஜென் மாஸ்டர். அவரிடம் தியானம் கற்க நிறைய சீடர்கள் வந்து சேர்ந்தனர். அந்த சீடர்களில் ஒருவர் மடாலயத்தின் சுவரேறிக் குதித்து வெளியேறி நகருக்கு உல்லாசமாகப் போய் வருவார்.
ஒரு நாள் சீடர்கள் தங்கும் விடுதிக்கு வந்த செங்காய் தனது சீடர்களில் ஒருவர் மட்டும் அங்கு இல்லை என்பதைக் கண்டார்.
ம்டாலயத்தைச் சுற்றி வருகையில் சுவரின் அருகே ஏறிக் குதிக்க ஒரு ஸ்டூல் இருந்ததைப் பார்த்து விஷயத்தைப் புரிந்து கொண்டார்.
உடனடியாக் அந்த ஸ்டூலை அகற்றி அந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டார்.
தனது உல்லாசப் பயணத்தை முடித்த சீடர், திரும்பி வந்து சுவர் வழியே கீழே ஸ்டூலின் மீது காலை வைத்தார்.
அது ஸடூல் இல்லை, மாஸ்டரின் தலை.
கீழே தரையில் இறங்கியதும் தன் மாஸ்டரைப் பார்த்ததும் தான் மாஸ்டரின் தலையில் காலை வைத்ததை நினைத்து பயந்து போய் திகைத்து நின்று விட்டார்.
அவரை நோக்கிய செங்காய், “இதோ பார், வெளியில் ரொம்ப குளிராக இருக்கிறது. இதில் சளி அல்லவா பிடிக்கும். சளி பிடிக்காமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று கூறி விட்டு நகர்ந்தார்.
அந்த நாள் முதல் அந்த் சீடர் சுவ்ரேறிக் குதித்து வெளியே சென்றதே இல்லை!
ஜென் போதனை, தனி விதமான் போதனை!
*****