இரண்டு கதைகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! (Post No.4891)
Written by London Swaminathan
Date: 7 April 2018
Time uploaded in London – 9-42 am (British Summer Time)
Post No. 4891
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
உயிர்கள் அனைத்தும் ஒன்றே; அவைகளில் வேற்றுமை இல்லை; அவரவர் செய்யக்கூடிய கர்ம வினைகளால் அவவர் நிலை மேம்படுகிறது அல்லது தாழ்வுறுகிறது என்று பகவத் கீதையிலும் புற நானூற்றிலும் (யாதும் ஊரே யாவரும் கேளிர்- புறம் 192). ஹிதோபதேசத்திலும் தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் கண்டோம். இதை விளக்க இரண்டு கதைகள் — உண்மைச் சம்பவங்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ளன.
1.ஆதி சங்கரர் மனீஷா பஞ்சகம் இயற்றிய கதை
2.சோமாசி நாயனார் கதை
அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்
உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம் –
—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்
பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)
என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.
பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதை விளக்கும் கதைகள் இவை. ஆன்மா என்பது எல்லா உயிர்களிடத்திலும் வேற்றுமை இன்றி ஒளிர்கிறது; வெளி வேஷத்தினால் அதன் ஒளி மங்காது; அதன் மேல் உள்ள சாம்பலை, புகை மூட்டத்தை அகற்றினால் போதும் என்பதை விளக்க இரண்டு உண்மைச் சம்பவங்கள்:
சிவ பெருமான் எந்த வேடத்திலும் வருவார்!
இந்துக்களின் புனித க்ஷேத்ரமான காசியில் கங்கை நதியில் குளித்து விட்டு, உலக மஹா தத்துவ ஞானி ஆதி சங்கரர் திரும்பி வந்து கொண்டு இருந்தார். ஒரு சண்டாளன், நான்கு நாய்களுடன் எதிர்த் திசையில் வந்தான். அவன் வருவதைக் கண்டவுடன் எல்லோரும் விலகிப் போ என்றனர். பொதுவாக புனிதர்கள் வரும்பாதையில் அவர்கள் குறுக்கிடவும் மாட்டார்கள்; அப்படியே வந்து விட்டாலும் விலகி வழி விடுவார்கள். இந்த சண்டாளனோ என்னை விலகச் சொல்கிறீர்களா? அல்லது என்னுள்ளே உறையும் ஆன்மாவை விலகச் சொல்கிறீர்களா? சூரிய ஒளி எந்த ஜலத்தில் பிரதிபலித்தாலும் ஒன்றுதானே? வெற்றிடம் என்பது எந்தக் குடத்தில் இருந்தாலும் வெற்றிடமே; அது இருக்கும் இடத்தினால் அது அசுத்தம் அடையாதே என்று தத்துவக் கருத்துகளை உதிர்த்தான். உடனே ஆதி சங்கரருக்கு அந்த சண்டாளன் சாதாரண ஆள் இல்லை. இறைவனின் வடிவமே- சிவ பெருமானே நான்கு வேதங்களை நான்கு நாய்கள் உருவத்தில் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்து மனிஷா பஞ்சகம் என்ற துதியைப் பாடினார்.
‘பண்டிதாஹா சமதர்ஸினஹ’– என்ற பகவத் கீதை வாக்கியத்துக்கு இலக்கணமாக அமைந்தது இது. பிறக்கும் எல்லா உயிர்களும் சமமே என்ற வள்ளுவத்தை விளக்கும் சம்பவம் இது. இதில் எதிரே வந்த ஆள், ஜாதிகளுக்கு எல்லாம் புறம்பாக வைக்கப்படும் சண்டாளனாக வந்தது இந்து மதத்தில் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜாதி ஒரு தடையில்லை என்பதைக் காட்டுகிறது.
புலையனாக வந்த சிவன்
‘மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளோ?’– என்ற நந்தனார் நாடக பாடல் எல்லோரும் அறிந்ததே. அங்கு புலையனாக வந்த நந்தனுக்கு சிவன் காட்சி தந்தார். சிவ பெருமானே புலையனாக வந்து காட்சி தந்தார் சோமாசி நாயனாருக்கு!
ஸோம யாகம் செய்தவரை ஸோமயாஜி என்பர். இது பேச்சுத் தமிழில் ஸோமாசி என்று மருவும். அப்படிப்பட்ட ஸோமயாகம் செய்த ஒருவர் அம்பல் என்னும் ஊரில் பிறந்தார். இது திருவாரூர் அருகில் இருக்கிறது. அவர் ஒரு யாகம் செய்யத் திட்டம் இட்டார். சிவ பெருமானை நேரில் அதற்கு வரவழைக்க வேண்டும் என்று ஆசை கொண்டார். இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை; சரியான சிபாரிசு இல்லாவிடில் அவரைப் பிடிப்பது கடினமே என்பதை உணர்ந்தார். எப்போதும் சிபாரிசுக் கடிதம் வேண்டும் என்றால் நேரடியாக அணுகாமல் நண்பருக்கு நண்பர் என்ற வழியில் செல்ல வேண்டும் என்பதை அவர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பின்பற்றினார். அவர் பெயர் சோமாசி நாயனார்; 63 நாயன்மார்களில் ஒருவர்.
