Date: 18 DECEMBER 2017
Time uploaded in London- 5-45 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4511
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 5
முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17
இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17
மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17
நான்காம் கட்டுரை எண் 4472 – வெளியான தேதி : 9-12-17
ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் பயன் என்ன?
ச.நாகராஜன்
அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி ஒரு ஜீவனுக்கு மூன்று தேகங்களினால் என்ன பயன் என்பதைப் பார்ப்போம். அத்துடன் இலக்ஷணா விருத்தி பற்றியும் தெரிந்து கொள்வோம்.
அத்வைத சாரத்தில் வரும் பதங்களை மாற்றாமல் அப்படியே கொடுத்துள்ளோம்.
இதைப் பற்றித் தீமாக அறிய விரும்புவோர் ப்ரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை, ஞான வாசிட்டம், கைவல்யம், விவேக சூடாமணி, சீதாராமாஞ்சனேய சம்வாதம், ராமஸ்தவ ராஜ்யம், வேதாந்த சாரசங்ரஹம், நிஷ்டானுபூதி ஆகிய நூல்களைப் படித்திருக்க வேண்டும் அல்லது கூடவே அவற்றையும் பயில வேண்டும்.
இனி தொடர்வோம்.
*
பரமாத்மாவுக்கு மூன்று சரீர உபாதியினால் ஈஸ்வரத்துவம் சித்தியான விவரத்தைச் சொன்னீர்கள். இனி, பரமாத்மாவுக்கு வியஷ்டியாகிற மூன்று சரீரத்தினால் ஜீவத்துவம் சித்தியாவது எப்படி?
வியஷ்டி காரண சரீரத்துடன் கலந்திருக்கும் பரமாத்மா, பிராக்ஞன் – பராமார்த்திகன் – வித்தியவசின்னர் – என்றும் ,
வியஷ்டி சூக்ஷ்ம சரீரத்தோடு சேர்ந்திருக்கும் பரமாத்மா, தைஜஸன் –
ஸ்வப்ன கற்பிதன் – பிராதிபாஸிகன் என்றும்,
வியஷ்டி ஸ்தூல சரீரத்தோடு சேர்ந்திருக்கும் பரமாத்மா, விசுவன் –
வியவகாரிகன் – சிதாபாசன் என்றும் சொல்லப்படும்.
இந்த ஜீவனுக்கு இந்த மூன்று தேகங்களால் என்ன பிரயோஜனம்?
அந்தக்கரண பிரதிபிம்பன் ஜீவன்;
ஆகவே ஜீவனுக்கு சூக்ஷ்ம சரீரம் அவசியம்.
பிறகு கர்மம் செய்ய ஸ்தூல சரீரம் அவசியம்.
இக்காரிய காரணங்களுக்கு காரண சரீரமும் அவசியம்.
இப்படி மூன்று சரீரமுடைய ஜீவனுக்கு அபிமானம் உண்டோ?
உண்டு. அபிமானம் இல்லாவிட்டால் கர்மம், கருத்திருத்துவம் ஆகியவை பொருந்தாது.
ஆத்மாவுக்கே அவித்தை, மாயா உபாதிகளினால் ஜீவேஸ்வரத்துவம் விளங்குவதற்கு ஏதாவது உதாரணம் உண்டா?
ஒரே அக்கினியானது பெரிய பந்தத்திலிருந்து கொண்டு விஸ்தாரமான இடங்களுக்கு வெளிச்சத்தைத் தருவதும்,
அதுவே அற்பமான ஒரு திரியிலிருந்து கொண்டு ஒரு வீட்டுக்கு மட்டும் வெளிச்சத்தைத் தருவதும் போல
ஆத்மாவுக்கு மாயோபாதியாகிய பெரிய காரணத்தினால் சர்வக்ஞத்துவமும்,
அவித்தையாகிய அற்ப காரியோபாதியினால் கிஞ்சிக்ஞத்துவமும் வந்தன.
இதனால், சர்வக்ஞாத்மா, கிஞ்சிக்ஞாத்மா என இரண்டு ஆத்மா இல்லை.
இதைப் பற்றி வேதாந்தங்கள் என்ன போதிக்கின்றன?
தத் பதத்திற்கும், த்வம் பதத்திற்கும் சம்பந்த திரயத்தினால் அகண்ட தத்துவத்தைப் போதிக்கிறது.
சம்பந்த திரயமா? அப்படி என்றால் என்ன?
அதாவது இது மூன்று வகைப்படும்.
இரண்டு வாக்கியங்களுக்கு ஸாமனாதி கரண்ணிய சம்பந்தம்
இரண்டு பதார்த்தங்களுக்கு விசேஷண விசேஷிய பாவ சம்பந்தம்,
இரண்டு பதங்களுடனாவது பதார்த்தங்களுடனாவது பிரதி ஏகாத்மாவுக்கு
லக்ஷிய லக்ஷண சம்பந்தம் என இப்படி மூன்று விதம் உண்டு.
இவைகளைச் சற்று திருஷ்டாந்தங்களுடன் விளக்கிச் சொல்லுங்களேன்.
‘அந்த’, ‘இந்த’ தேவதத்தன் என்றால், அந்த, இந்த ஆகிய பதங்களுக்கு தேவதத்தன்
பிண்டமே ஸமானாதி கரணம்.
அதாவது அந்த தேவதத்தன் தான் இவன் என்று சொன்னதாக ஆயிற்று.
இந்த தேவதத்தன் இருக்கும் தேசம், காலத்தை அனுசரித்து விசேஷன விசேஷிய பாவ சம்பந்தமாகிறது.
அன்றியும், அவன், இவன் என்ற பதங்களுக்காவது, அவைகளின் அர்த்தங்களுக்காவது அகண்டார்த்தமாகிய தேவதத்த பிண்ட மாத்திரத்தை எடுத்துக் கொள்வதால் விரோதாம்ஸ்தத்தைத் தள்ளி – அதாவது விரோதமில்லாத தேவதத்தன் என்பது மாத்திரம் லக்ஷியத்தினாலே , லக்ஷிய லக்ஷணா பாவ
சம்பந்தமிருக்கிறது.
இந்த லக்ஷணம் எத்தனை வகைப்படும்?
பாக தியாக லக்ஷ்ணம் என்றும் ஜகத் ஜக லக்ஷணமென்றும் இரு வகைப்படும்.
அதெப்படி?
சாஸ்திரங்களில் வாக்கியத்தினுடைய அர்த்தத்தை கிரஹிக்கும் விஷயத்தில் முக்ய விருத்தி, குண விருத்தி , லக்ஷணா விருத்தி என மூவகை உண்டு.
இந்த முக்கிய விருத்தி, குண விருத்தி ஆகியவற்றை உதாரணங்களுடன் விளக்க முடியுமா?
இரத, கஜ, துரக, பதாதிகள் போவதைப் பார்த்து , இதோ ராஜா போகிறார் என்று சொல்கிறோம் அல்லவா, அது முக்கிய விருத்தி.
நீலோத்பலம் என்றால் நீல புஷ்பம் என்பது குணவிருத்தி ஆகும்.
ஆஹா, இனி லக்ஷணா விருத்தி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை. தொடர்ந்து கேட்கலாமா?
கேளுங்கள், சொல்கிறேன்.
**** தொடரும்