Date: 23 DECEMBER 2017
Time uploaded in London- 5-25 am
Compiled by S NAGARAJAN
Post No. 4532
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 13
பாடல்கள் 88 முதல் 92
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
பாடல்கள் 88 முதல் 92
பாரதி நினைவு
சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்
சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;
‘இந்தியன்நான்’ என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;
எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரிய ‘தமிழன்’எனும் உவகை ஊறும் ;
உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.
அச்சமெனும் பெரும்பேயை அடித்துப் போக்கும் ;
அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும் ;
துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச்
சுதந்தரத்தை விட்டுவிடாத துணிவு தோன்றும் ;
கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம்
கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும் ;
மெச்சிடுநம் தாய்நாட்டின் நாக ரீகம்
மேன்மையெல்லாம் பாரதியார் பாட்டால் மேவும்.
தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத்
தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும்
சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத்
தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணித்
தெருத்தெருவாய்த் தேசீய பஜனை பாடிச்
சென்னையிலும் உணர்ச்சிவரச் செய்த தீரன்
உருத்தெரியா திப்போதும் இங்கே நம்மை
ஊக்குவதும் பாரதியின் உரைக ளேயாம்.
பெண்ணுலகம் புதுமைபெறப் பழமை பேசிப்
பெருமையவர் உரிமைகளைப் பெரிதும் போற்றி
மண்ணிலவர் இழிவுபெறச் செய்து வைத்தோர்
மடமைமிகும் கொடுமைகளை மறுத்துப் பாடிக்
கண்ணியத்தைப் பிற்காலக் கவிஞர் தம்முள்
காத்ததுநம் பாரதியின் கவியே யாகும் ;
எண்ணஎண்ணத் தமிழ்மொழிக்கோர் ஏற்ற மாகும் ;
பாரதியின் திருநாமம் என்றும் வாழ்க!
எங்கேயோ எட்டாத உலகம் தன்னில்
இருப்பரென நாம்படித்த தெய்வம் எல்லாம்
இங்கேயே எம்முடனே எவரும் காண
ஏழைமக்கள் குடிசையிலும் இருப்ப தாக்கும்
சிங்காரப் புதுக்கவிகள் பாடி பலம்முத்
தேவரெல்லாம் தமிழ்நாட்டின் திரியச் செய்தோன்
மங்காதாம் பாரதியின் நினைவைப் போற்றி
மறவாமல் தமிழ்நாட்டார் வாழ்த்த வேண்டும்.
நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****