Written by London Swaminathan
Date: 7 NOVEMBER 2017
Time uploaded in London- 6-49 am
Post No. 4374
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?
இதெல்லாம் கூடத் தடவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.
இதனால்தான் அவ்வையாரும்
உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)
வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.
வள்ளுவனும் சொன்னான்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் 439)
பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.
மனு நீதி நவில்வது
மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-
“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)
யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16
கூரம் பாயினும் வீரியம் பேசேல்
–கொன்றை வேந்தன்
(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)
குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்
பொருள்:
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்; இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்; அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!
அவ்வையார் கதை
அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்; பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்; விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட பழம் என்று அறிவுறுத்தினான்.
இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:–
பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
பொருள்:
அலர்கதிர் ஞாயிற்றை — பரந்த கிரணங்களை உடைய சூரியனையும்
கைக்குடையும் காக்கும்— கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும்.
பலகற்றோம் யாமென்று- ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது.
பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்– பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும் அச்சாணி போன்ற ஒரு சொல்
சில கற்றார் கண்ணும் உளவாம்- சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.
TAGS:–அவ்வையார், மனுநீதி, தற்புகழ்ச்சி, உடையது, வியவற்க
—சுபம், சுபம்—