கஞ்சி வரதப்பா கதை! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் கதை!! (Post No.4644)
Written by London Swaminathan
Date: 21 JANUARY 2018
Time uploaded in London 9-37 AM
Post No. 4644
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
2 பழமொழிக் கதைகள்
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)
காஞ்சீபுரம் பற்றி இரண்டு பழமொழிகள் உண்டு; அவைகளின் பின்னால் சிறு கதைகளும் உண்டு.
ஒரு ஏழை, வேலை தேடி அலைந்து திரிந்தான் ; வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. செங்கல்பட்டில் ஒரு வீட்டின் திண்ணையில் உடகார்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். அந்த வீட்டுக் கிழவி, எதேச்சையாக வெளியே வந்தாள். இவன் நிலையைக் கண்டு சோறு போட்டாள். இவன் தன் கதைகளை எல்லாம் சொன்னவுடன் அந்தப் பாட்டி சொன்னாள்,
“அட அசடே! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாமே; இதைக் கேட்டதே இல்லையா?” என்றாள்.
அப்படியா பாட்டி? இதோ உடனே புறப்படுகிறேன் என்று அவள், அன்னம் இட்டதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, வழி நடந்தான்.
வழியில் ஆங்காங்கே தங்கி அன்ன சத்திரங்களில் கிடைத்ததை உண்டு சின்னாட்களில் காஞ்சீபுரத்தை அடைந்தான். ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். கால்களை ஆட்டத் துவங்கினான். யாரும் வேலை தருவதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவனை வேடிக்கைப் பார்த்துவிட்டு, இந்தப் பைத்தியம் எதற்காக இப்படிக் காலாட்டுகிறது என்று முனுமுனுத்துவிட்டுப் போயினர்.
இவன் நீண்ட நேரம் ஆகியும் ஒரு பலனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மிகவும் வேகமாகக் காலாட்டினான். எதேச்சையாக அந்த வீட்டுக் கிழவி வெளியே வந்தாள். இவன் காலாட்டுவதைப் பார்த்துவிட்டு,
“அப்பனே! ஏன் இப்படி நீண்ட நேரமாக காலாட்டி வருகிறாய்? என்ன காரணம்? காலில் நோவா?வலியா?” என்றனள்.
“பாட்டி! உன்னைப் போலவே ஒரு பாட்டியைக் கண்டேன். எனக்கு வேலை கிடைக்கவிலை என்றேன். அவள் தான் சொன்னாள், ‘காஞ்சிக்குப் போனால், காலாட்டிப் பிழைக்கலாம்” என்று.
அவளுக்கு அதைக் கேட்டு சிரிப்பே வந்துவிட்டது.
“அட மக்கு! காஞ்சீ புரம் பட்டு சேலைகளுக்கும் மற்ற நெசவு சேலைகளுக்கும் பிரசித்தியான இடம். செசவுத் தொழில் செய்வோர் ஒவ்வொரு வீட்டிலும் தறி இருக்கும். அதில் ஆடவர், பெண்டீர் ஆகிய அனைவரும் தறியில் உட்கார்ந்து வேலை செய்வர். தறி நெசவில் காலாட்டி இயந்திரங்களை இயக்குவர். இப்படி புடவை நெய்வதையே ‘காலாட்டிப் பிழைக்கலாம்’ என்று சொல்லுவர்” என்றாள்.
உடனே அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு நெசவு வேலையில் அமர்ந்தனன்.
கஞ்சி வரதப்பா கதை!
ஒரு கிராமத்தில் ஒரு பரம ஏழை! சாப்பாட்டிற்கு லாட்டரி அடிப்பவன்; உணவுக்கு வழி தெரியாமல் திகைத்தான்.வேலையோ இல்லை. ஊர்ப் பெரியவர்கள் சொன்னார்கள்; “அப்பனே, இந்தச் சிற்றூரில் உனக்கோ வேலை கிடைக்கவில்லை. ஏன் காஞ்சீபுரம் போன்ற ஒரு பெரிய நகருக்குப் போய் வேலை தேடக்கூடாது? என்றனர். அவனுக்கும் அது நல்ல யோஜனையாகத் தோன்றியது. காலால் நடந்தே காஞ்சி சென்றான்.
அவனுக்குக் காஞ்சி பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை. அங்குள்ள காமாட்சி கோவிலும் தெரியாது; வரதராஜப் பெருமாள் கோவிலும் தெரியாது. காஞ்சி என்ற ஊர்ப் பெயர் கச்சி என்றும், சுருக்கமாக கஞ்சி என்றும் வழங்குவதும் தெரியாது.
ஒரு வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்து அடுத்தது என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். பசியோ வயிற்றைக் கிள்ளியது. “அடக் கடவுளே, என்னை காப்பாற்று” என்று உரத்த குரலில் புலம்பினான்.
அப்போது ஒரு பெரியவருக்கும் ஊர்க் கடவுள் நினைவு வரவே ‘கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!’ என்று கூவி கன்னத்தில் போட்டுக் கொண்டார். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத்தைப் பார்த்து வணங்கினார். அவரைப் பார்க்காமல் குரலை மட்டும் கேட்ட நமது பரம ஏழைக்கு ஒரே சந்தோஷம்!.
“அடக் கடவுளே என்னைக் காப்பத்து- என்று நான் முழங்கியதுதான் தாமதம்! யாரோ ஒருவர் கஞ்சி வரதப்பா என்கிறாரே” என்று.
அவர் அவ்வாறு சொன்னது காஞ்சீபுர வரத ராஜப் பெருமாளை நினைத்துச் சொன்ன பிரார்த்தனை. ஆனால் நமது கதா நாயகன் பரம ஏழைக்கோ நிஜமாகவே கடவுள் சொன்ன பதில் என்று நினைத்து கஞ்சிக்காகக் காத்திருந்தான். எவரும் கஞ்சி கொண்டு வரவில்லை. அப்படியே திண்ணையிலேயே தூங்கி விட்டான். யாரோ ஒருவர் என்னப்பா பசி மயக்கமா? உன்னைப் பார்த்தால் சாப்பிட்டு பல நாள் ஆனவன் போலத்தெரிகிறதே என்றார்.
அவன் தன் கதையைக் கூறி முடித்தவுடன் ‘கஞ்சி வரதப்பா’ என்ற வாசகத்துக்கு அவர் அழகாகப் பொருள் உரைத்துவிட்டு, நீ இவ்வளவு நேரம் வரதப்பனை நம்பியது வீண் போகாது; நானே கஞ்சி வார்க்கிறேன் என்று சொல்லி, தனது வீட்டில் சமைத்த உணவை இலையில் பரிமாறினார்.
ஆரல்வாய் மொழி என்ற அழகான ஊர் ஆராம்பொலி என்றும், ஐராவத நல்லூர் என்ற ஊர் அயிலானூர் என்றும் திருப்பறாய்த் துறை என்ற ஊர் திருப்ளாத்துறை என்றும் மாறுவது போல காஞ்சி என்பதும் கச்சி என்று மாறும் என்று விளக்கினார். அவனுக்கு ஒரு கடையில் நல்ல வேலையையும் வாங்கித் தந்தார்.
தமிழில் இந்த இரண்டு பழமொழிகளும் நிலைத்துவிட்டன.
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)
-சுபம்–