Written by S NAGARAJAN
Date: 4 August 2017
Time uploaded in London:- 5-59 am
Post No.4126
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
யோகிகளின் ஆற்றல்
மறைந்திருக்கும் ஆற்றல் – முதல் பகுதி கட்டுரை எண் 4008 17-6-17இல் வெளியானது
மறைந்திருக்கும் ஆற்றல் – இரண்டாவது பகுதி கட்டுரை எண் 4079 14-7-17இல் வெளியானது
இந்த இரு கட்டுரைகளையும் படித்த பின்னர் இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரையை இப்போது படிக்கலாம்.
மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 3
ச.நாகராஜன்
அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ்” (The Invisible Influence): Alexander Cannon ) என்னும் புத்தகம் பல சுவையான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. 168 பக்கங்கள் அடங்கியது இது.
கடைசியாக இன்னும் ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
சீனாவில் தான் இது வரை சென்றிராத பகுதிகளில் கானான் பயணம் மேற்கொண்ட போது பிச்சைக்காரன் போலத் தோற்றமளித்த பலரிடமிருந்து அவர் மேல் உலகத்திற்குத் தேவையான ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டாராம். (பக்கம் 34)
அவரது லக்கேஜ் மொத்தம் 35 பெரிய பெட்டிகள் அடங்கியது.
ஒரு முறை அவர் ஒரு நதியின் வழியே பயணப்பட்டார். ஏழு நாட்கள் அந்தப் பயணம் தொடர்ந்தது. அவரது 34 பெட்டிகள் மட்டும் அவருடன் வந்தன. நம்பர் 9 என்ற பெட்டியை மட்டும் காணோம்.பெட்டியின் மேல் நம்பர்கள் வெள்ளை வர்ணத்தில் பூசப்பட்டிருக்கும். அந்தப் பெட்டி இப்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் கலையில் வல்லவரான ஒரு மகானை அணுகினார் கானான்.
பழைய கோட்டை ஒன்றில் காலியாக இருந்த ஒரு அறையில் அந்தப் பெட்டி இருப்பது தெரிய வந்தது. ஒரு வாரத்திற்கு முன்னர் தான் அந்தக் கோட்டையை விட்டு வெளியே வந்தார் கானான்.
அடுத்து அதை எப்படிப் பெறுவது?அந்தக் காலத்தில் தந்தி கிடையாது. தபால் என்றால் அங்கு போய்ச் சேர பத்து நாட்கள், பதில் வர இன்னும் ஒரு பத்து நாட்கள் ஆகும். தனி ஒரு நபரை அனுப்பலாம் என்றால் 16 நாட்களுக்குக் குறைந்து ஒருவர் அங்கு போய்த் திரும்ப முடியாது. ஒரே ஒரு விஷயத்தால் மட்டும் தான் பெட்டியைப் பெற முடியும். டெலிபதியை உபயோகிப்பது தான் அது!
ஆனால் சீன மொழி கானானுக்குத் தெரியாது என்பதால் அந்த வேலையைத் தனக்குத் தெரிந்த மகானிடம் அவர் ஒப்படைத்தார்.
பத்து நிமிடத்தில் அந்த மகான் ஆழ்ந்த சமாதி நிலைக்குச் சென்றார்.அவரது உடல் குளிர்ந்து போனது. அவர் மூச்சு விடுவதும் நின்றது. அவரது இதயத் துடிப்பு ஸ்டெதாஸ்கோப் வைத்துக் கேட்டாலும் கூடக் கேட்க முடியாத படி ஆனது.அவரது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடியது. இதே நிலையில் சுமார் மூன்று மணி நேரம் அவர் இருந்தார்.
பின்னர் சுய நிலைக்குத் திரும்பினார். அவர் உடலை வளைத்தார். ஏதோ முணுமுணுத்தார்.
அவர் சக்தியெல்லாம் இழந்து களைத்துப் போயிருந்தார். அவருக்கு பிராந்தியும் பாலும் கொடுத்து அவரது களைப்பைப் போக்க கானான் உதவினார்.
