Date: 16 FEBRUARY 2018
Time uploaded in London- 6-09 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4750
PICTURES ARE TAKEN from various sources.THEY MAY NOT BE DIRECTLY LINKED TO THE ARTICLE.THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 1
ச.நாகராஜன்
எனக்கு ஜோதிடம் தெரியாது. ஆனால் ஜோதிடக் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது உண்டு. நண்பர்களுடான விவாதங்களும் உண்டு.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் சென்னை செல்வதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் மனைவியுடன் ஏறினேன். வண்டி கிளம்பி விட்டது.எங்களுக்கு மிடில் பெர்த்தும் அப்பர் பெர்த்தும். மற்றவர்கள் ஒரே குடும்பம். சௌராஷ்டிரர்கள். கீழ் பெர்த், எதிர்ப் பக்கம் 3 பெர்த். ஆனால் வண்டி கிளம்பியவுடனேயே சாப்பாடு மூட்டையை விரித்து விட்டார்கள். எதிர்த்த பக்கம் கீழ் பெர்த்தில் அவர்களது சாமான்கள்.
என் மனைவிக்கு கீழே ஒண்டக் கூட இடமில்லை. இப்படியே திருச்சி வரை நிற்க முடியுமா?
மிகவும் இள வயதினரான அவரை ரிக்வெஸ்ட் செய்தேன். கொஞ்சம் இடம் கொடுத்து அட்ஜஸ்ட் செய்யுமாறு. ஹூம், முடியாது என்று கூறி விட்டார். எதிர்த்த பக்க இடம் – ஹீம், சாப்பிட்ட பின்னால் முடிந்த போது தான்! பிறகு ஒரு வழியாக நானே இறங்கி வந்தேன். நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டாம் சார்! நாங்கள் எங்கள் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறோம். கொஞ்சம் நகர்ந்தால் சங்கிலியை எடுத்து பெர்த்தை மாட்டிக் கொள்ளலாம்?
“ஹூம்,முடியாது. சாப்பிட்ட பின்னர் பார்க்கலாம்!”
நடந்ததைக் கவனித்த சக பயணிகள் இது அடாவடித்தனம் என்றனர்.
ஆனால் நண்பர் கண்டு கொள்ளவே இல்லை.
திடீரென்று அவரை உற்றுப் பார்த்தேன்.
“என்ன முறைக்கறீஙக?
“முறைக்கல!உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்றேன்.”
“என்ன!!?”
கொஞ்ச நாளைக்கு முன்னால உங்க காதிலே ஆபரேஷன் செய்தீர்களா? அது சக்ஸஸ்.இனி மேல் காது பற்றிய பிரச்சினையே உங்களுக்கு ஆயுசுக்கும் கிடையாது.”
“சார்!” என்று அவர் அலறி விட்டார்.
தன் குடும்பத்தினரை எழுப்பி விட்டார். அவர்களும் எனது பேச்சைக் கேட்டு பிரமித்தனர்.
“யாருக்குமே இது தெரியாது. ரகசியமாக வைத்திருந்தோம் சார்” என்றனர் குடும்பத்தினர்.
என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு அவரை சீட் முழுவதும் தந்து உட்காரச் சொன்னார் நண்பர் ஜேஎல்-! என்னை வலுக்கட்டாயமாக உட்கார்த்தி அவர் தரையில் உட்கார்ந்தார்.
எப்படி சார்? சொன்னீர்கள். என்னிடம் ஜாதகம் இருக்கிறது. ஆனால் நான் எதையுமே சொல்லவில்லையே!
இரவு 10 மணி வரை அரட்டை. அவரிடம் என் போன் நம்பர் முகவரியைத் தந்து “சென்னையிலிருந்து வந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்” என்றேன்.
படுக்கப் போகுமுன்னர்,”சார், என் மண்டை வெடித்து விடும் சார்! எப்படிச் சொன்னீர்கள் காதில் ஆபரேசன் என்று” என்று கேட்டார்.
“அவர் வலது கையில் இருந்த ஒரு மேட்டில் இருந்த ஒரு பழுப்பு மச்சத்தைக் காண்பித்தேன். இது முன்பு இல்லை. இப்போது வந்தது. இது காதில் ரண சிகிச்சையைக் குறிக்கும். அது பெரிதிலிருந்து சிறிதாகி வருகிறது. ஆபரேஷன் சக்ஸஸ். இது மறையும் போது முற்றிலும் குணமாகி விடுவீர்கள்.கையைக் கையை ஆட்டிப் பேசினீர்கள் இல்லையா, அப்போது கவனித்தேன், ஆபரேஷன் விஷயத்தை!” என்றேன்.
அவரும் அவர் குடும்பத்தினரும் என்னை பிரமிப்புடன் பார்த்தனர.
ஒரு பிரபல ஆங்கில மருத்துவ – கைரேகை நிபுணர் ஒவ்வொரு வியாதிக்கும் கைரேகைக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதியுள்ள சுவாரசியமான புத்தகத்தைப் படித்ததன் விளைவு இது!
நண்பர் ஜேஎல்- நெடுங்கால நண்பராக இருந்தார்.
கால ஓட்டத்தில் அவர் பெரிய வியாபாரி. நான் வேறு தொழில்.
ஒரு சின்ன இடத்தை இரண்டு மணி நேரம் பிடிக்க ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய முதல் முறை இது!
தப்பு தப்பு தான்! ( இன்னும் இரு பகுதிகள் வரும்)
***