Translated by London Swaminathan
Date: 10 June 2017
Time uploaded in London- 14-58
Post No. 3989
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
ரெவரெண்ட் ஆஸ்பார்ன் மார்டின் என்பவர் 1914 ஆண்டில் ‘இந்தியாவின் கடவுள்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் ஆங்கிலத்தில் தந்துள்ள மூன்று சம்பவங்களைத் தமிழில் தருகிறேன்.
All the three stories are summarised from ‘The Gods of India’ by Rev E Osborn Martin, London, year 1914.
அக்பர் பூர்வ ஜன்மத்தில் இந்து சந்யாசி!
ஆக்ரா கோட்டையில் முகுந்தா என்பவரின் சிலை உள்ளது. இந்த முகுந்தனின் கதை என்ன வென்றால் அவர் முன் ஜன்மத்தில் ஒரு இந்து சந்யாசி. ஒரு நாள் அவர் பசும்பால் குடிக்கையில் பசுவின் ஒரு முடி (ரோமம்) அவர் வயிற்றுக்குள் சென்றுவிட்டது; பாலை வடிகட்டாமல் குடித்ததால் நேரிட்ட தவறு இது. ஆகவே பிராயச்சித்தமாக ஆக்ரா கோட்டையினை ஒட்டி ஓடும் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். எவ்வளவோ பெயர்கள் தடுத்தும் தனது தவறுக்கு தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக்கொண்டார்.
இவர் எவ்வளவுதான் தண்டனை கொடுத்துக் கொண்டாலும், யமனின் கணக்குப்படி, அது போதவில்லை. ஆனாலும் இவர் தவம் செய்த நல்ல சந்யாசி. ஆகவே இவரை அடுத்த ஜன்மத்தில் மொகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியாக– அக்பர் சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.
அக்பரிடம் வந்த இந்துப் பேய்!
காலரா, அம்மை முதலிய நோய்கள் தெய்வக் குற்றங்களால்தான் வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே நோய் வரும் பருவத்தில், அதைத் தடுக்க பிரார்த்தனை, விழாக்கள் ஆகியன செய்வர். ஆனால், சாதாரண மனிதனை கும்பிடும் வழக்கம் அபூர்வமே; அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது.
பண்டல்கண்ட் பகுதியில் ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் வீர சிம்ம தேவன். அவருக்கு இரண்டு புதல்வர்கள்; அவர்களுடைய பெயர்கள் ஹரதர், ஜாஜர். அகபரின் மகன் ஜஹாங்கீர், ஹரகரரைக் கொண்டு அபுல் பாசல் என்ற பெரிய இலக்கிய கர்த்தாவைக் கொலை செய்யச் செய்தார். அபுல் பாசல் அக்பரின் அரசவையை அலங்கரித்த எழுத்தாளர். அயினி அக்பரி என்ற பெயரில் அக்பரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்.
காலம் உருண்டோடியது; வீர சிம்மன் இறந்தான்; உடனே இரு புதல்வரில் ஒருவரான ஜாஜர் பதவிக்கு வந்தான். தனது சகோதரன் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தான். உடனே தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி ஹரதருக்கும் அவனது தோழர்களுக்கும் ஒரு விருந்து வைத்து அதில் விஷத்தைக் கலக்கச் செய்து கொன்று விட்டான். இது நடந்தது கி.பி.1627ல்.
இதற்குச் சில காலத்துக்குப் பின்னர் ஜாஜரின் சகோதரி, இளவரசி கம்சவதிக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவரது தாய் எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தாள்;
“அட! செத்துப் போன சகோதரனுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க மறந்துவிடாதே”– என்று கிண்டல் தொனியில் சொன்னான் ஜாஜர்.
ஆனால் கம்சவதி உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹரதரின் சமாதிக்குப் போய் புலம்பினாள்
திடீரென்று கல்லறைக்குள்ளிருந்து ஒரு கை நீட்டி அந்தத் திருமணப் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு வருவதாக உறுதியும் கூறியது.
திருமண நாளில் ஹரதர் (பேய்) வந்த அடையாளங்களும் தெரிந்தன. தக்க மரியாதைகளுடன் ஹரதர் வரவேற்கப்பாட்டார். அன்று இரவு அந்தப் பேய் அக்பரின் படுக்கை அறைக்குச் சென்று “எனக்கு ஊர் தோறும் சின்னம் ஏற்படுத்து. உனது நாட்டில் இயற்கை சேதம் ஏதும் வராமல் காப்பேன்” என்று ((பேய்)) உறுதி கூறியது. அதன்படி அக்பர் சாம்ராஜ்யத்தில் பல இடங்களிலும் ஹரதர் ( பேய்க்கு) நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்டன. இன்றும் கிராம மக்கள் பலரும் அந்த சின்னங்களை வழிபட்டு வருகின்றனர்.
இந்தக் கதையில் கொஞ்சம் உதைப்பது கால வழுவமைதி ஆகும். அதாவது ஹரதர் இறந்தது 1627 ஆம் ஆண்டில். ஆனால் அக்பரோ அவருக்கு முன்னதாக 1605 ஆண்டில் இறந்தார். ஆகவே பேய் வந்தது அக்பரின் படுக்கை அறையாக இருக்க முடியாது. ஒரு வேளை ஜஹாங்கீரின் படுக்கை அறையாக இருக்கலாம்.
சூர்ய நமஸ்காரப் பிரியன்!
அக்பரின் மனைவியரில் பலர் இந்துக்கள்; அவருக்கு சர்வ சமய ஒற்றுமையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அவருக்கு சூரிய நமஸ்காரத்தில் ஆர்வம் ஏற்படவே சூரியனின் 1001 பெயர்களை எழுதி தினமும் படித்து வந்தார் (சூர்ய சஹஸ்ரநாமம்)
காலை, நன்பகல், மாலை நள்ளிரவு ஆகியவற்றில் சூரிய தேவனை வழிபட்டார். மக்களும் கும்பிடுவதற்கு வசதியாக 4 காலங்களில் பாண்டு வாத்ய இசையை முழங்கச் செய்தார். அவர் எப்படி தலையில் குட்டிக் கொண்டார், காதைப் பிடித்துக் கொண்டார் என்ற விவரங்களையும் சேர்த்து அபுல்பாசல், தனது அயினி அக்பரி புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்பர் 1605ஆம் ஆண்டில் இறந்தார்.
-சுபம்–