Bharatiyar Drama- Directed by Raman, acted by Ramanan. Picture posted by N Seshadry
Date: 28 FEBRUARY 2018
Time uploaded in London- 5-48 am
Written by S NAGARAJAN
Post No. 4792
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 412 முதல் 420
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.
இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி
1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்
இமயம் எனது சிரம்
குமரி எனது பதம்
அமைந்திருக்கும் மாநிலங்கள்
யாவுமெனது மேனி
கமழும் நறும ணங்கள்
சிமயம் தொடுவளங்கள்
எமதுநாட்டில் யாவுமுண்டு
எனநிறைந்த நலங்கள்
சமரில் தீட்டும் வீரம்
குமரி மூட்டும் காதல்
சமமெனவே இரண்டினிலும்
சாதனைகள் மேவும்
எந்தன் பெருமை பாட
சிந்தை மகிழ ஆட
எந்தநாளும் எனைதுதிக்கும்
மைந்தருண்டு சூட
எண்ணற்ற பெருமைகள் எனக்கி ருந்தும்
எவருமே அந்நாளில் உணர வில்லை
திண்ணமாய் பண்புகள் நிறைந்தி ருந்தும்
திசைக்கொருவ ரானதால் பயனு மில்லை
அண்டைநா டுகளாக அருகி ருந்தும்
அவர்க்குளே பகைமையே வளர்த்தி ருந்தாத்
கண்டவர்க் கெந்நாளும் இடம்கொ டுத்து
கண்போன்ற தன்னவரை விலக்கி வைத்தார்
வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தால்
வாழ்ந்திட்ட காலமெலாம் எந்தன் மக்கள்
நிரந்தரச் சமாதானம் என்ப தேற்று
நிம்மதியாய் ஒருபோதும் வாழ்ந்த தில்லை
தரமற்ற மிகயெளிய கார ணத்தும்
தமக்குள்ளே மிகக்கொடிய சண்டை யிட்டு
உரம்வாய்ந்த தமதுடலை மண்ணில் சாய்த்தார்
உயிர்காக்கும் ஒற்றுமையின் வேர றுத்தார்!
அத்தகைய வீரத்தை அந்நாள் வந்தே
அள்ளியே சென்றமுக மதியர் மீது
மொத்தமாய் செலுத்தியே எதிர்த்தி ருந்தால்
மொகலாய சாம்ராஜ்யம் இங்கே ஏது?
எத்தர்களாய் வெள்ளையர்கள் வந்த போது
இவர்களே கனிகளென நாட்டைத் தந்தார்
சித்தமதில் உறுதியுடன் எதிர்த்த பேரோ
சிலரென்ப தாலவரும் அடிமை யானார்
எப்படியோ ஆங்கிலேயன் வந்த தாலே
என்வடிவம் ஒன்றாகி எழுந்து நின்றேன்
அப்பொழுது வரைதுண்டு துண்டா கத்தான்
அங்கங்கள் ஒடிபட்டு வீழ்ந்தி ருந்தேன்
எப்படிநான் சொல்லிடுவேன் என்மைந் தர்தாம்
ஏதோவொரு அந்நியனால் எனையு ணர்ந்தார்
இப்பொழு தேனுமிந்த அன்னை தன்னை
ஏற்றாரே எனயிதயம் நெகிழ்ந்தேன் யானே!
தேசம் அடிமைப் பட்டதாலே – இங்கே
தேசிய உணர்வு எழுந்ததுவே
பாசம் அகன்ற நெஞ்சமெனும் – அந்தப்
பாறை களில்நீர் சுரந்ததுவே
நாசம் புரியும் அந்நியரை – இந்த
நாட்டினர் யாவும் ஒன்றாகி
நேசம் மிகுந்து இணைந்திட்டால் – நாம்
நிச்சயம் வெல்வோம் என்றுணர்ந்தார்
பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்
Picture posted by Manion cgs from Bharatiyar Drama
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி
2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.
கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்
இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.
இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.
பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.
நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.
ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.
சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.
இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.
பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.
இவருக்கு நமது நன்றி.
இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069
சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/
பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069
நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.
****