Written by London Swaminathan
Date: 19 DECEMBER 2017
Time uploaded in London- 20-05
Post No. 4517
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பாரதியும் சாணக்கியனும் ஒரே கருத்துக்களை சொல்லுவதைப் படிக்கும் போது இனிக்கிறது. இந்திய சிந்தனை 2300 ஆண்டுகளுக்கு முன்ன்ரும் ஒன்றே; பாரதி காலத்திலும் ஒன்றே.
சென்றது மீளாது
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா — பாரதி பாடல்
சாணக்கியன் சொல்லுகிறான்:-
கடந்தகாலத்தை எண்ணி வருந்தாதே;
எதிர்காலத்தை எண்ணி கவலைப் படாதே
புத்திசாலிகள் நிகழ்காலத்துக்கு ஏற்ப நடப்பார்கள்
கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத்
வர்த்தமானேன காலேன ப்ரவர்தந்தே விசக்ஷணாஹா
–சாணக்ய நீதி 13-2
சீன தத்துவ ஞானியான லாவோட்ஸி கிட்டத்தட்ட புத்தர், மஹாவீரர் ஆகிய ஞானிகளின் சம காலத்திய ஞானி. அவர் மிகவும் அழகாகச் சொல்கிறார்:
நீ மனத்தொய்வுடன் காணப்பட்டால் நீ கடந்த காலத்தில் வாழ்கிறாய்;
நீ கவலையுடன் காணப்பட்டால் நீ எதிர்காலத்தில் வாழ்கிறாய் என்று அர்த்தம்;
நீ அமைதியுடன் காணப்பட்டால் நீ நிகழ் காலத்தில் வாழ்கிறாய் என்று தெரிகிறது.
ஆக அறிஞர்கள் சொல்லுவது இதுதான்:
கடந்த காலத்தில் நிகழ்ந்தனவற்றை எண்ணி எண்ணி வருந்தாதே; மனக் கலக்கம் அடையாதே.
எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று கவலை தோய்ந்தமுகத்துடன் இராதே.
கிடைத்த பொழுதை, கண் முன்னால் நிற்கும் நிகழ் காலத்தை, எப்படி நன்கு பயன்படுத்துவது, எப்படி இன்பமாகப் பயன்படுத்த முடியும் என்று சிந்திக்கவும்; அப்படி இருந்தால் மகிழ்ச்சி பொங்கும்; கவலை மறையும்; மனத் தொய்வு நீங்கும்.
பாரதி, சாணக்கியன், சீன தத்துவ ஞானி லாவோட்ஸீ ஆகிய மூவரும் சொன்ன பிறகும் நமக்கு என்ன தயக்கம்?
நிகழ் காலத்தில் வாழ்வோம்!
–சுபம்-