Written by LONDON SWAMINATHAN
Date: 31 JULY 2018
Time uploaded in London – 7-37 AM (British Summer Time)
Post No. 5274
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
“அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது”
என்று பாடிக்கொண்டே வந்தாள் பேரழகி!
யாரிடம்?
புத்தரின் முக்கிய சீடரான உபகுப்தாவிடம்!
அவரோ ஏகாந்த தியானத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்.
உடனே இந்தப் பெண்
‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று பாடத் தொடங்கினாள்; அது மட்டுமல்ல;
“சுவாமிஜி, என் தொழிலே வேறு! என்னிடம் புத்தர் சொன்ன நிர்வாணம் பற்றிப் பேசாதீர்கள்; எனக்கு வேறு நிர்வாணம் எல்லாம் நன்கு தெரியும் ; உமக்கும் கற்பிப்பேன் என்றாள்.
உப குப்தருக்கோ ‘போதும் போதும்’ என்று ஆகிவிட்டது. ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று ஒரே ஓட்டமாக ஓடினார்.
அவளோ விடவில்லை; “சுவாமி? எப்போது வருவீர்கள் என்னிடம்?” என்று கேட்டுக்கொண்டே பின்னே வந்தாள்
“நங்காய்! பொறுத்திரு! ஒரு நாள் நான் வந்து உன்னைத் திருப்திப் படுத்துவேன்” என்றார்.
அதைக்கேட்டவுடன் அவள் புளகாங்கிதம் அடைந்தாள்; ஏதோ உபகுப்தருடன் படுத்துப் புரண்டதாகக் கனவு கண்டாள்.
அட! பெரிய சந்யாசியையும் பிடித்துவிட்டேனே!! என்று தன் உடலையே தான் புகழ்ந்து கொண்டாள்!
ஆண்டுகள் உருண்டோடின.
வசந்த கலாலங்கள் போய் குளிர் காலமே மிஞ்சியது அந்தப் பெண்ணுக்கு! காமக் கடலில் உழல்வோருக்கு வரும் அத்தனை வியாதிகளும் அவளைப் பீடித்தன. இப்பொழுது அவள் கையைப் பிடிக்கக்கூட ஆள் இல்லை. நா வறன்டது; தோலும் சுருண்டது; முடிகள் விழுந்தன; பிடிகள் தளர்ந்தன. உடல் முழுதும் துர் நாற்றம்.
“போதாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம்” என்றபடி அரசுக்கு எதிராகப் பெரும் துரோகம் செய்தாள். அவள் கை, கால்களை வெட்டும் படி அரசன் கட்டளையிட்டான். அதுவும் போயிற்று.
‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்று வாடி வதங்கினாள். திடீரென்று முன்னொரு காலத்தில் உபகுபதர் சொன்னது நினைவுக்கு வந்தது சந்யாஸிகள் பொய் சொல்ல மாட்டார்களே என்று நினைத்த தருணத்தில் யாரோ தலையை வருடினார்.
உப குப்தர் அங்கே நின்றார்!!
கனவா நனவா என்று வியந்தாள்.
“சுவாமி! தொடாதீர்கள், தொடாதீர்கள்.
உடல் முழுதும் வியாதி. துர் நாற்றம்”.
“அன்றோரு நாள் ஆடை அலங்காரங்களுடன். அணிகலன்களோடு உம்மை வருந்தி வருந்தி அழைத்தேனே! அப்போதெல்லாம் வராதபடி இப்போது வந்தீர்களே! என்ன பயன் உங்களுக்கு”? என்றாள்.
உபகுப்தரின் கருணைப் பார்வை அவள் மீது விழுந்தது.
அவளது காம வெப்பம் அடங்கி கருணை வெள்ளம் பாய்ந்தது.
உபகுப்தர் சொன்னார்:
“நீ எது கவர்ச்சி என்று இப்போது வரை நினைத்தயோ அது கவர்ச்சி அல்ல. உன் கண்களில் ஒளிவிடுகிறதே!—அதுதான்— அந்தக் கருணைதான் கவர்ச்சி; வெளிக் கவர்ச்சியெல்லாம் கவர்ச்சி ஆகாது” – என்றார்.
“சுவாமி: இன்று முதல் நான் உங்கள் சிஷ்யை! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சினாள்.
“அதற்குத்தானே நான் முன்னர் வாக்குறுதி அளித்தபடி திரும்பி வந்தேன்”– என்றார்.
இனி பேசுவதற்கு ஒன்றுமிலையே!
சும்மா இரு! சொல் அற!
—சுபம்–