Brahma from Cambodia
பிரம்மா ஏன் தலையை இழந்தார்? தக்ஷன் ஏன் தலையை இழந்தான்? (Post No.4428)
Written by London Swaminathan
Date: 24 NOVEMBER 2017
Time uploaded in London- 10-30 am
Post No. 4428
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
தலைகளை இழந்த இந்துக் கடவுள்கள்-1 என்ற முதல் பகுதியில் விஷ்ணு தலையை இழந்த விநோதக் கதையையும் விநாயகருக்கு யானைத் தலை வந்ததன் கார ணத்தையும் கொடுத்தேன். இந்த இரண்டாவது பகுதியில் பிரம்மா ஏன் தலையை இழந்தார்? தக்ஷனுக்கு ஏன் ஆட்டுத் தலை கிடைத்தது என்பதைக் காண்போம். பிருகுவின் தலை போனது எப்படி? பிருகுவின் மனைவி தலையை விஷ்ணு துண்டித்தது ஏன் ? என்பதையும் அறிவோம்.
பிருகு முனிவர் பற்றிய சுவையான கதை:–
தக்ஷ யக்ஞத்தில் தலை இழந்தவர்களில் இவரும் ஒருவர். தேவீ பாகவதத்தில் இவர் கதை உள்ளது. இவர் பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர். மனைவியின் பெயர் புலோமசை. இவருடைய புதல்வன் கவி. பேரன் சுக்ரன்.
பிருகு முனிவர் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றபொழுது, புலோமன் என்ற அரக்கன், பிருகுவின் மனைவியை — நிறைமாத கர்ப்பிணியை — தூக்கிச் சென்றான். அம்மா கதறிதையக் கேட்டு கர்ப்பத்தில் இருந்த சியவகன் வெளியே வந்து அரக்கனை எரித்தான்.
அரசர்களுக்குப் புத்திரப் பேறு இல்லாவிடில் ரிஷிகளை வேண்டுவர். அதன்படி ஒரு அரசனின் ஒரு புதல்வியை மணந்து அரச மரத்தைச் சுற்றச் செய்து பிள்ளை வரம் பெறச் செய்தார். அவளுடைய தங்கைக்கும் புத்திரப் பேறு இல்லாததால் பலாச மரத்தைச் சுற்றச் செய்து பிள்ளைவரம் கிடைக்கச் செய்தார்.
பிருகு முனிவர் ‘பெரிய கடவுளை’ அறியச் சென்ற காலையில் பிரம்மா, சிவன் ஆகியோர் கோபிக்க அவர்களுக்குச் சாபம் தந்தார். விஷ்ணுவிடம் சென்று அவரையும் உதைக்க எத்தனிக்கையில் , அவர் பிருகுவின் காலைப் பிடித்து உபசரிக்கவே அவரே உயர்ந்த கடவுள் என்று முடிவு செய்தார்.
தக்ஷ யக்ஞத்தில் வீரபத்ரரால் தலை, தாடி, மீசை ஆகியவற்றை இழந்தார். இவருடைய மனைவி அசுரர்க்கு அடைக்கலம் கொடுத்ததால் அவ ளை விஷ்ணு கொன்றார். அதனால் கோபித்த பிருகு இனி, விஷ்ணு பூமியில் பிறக்கக்கடவது என்று சபித்தார். விஷ்ணு, இவரது மனைவியின் தலையை வெட்டியதாகவும், அதை இவர் ஒட்டிவைத்து மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் புராணங்கள் சொல்லும்.
சில தத்துவங்களை விளக்க வந்த கதைகள் பிற்காலத்தில் தத்துவங்கள் இல்லாமல் கதைகளாக மட்டும் தனித்து நின்றன. இதனால் அவை எல்லாம் பொரிவிளங்காய் உருண்டை ஆகிவிட்டன! பொரி விளங்காய் உருண்டை = பொருள் விளங்காத புதிர்கள்.
Brahma Temple in Pushkar, Rajasthan
பிரம்மா தலை
பிரம்மா தலையை இழந்ததற்கும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் கதை.
பிரம்மா ஐந்து தலைகளுடன் அவதரித்தார். அவர் அவதூறாகப் பேசியதால் சிவ பெருமானுக்குக் கோபம் வந்து ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார்.
இன்னும் ஒரு கதை– அவர் சத ரூபா என்ற பெண்ணைப் படைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அந்தத் தலை கிள்ளி எறியப்பட்டது என்பர். மற்றொரு கதை:- சிவனுக்கும் ஐந்து தலை; பிரம்மாவுக்கும் ஐந்து தலை; இதனால் குழப்பம் அடைந்த பார்வதி பிரம்மாதான் சிவன் என்று நினைத்து அருகே சென்றதாகவும் உடனே சிவன் கோபம் அடைந்து ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்ததாகவும் சிவன் கையிலுள்ள கபாலம் பிரம்மாவின் கபாலம் (தலை) என்றும் கூறுவர்.
Stamp issued to honour of Brahma by France
தக்ஷன் தலை
தக்ஷன் என்பவன் பிரம்மாவின் புதல்வன் அவன் தன் மகள் சதியை சிவ பெருமானுக்கு மணம் முடித்தார். ஒரு பெரிய யாகம் நடந்தபோது சதி வேண்டியும் சிவ பெருமானை யாகத்துக்கு அழைக்கவில்ல. இதனால் கோபத்துடன் யாக சாலைக்கு வந்த சிவபெருமான் யாகத்தைச் சீர்குலைத்தார். பலருக்கு கை கால்கள் உடைந்தன. தக்ஷன் தலையையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் தேவர்கள் வேண்டவே அவனுக்கு ஆட்டுதலை ஒன்றை எடுத்துப் பொருத்தினார்கள்.
.
–SUBHAM–