முழு சுய உணர்வுக்குத் திரும்பிய மகான் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்று கூறினார். இன்னும் பத்து நிமிடங்களில் வராமல் தங்கி விட்ட ஒன்பதாம் நம்பர் பெட்டி கப்பலில் ஏற்றப்பட்டு விடும் என்று உறுதி படக் கூறினார். இன்னும் எட்டு நாட்களுக்குள் அது வந்து விடும் என்றார் அவர். அதே போல எட்டே நாட்களில் அந்தப் பெட்டி வந்து சேர்ந்தது.
அந்தப் பெட்டியைக் கொண்டு வந்தவரிடம் கானான், அந்தப் பெட்டி பழைய கோட்டையில் காலியான ஒரு அறையில் இருந்ததை அவர் எப்படி அறிந்தார் என்றும் தனக்கு அந்தப் பெட்டி வேண்டும் என்பதை அவர் எப்படி அறிந்தார் என்றும் கேட்டார்.
அந்தக் காலத்தில் அந்தி நேரம் ஆன பின்னர் யாராவது ஒருவர் வீட்டிற்கு வந்தால் யார் அது என்று சத்தம் போட்டுக் கேட்பர். வந்தவர் தனது பெயரையும் அடையாளத்தையும் சொன்ன பின்னரே கதவு திறக்கப்படும். பெரும்பாலும் கதவைத் திறக்காமலேயே செய்திகளைக் கேட்டுக் கொண்டு வந்தவரைத் திருப்பி அனுப்பி விடுவது தான் சாதாரணமாக நிலவி வந்த பழக்கம்.
இந்த சமயம் போலீஸ் கமிஷனரின் கதவு தட்டப்பட்டது. எப்போது கானானின் நண்பராக அமைந்த மகான் சமாதி நிலைக்குப் போனாரோ அதே சமயம் இது நிகழ்ந்தது. கமிஷனர் கானானின் நண்பரான மகானின் குரலை அவர் வெளியிலிருந்து எப்படிப் பேசுவாரோ அப்படித் தெளிவாகக் கேட்டார்.
கமிஷனருக்கு எந்த வித சந்தேகமும் எழவில்லை. கானானின் நண்பராக இருந்த மகான் குரல் அவருக்கு நன்கு பரிச்சயமான குரல். அதன்படியே அவர் நடந்து கொண்டார். ஒன்பதாம் நம்பர் பெட்டி உடனே அனுப்பப்பட்டது.
மறு நாள் கமிஷனர் அந்த மகானைத் தேடிய போது அவர் அந்த ஊரில் இல்லை. கமிஷனர் கானானுக்கு கடிதம் எழுதி மகான் அங்கு வரவே இல்லை என்பதை அறிந்து அதிசயப்பட்டார்.
இப்படிப் பட்ட பல சம்பங்கள் கீழை நாடுகளில சகஜம் என்கிறார் கானான்.
சிப்பாய் கலகம் நடந்த நாட்களில் பிரிட்டிஷ் படையினரின் நடமாட்டம் முழுவதும் டெலிபதி மூலமாகவே இடத்திற்கு இடம் அனுப்பப்பட்டதாம். ஆங்கிலேயர் எப்படி தமது படையினரின் நடமாட்டங்களை அனைவரும் அறிகின்றனர் என்று திகைத்துப் போனார்களாம்.
வாம சார மற்றும் தக்ஷிணாசார மார்க்கம் மூலமாக மறைந்திருக்கும் ஆற்றல் ஹிந்து வீரர்களை வழி நடத்தியது.
கானானின் புத்தகம் இது போன்ற பல சுவையான தகவல்களைத் தருகிறது.
ஹிந்து யோகிகளின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர் படிக்க வேண்டிய நூல் இது.
நூலை முழுதுமாகப் படிக்க விரும்பும் அன்பர்கள் இணைய தளத்திலிருந்து இதை இலவசமாகத் தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்து கொள்ள வேண்டிய தொடுப்பு இது :
https://archive.org/details/invisibleinfluen015654mbp
*** இந்தக் குறுந் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது