Date: 12 DECEMBER 2017
Time uploaded in London- 6-29 am
Compiled BY S NAGARAJAN
Post No. 4483
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 2
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாடல்கள் 7 முதல் 12
பார் புகழும் பாரதியே!
இரகுபதி சாமிநாதன்
பாடல் எண்: 7
பார் புகழும் பாரதியே! பைந்தமிழின் சாரதியே!
ஆர்கடல்சூழ் அவனிக்கே அமரகவி அளித்தவரே!
நேர்மைக்குத் தலைதாழ்த்தி நீதியதன் தாள்பணிந்து
பேர்பெற்ற பெருங்கவியே! பல்லாண்டு பகர்கின்றோம்.
கட்டுண்டு கிடந்தவரைக் கண்விழிக்கச் செய்தவரே!
மட்டுண்டு மகிழ்வதற்கே ஒப்பாகும் விடுதலையைத்
தட்டின்றிப் பெறுவதற்குத் தமிழ்க்கவிகள் செய்தவரே!
இட்டமுடன் வாழ்த்துரைகள் இனிதுறவே இயம்புகிறோம்.
வெள்ளையுளம் கொண்டவரே! வேற்றவரை யெதிர்த்தவரே!
கள்ளமிலாக் குழந்தைகட்கும் கவியூட்டி உவந்தவரே!
புள்ளினத்தைத் தம்மினமாய்ப் புகன்றீரே! புகழ்ந்தீரே!
கொள்ளையின்பப் பாவருளும் கோமகனே! வாழ்த்துகிறோம்.
‘தமிழ்க்குயில்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது.
அதில் வந்துள்ள கவிஞரைப் பற்றிய குறிப்பு: எம்.ஏ. பட்டம் பெற்றவர். டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிபவர். கலப்பு மணத்தின் மூலம் காதலொருவரைக் கணவராகக் கொண்டவர். நல்ல தமிழில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுபவர்.
தமிழ்க் குயில்
இரா. இளங்குமரன்
பாடல்கள் 8,9,10,11,12
பூமணக்கும் சோலையெனப் புனலூற்றின் பெருக்கென்னப் புலவர் பாடும்
தேமணக்கும் தென்றலெனத் திகழ்நிலவின் ஒளியென்ன விளங்கி இன்பப்
பாமணத்தால் நாமணக்கச் செவிமணக்கப் பயின்றவொரு தமிழில் தோய்ந்து
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்,
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்றுரைத்த புலமைச் செல்வன்
தூமணியாய் ஓங்குமுயர் மொழித்தொண்டன் துடிதுடிக்கும் உணர்ச்சியாளன்
ஏமமிகு மொழியன்பன் இயற்புலவன் பாரதியே ஐயமின்றே!
தண்டமிழே தன்னுடலாய்த் தன்னுணர்வாய்த் தனி நின்றோன்; தகவு மிக்க
தண்டமிழே தனிப்பொருளாய்த் தவப்பேறாய்த் தளிர்ப்பெய்தி நின்றோன்; வாழுந்
தண்டமிழாம் மழைபொழிந்த மாமேகம்; தமிழருந்து வானம் பாடி
தண்டமிழே மூச்சான பாரதியாம் தமிழ்க்குயிலே; கவிதை வேந்தே!
ஆங்கிலத்தில் மேம்பட்டோன்; ஆரியத்தின் நிலைகண்டோன்; வனப்பு வெள்ளம்
ஓங்கியஓர் பிரெஞ்சுமொழி தெலுங்குமொழி யோடுமிந்தி யாக இன்ன
பாங்குணர்ந்த மொழிகள்பல பயின்றிருந்தும் பைந்தமிழின் வனப்பில் ஆழ்ந்த
தேங்குமொழிப் பற்றாளன்; தெய்வநிலைக் கவிமன்னன்; தேன்வண் டானோன்
சொல்லணியும் பொருளணியும் சுவையில்லாக் கற்பனையும் சொல்லிச் சொல்லி
நல்லபொழு தெல்லாமும் பாழ்செய்து நயத்தக்க பயனொன் றின்றிச்
செல்லுவதாம் வழியதனை ஒழிகென்று செழுந்தமிழி வளர்த்த செம்மல்
சொல்லரிய உணர்வாளன் சோர்வில்லா வினையாளன்; வாழி நன்றே!
*
கவிஞர் இளங்குமரைனைப் பற்றி தமிழ்க்குயில் நூலில் உள்ள குறிப்பு:
இரா.இளங்குமரன்: இத்தமிழ்ப் ‘புலவர்’ திருநகர் மு.மு. உயர்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர். பெரும் புலவர். ‘குண்டலகேசி’யெனும் பெருங்காப்பிய நூலைச் சிறப்புற எழுதியுள்ளவர். சிறுவர்க்கான நூல்கள் பல எழுதியுள்ளவர்.
*** தொடரும்
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
*****