Date: 15 FEBRUARY 2018
Time uploaded in London- 7-56 am
Compiled by S NAGARAJAN
Post No. 4746
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2
ச.நாகராஜன்
5
சுபாஷித ஸ்லோகம் ஒன்று இருந்தும் இறந்தவர் யார் என்பதைச் சொல்கிறது :
ஜீவந்தோபி ம்ருத பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே! |
தரித்ரோ வ்யாதிதோ மூர்க: ப்ரவாஸி நித்யஸேவக: ||
ஸ்லோகத்தின் பொருள் : இருந்தாலும் இறந்தவர் தாம், இந்த ஐந்து பேர்கள்!
ஏழை, வியாதியுள்ளவன், முட்டாள், அன்ய தேசத்தில் வாசம் புரிபவன், எப்போதும் பிறருக்கு ஊழியம் செய்பவன் இந்த ஐந்து பேரும் ஜீவித்திருந்தாலும் கூட செத்ததற்கு ஒப்பானவர்கள்!
நீண்டகாலமாக தரித்ரனாக உள்ளவன், நீண்ட காலம் தீராத வியாதி உள்ளவன், அறிவே இல்லாத நிரந்தர முட்டாள், நீண்ட காலம் பிற தேசத்தில் வாழ்பவன், வாழ்நாள் முழுவதும் பிறருக்கு ஊழியம் செய்து கொண்டே இருப்பவன் ஆகிய இந்த ஐவரை எப்படி உயிருடன் இருப்பதாகச் சொல்ல முடியும்?!
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
6
அம்பலவாணக் கவிராயர் என்ற புலவர் அறப்பளீசுர சதகம் என்ற நூலில் நூறு செய்யுள்களை இயற்றித் தந்துள்ளார். வாழ்வாங்கு வாழும் போது அறிய வேண்டிய அற்புத நெறிமுறைகளைத் தரும் நூல் இது.
அதில் எண்பதாவது பாடலில் பயனில்லாதவை எவை என்று ஒரு பட்டியலைத் தருகிறார்; அதில் ஒரு வரி:
சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
என்று கேள்வி கேட்கிறார்.
மரண காலத்தில் உதவி செய்யாத புதல்வன் இருந்து தான் என்ன பயன்? அவன் இருந்தும் இறந்தவனே தான்!
7
மகாகவி பாரதியார் சிவசக்தியை நோக்கிப் பாடும் பாடல் உளத்தை உருக வைக்கும் ஒரு பாடல்!
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
என்று ஆரம்பிப்பவர்,
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
என்கிறார்.
சுடர் மிகும் அறிவு எதற்குப் பயன்பட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
மாநிலம் பயனுற வாழச் செய்யும் வல்லமை மூலம் அனைவரும் பயனுற வாழ வழி வகுக்கும் சுடர் மிகும் அறிவுடையவனே உண்மையில் வாழ்பவன். அதில்லையேல் அவன் நிலச் சுமையென வாழ்பவனே. அதாவது இருந்தும் இல்லாதவனே!
8
மொத்தத்தில் குடும்பத்திற்கும் பிறருக்கும் நல்ல முறையில் உதவி அவர்களை உயரத்தில் ஏற்றுபவனே வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் ‘வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’.
சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் கடலில் மாண்ட பாண்டிய மன்னனான இளம்பெருவழுதி பாடியது. அதில் நல்ல தமிழன் ஒருவனின் இலக்கணத்தைப் பாண்டிய மன்னன் சொல்வது நம்மை பிரமிக்க வைக்கும். பாடல் இது தான் :
உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமியருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே (பாடல் 182)
பாடலின் பொருள்:
இந்த உலகம் இருப்பதன் காரணம் இது தான்!
இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாலும் கூட அதைத் தனியே தான் ஒருவனே உண்ணமாட்டார். யாருடனும் வெறுப்பில்லாதவர்.பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி அது தீர்தல் பொருட்டு மடிந்திருத்தலும் இலர். புகழ் கிடைப்பதாக இருந்தால் தம்முடைய உயிரையும் கொடுப்பர். பழி வருவதாக இருந்தாலோ உலகம் முழுவதும் கிடைப்பதாக இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்; அயர்வே இல்லாதவர். இவ்வளவு பெற்றி உடையவராக தமக்கென்று முயலாமல் பிறர் பொருட்டென முயல்வார்.
அப்படிப்பட்டவர் இருப்பதால் அல்லவா இந்த உலகம் நிலை பெற்றிருக்கிறது!
பாண்டியனின் கூற்றின் சாரம் பிறர்க்கென வாழ்பவரால் அல்லவா உலகம் நிலை பெற்று இன்னும் இருக்கிறது!
9
இருந்தும் இறந்தவர் யார் என்று பல பெரியோர்கள் கூறியதை ஆராயப் புகின் நாம் பெறுவது பல உண்மைகளை!
ஆரோக்கியமான வாழ்வைக் கொண்டு, அற வழியில் பொருள் ஈட்டி, மன நிம்மதியுடன் மற்றவர்களுக்கு உதவி புரிந்து நீடு வாழ வேண்டும் என்பது தான் சாரம்!
***