சிவ பெருமானின் நெருங்கிய நண்பர் சுந்தர மூர்த்தி சுவாமிகள்; அவரைப் பிடித்து சிவனையும் பிடிப்போம் என்று ஒரு வழி கண்டு பிடித்தார். சுந்தரருக்கு மிகவும் பிடித்த தூதுவளைக் கீரையை அவர் வீட்டுக்கு தினமும் அனுப்பினார். திடீரென்று சப்ளையை நிறுத்தினார். விசாரணை துவங்கியது; இது வரை யார் கொடுத்தார்? அது ஏன் திடீரென்று நிறுத்தப்பட்டது? இடைத்தரகர் வியாபாரிகள் புகுந்து பதுக்கல் செய்து விலையை உயர்த்தப் பார்க்கிறார்களா? என்றெல்லாம் எண்ணி சுந்தரரின் மனைவி பரவை , ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தார். அதன் காரணமாக சோமாசி நாயனாரும் விசாரணைக்குப் பிரசன்னம் ஆயினார்.
இந்த அரிய சந்திப்பை சோமாசி நாயனார் பயன்படுத்தி யாகத் திட்டத்தையும் சிவன் வரவேண்டியதையும் வலியுறுத்தினார். சுந்தரரும் மசிந்தார்; இசைந்தார்; ஆனால் சிவனோ அப்படி எளிதாகப் பிடி கொடுக்காமல் தாமரை இலைத் தண்ணீர் போல பதில் அனுப்பினார்.
யாம் வருவோம்; ஆயினும் பக்தர்கள் கண்களில் மட்டுமே பளிச்சிடுவோம்- என்றார் சிவன்.
சுந்தரருக்கும் மகிழ்ச்சி; ஸோமாசிக்கும் சந்தோஷம்; செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. யாகத்தில் பெரும் கூட்டம்; கூட்டத்துக்கோ தலைவர் (சிவ பெருமான்) வந்த பாடில்லை; தலைவர் வந்து கொண்டு இருக்கிறார், வருகிறார், வருகிறார் என்ற அறிவிப்பும் ‘மைக்’கில் ஒலிக்கவில்லை. பலருக்கும் ஸோமாஸி நாயனார் கப் ஸா விட்டாரோ என்ற ஐயம் பிறந்தது; சந்தேகம் மலர்ந்தது. பொறுமையின்மை வளர்ந்தது.
பூர்ண ஆஹுதி நேரம் நெருங்கியது.
அந்த நேரத்தில் ஒரு புலையன் மனைவி மக்களுடன் வந்தான். இடுப்பில் கள் நிறைந்த குப்பி தொங்கிக் கொண்டு இருந்தது.
யாகம் செய்வோர் அனைவரும், ‘அபசாரம், அபசாரம்’ இந்தப் பக்கம் வந்துவிடாதே என்று அலறினர். அவனோ கேட்ட பாடில்லை; ‘ரோடு ரோலர்’ போல உருண்டு வந்தான். தக்க யாகத்தில் ‘புல்டோஸர்’ வந்த கதை ஆகிவிடுமோ என்று பதறிய ஐயர்கள் சிதறினர். அன்பெனும் வலையில் அகப்படும் மலையான சிவ பெருமான் ஸோமாஸி கண்களுக்குத் தெரிந்தார். நான்கு நாய்களும் நான்கு வேதமென அறிந்தார். துதி பாடினார்- ஆடினார்- கொண்டாடினார்-
பூர்ண ஆகுதிப் பொருள்களைப் புலையனுக்கு — புலையனாக வந்த சிவனுக்கு- வழங்கினார். சுந்தரருக்கும் சோமாஸிக்கும் சிவனாகக் காட்சி தந்தார். இப்போதும் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி அம்பலில் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.
புலையனும் சிவனே! சண்டாளனும் சிவனே; இறைவனுக்கு வடிவமோ ஜாதியோ இல்லை. எல்லோருமோர் குலம்; எல்லோருமோர் இனம் என்ற பாரதியின் வாக்கு எங்கும் ஒலித்தது.
—சுபம்—
My Old articles:–
“வசுதைவ குடும்பகம்”- Vasudhaiva … – Parivazhagan…
parivazhagan.blogspot.com/2015/…/2-vasudhaiva-kutumbakam.ht…
14 Jul 2015 – இதைச் செய் ; இதுதான் சரி ; இது மட்டுமே உண்மை; இவரே கடவுள் ; இது ஒன்றே வழி; என்று யாரையும் வற்புறுத்தியது இல்லை நம் சனாதன தர்மம். உன்னுடைய விருப்பத்திற்கே அனைத்தையும் விட்டு விடுகிறது. நீயே உன் இஷ்ட தெய்வத்தை ; நீயே உன் விருப்பமான …
பிறப்பொக்கும் எல்லா … – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/பிறப்பொக்கும்-எல்…
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458). best bharat mata. Written by London swaminathan. Date: 4 January 2016. Post No. 2456. Time uploaded in London :– 8-30 AM. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. “எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம். எல்லாரும் …