Written by London Swaminathan
Date: 29 DECEMBER 2017
Time uploaded in London- 7-15 am
Post No. 4560
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
உலக மஹா அறிவாளி,
உலகின் முதல் முழு நீளப் பொருளாதார புத்தகம் எழுதிய மேதாவி, அவிழ்த்த குடுமியை லட்சியம் நிறைவேறும் வரை முடிய மாட்டேன் என்று என்று வீர சபதம் செய்த பார்ப்பான்,
மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கியும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன்
சாணக்கியன் ஆவான்.
அவன், பர்த்ருஹரி, திருவள்ளுவன் போன்றோருக்கெல்லாம் முன்னதாக எழுதிய சாணக்கிய நீதியில் ஒரு புதிர் போடுகிறான். பின்னர் அவனே 6 ஸ்லோகங்களில் புதிரையும் விடுவித்து விடுகிறான்.
வாழ்க்கையில் வெற்றி பெற இந்த 20 குணங்களையும் ஒருவன் பின்பற்றினால் போதும் என்றும் சொல்கிறார்..
ஸிம்ஹாத் ஏகம் பகாத் ஏகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்
வாயஸாத்பஞ்ச சிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்
–சாணக்ய நீதி , அத்தியாயம் 6, ஸ்லோகம் 14
சிங்கத்திடம் இருந்தும் கொக்கிடமிருந்தும் ஒவ்வொரு குணத்தைக் கற்றுக்கொள்க;
சேவலிடமிருந்து நான்கு, காகத்திடமிருந்து ஐந்து, நாயிடமிருந்து ஆறு, கழுதையிடமிருந்து மூன்று குணங்களைக் கற்றுக் கொள்க.
இப்படிச் சொல்லிவிட்டு, சாணக்கியன் நிறுத்தி இருந்தால் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம் செய்திருப்பர். நல்ல வேளையாக அவரே பின் வரும் ஸ்லோகங்களில் விளக்கமும் சொல்லிவிடுகிறார்.
வாழ்க்கையில் வெற்றி பெற 20
குணங்கள்- சாணக்கியன் பட்டியல்
ஆனால் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி குணங்களைக் கற்பிப்பதில் இவர்தான் முதல்வர் என்று நினைக்க வேண்டாம். பாகவத புராணத்தில் 24 இயற்கைப் பொருட்களை, பிராணிகள், பறவைகளை குரு என்று தத்தாத்ரேயர் சொன்னதை முன்னரே கொடுத்துள்ளேன்.
விவேக சூடாமணியில் 13 இயற்கைப் பொருட்களை ஆசிரியராகப் பாடி இருப்பதையும் கொடுத்துவிட்டேன்.
வில்லியம் வோர்ட்ஸ்வர்த் (William Wordsworth) என்ற ஆங்கிலக் கவிஞன், புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு இயற்கை அன்னையிடம் வாருங்கள்; எல்லா முனிவர்களையும் விட அதிகம் கற்றுக் கொடுப்பாள் என்று சொன்னதையும் எழுதிவிட்டேன்,
சாணக்யன் (370 BCE) சொல்லுவதைக் காண்போம்:-
ப்ரபூதம் கார்யமல்பம் வா யன்னரஹ கர்துமிச்சதி
ஸர்வாரம்பேண தத்கார்யம் சிம்ஹோதகம் ப்ரசக்ஷதே – 15
சிங்கத்திடம் கற்கும் முதல் பாடம்- சிறியதோ பெரியதோ, ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முழு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்ட வேண்டும் – ஸ்லோகம் 15
இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ
தேசகாலபலம்ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத் –16
கொக்கு போல காத்திருந்து பெற வேண்டும்–தக்க இடம், தகுந்த காலம், தன்னுடைய சக்தி ஆகையவற்றைக் கொக்கிடம் கற்க.
ப்ரத்யுத்தானம்ச யுத்தம் ஸம்விபகம் ச பந்துஷு
ஸ்வயமாக்ரம்ய புக்தம் ச சிக்ஷேசத்வாரி குக்குடாத் –17
சேவலிடம் நான்கு குணங்களைக் கற்கவும்: அதி காலையில் எழுந்திருத்தல், தாக்குதலைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருத்தல், கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்தல், போட்டிக்கிடையே தானே சேகரித்து உண்ணல்.
கூடம் ச மைதுனம் தார்ஷ்ட்யம் காலே காலே ச சம்க்ரஹம்
அப்ரமத்தம விஸ்வாசம் பஞ்ச சிக்ஷேச்ச வாயஸாத்– 18
கீழ்கண்ட ஐந்து குணங்களை காகத்திடம் கற்கவும்: ரஹசியமாக புணர்தல், துடுக்குத்தனம், காலாகாலத்தில் சேகரித்து வைத்தல், கவனமாக/ உஷாராக இருத்தல், மற்றவர்களை எளிதில் நம்பாது திருத்தல்
பஹ்வாசீ ஸ்வல்பஸந்துஷ்டஹஸுனிதோ லகுசேதனஹ
ஸ்வாமிபக்தஸ்ச சூரஸ்ச ஷடேதே ஸ்வானதோ குணாஹா-19
பொருள்
நல்ல அளவு உணவு அருந்தல், கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடைதல், நன்றாகத் தூங்கல் , சிறிய சப்தம் கேட்டாலும் விழித்தல், விசுவாசமாக இருத்தல், துணிச்சல் ஆகிய குணங்களை நாயிடம் இருந்து கற்க வேண்டும்
ஸுஸ்ராந்தோபி வஹேத் பாரம் சீதோஷ்ணம் ந ச பஸ்யதி
ச்ஸந்துஷ்டஸ்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத் – 20
மூன்று குணங்களைக் கழுதையிடம் கற்கவும்: என்ன களைப்பு இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்தல், குளிர், வெப்பம் பற்றிக் கவலைப்படாது இருத்தல், எப்போதும் திருப்தியுடன் காணப்படுதல்.
ய ஏதான் விம்சதி குணானாசரிஷ்யதி மானவஹ
கார்யா அவஸ்தாஸு ஸர்வாஸு அஜேயஹ ஸ பவிஷ்யதி –21
எல்லா விதமான பணிகளிலும் ஒருவன் இந்த 20 குணங்களையும் பின்பற்றினால், அவனை வேறு யாரும் வெல்ல முடியாது.
சாணக்கியன் இந்த ஒரு நீதி நூலில் மட்டுமே 330-க்கும் மேலான கவிதைகளைப் பொழிந்துள்ளான், வேறு பல நூல்களிலும், உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்திலும் ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகளை உதிர்த்துள்ளான்!
வாழ்க சாணக்கியன்!!! வளர்க அவர்தம் புகழ்!!!
–சுபம்-
Thila D
/ December 29, 2017Than you for valuable information.. i want ..அருணாசல மஹாத்மியம்..