தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)
Date: 24 FEBRUARY 2018
Time uploaded in London- 18-09
Written by London swaminathan
Post No. 4781
PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.
ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:
தேயம் போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா
ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா
அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்
நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா
-சாணக்கிய நீதி 11-18
பொருள்
தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!
தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.
நல்ல உவமை!
நாலடியார் பாடிய பதுமனார்
உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது
வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட
உய்த்தீட்டுந் தேனீக்கரி
பொருள்:
தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.
வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!
உடாஅதும்= தான் உடுக்காமலும்
உண்ணாது = தான் சாப்பிடாமலும்
தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்
கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும் செய்யாராகி
கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்
ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்
இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்
உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து
ஈட்டும் = சேர்த்து வைக்கிற
தேன் ஈ = தேனீயானது
கரி = இதற்குச் சான்று.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
–Subham —